My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

29.12.11

நேத்திருந்தான் இன்னைக்குச் செத்தான்


சுரைக்காய் கொடியேறி
கூரையெல்லம் சுற்றிவர
வெள்ளைச்சுரைப் பூவெல்லாம்
வெண்பனியில் மினுக்கமிட
குடிசை மண்ணடுப்பில்
கைநீட்டிக் குளிர்காய்ந்து
காத்திருந்தேன் ஆண்டைக்கு.
வெள்ளி முளைத்த பின்னே
விடிந்து தொலைக்குமுன்னே
மண்வெட்டி தோளேற்றி
மடைமாறப் போகவேணும்.
ஆண்டையின் கனைப்புக்கு
அமைதியாய்க் காத்திருந்தேன்.
வெடிப்பு மண் சுவரில்
வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
வெறித்தே எனைப் பார்க்கும்
எனது பறை.

மார்கழிப் பனிக்குளிரால்
மார்பிலே சளிபிடித்து
அன்றாடம் இழுத்திருக்கும்
அழகுநாய்க்கன் செத்துவிட்டால்
அடிவாங்கத் துடிக்கும்
எனது பறை.

குந்தவும் நேரம் வேண்டாம்
குடிக்கவும் கஞ்சி வேண்டாம்.
நாளெல்லாம் சாராயம்
நாலுகட்டுச் சுருட்டுபோதும்.
'நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்
நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்'
தாளமேதும் தவறாமல்
தனித்தொலிக்கும்
எனது பறை.

சேரியெல்லாம் சேர்ந்திருந்து
சேர்த்துவைத்த மொத்தச் சொத்து.
ஏழிலே நாலு பறை
மீதம் மூன்றும் தப்பட்டை.
அத்தனையும் சேர்ந்துவிட்டால்
அதகளம் தான் பறக்கும்.
'நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்
நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்.'
தாளமேதும் தவறாமல்
தனித்தொலிக்கும்
எனது பறை.

பன்றியொன்று பதறியோட
பாதை பார்த்து நடந்துவந்த
ஆண்டை கனைத்துச் சொன்னான்:
"அழகுநாய்க்கன் செத்துவிட்டான்
மண்வெட்டி எடுத்து நீயும்
மடை மாறப் போகவேண்டாம்
பத்துபேரைக் கூட்டிக்கொண்டு
பறையடிக்க வந்துவிடு.
நாளெல்லாம் சாராயம்
நாலுகட்டுச் சுருட்டு
ஆளுக்குப் படியரிசி
அளந்துதான் நான் தருவேன்.
சுடுகாடு போகும்வரை
சுணங்காமல் அடிக்கவேணும்."

'நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்
நேத்திருந்தான்
இன்னைக்குச் செத்தான்.'
காய்ச்சிப் பறையடிக்க
கைகள் தினவெடுக்க,
வெடிப்பு மண் சுவரில்
வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
வெறித்தே எனைப் பார்க்கும்
எனது பறை.

உள்ளிருந்து கோபத்தோடு
வெளியில் வந்தான் எனது மகன்,
ஆண்டையும் அதிர்ந்துபோக
அள்ளித் தெளித்த வார்த்தை :
"சேரியெல்லாம் சேர்ந்திருந்து
சேர்த்துவைத்த மொத்தச் சொத்து.
ஏழிலே நாலு பறை
மீதம் மூன்றும் தப்பட்டை.
சீச்சீ இனி எங்கள் பறை
சாவுக்கேதும் அடிக்காது.

ஒட்டிப்போன வயிறுக்காக
ஒண்ட ஒரு குடிசைக்காக
ஊருக்குள் நுழைந்து போக
உட்கார்ந்து சமமாய்ப் பேச
தோல்செருப்பை கால் அணிந்து
தெருவிலெல்லாம் நடந்துபோக
தனிக்குவளை தீயிலிட்டு
தேனீரைக் கூடிப் பருக
எங்கள் பறை இனி ஒலிக்கும்
எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்.
எட்டுத் திக்கும் எதிரொலிக்கும்.
எங்கள் பறை இனி ஒலிக்கும்."

அதிரும் பேச்சு கேட்டு
ஆண்டையும் ஓடிப்போனான்.
காய்ச்சிப் பறையடிக்க
கைகள் தினவெடுக்க,
வெடிப்பு மண் சுவரில்
வெட்டியாய்ச் சாய்ந்திருந்து
வெறித்தே எனைப் பார்க்கும்
எனது பறை
புதிய பறை!!

2 comments:

Sankar Gurusamy said...

வீரியமான கவிதைவரிகள்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

பாசிஸ்ட் said...

என்ன சொல்லவென்று தெரியவில்லை. அழுத்தமான வரிகள்... நேற்றிருந்தான் இன்றைக்கு செத்தான் என்று இனிமேல் பறை ஒலிக்காது, எம் உரிமை நீ மறுத்தால் உன் கொலை அறுக்க பறை ஒலிக்கும் என்று வீரமாய் முழங்கடா மகனே!!

Post a Comment