My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

27.3.12

நாடுபூரா நக்சலைட்டு



நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
அணு உலை வேண்டாம்னு
அட்டையில எழுதிவச்சா
அவன்தாண்டா நக்சலைட்டு.
கூடங்குளம் ஆபத்துன்னு
கூடிநின்னு பேசினாக்கா
கும்பலோட நக்சலைட்டு.
'ஙே'ன்னு நீ முழிச்சாலும்
கொய்யால நீ நக்சலைட்டு.
திருதிருன்னு முழிச்சாலும்
தவறாம நக்சலைட்டு.

கடைய மூடச் சொல்லலையே.
கண்ணாடிய ஒடைக்கலையே.
கத்தியில்ல ரத்தமில்ல...
அட, ஆயுதமும் ஏதுமில்ல...
ஆனாலும் நக்சலைட்டு.
இடிந்தகரையில் வீடிருந்தா
இப்போது நீ நக்சலைட்டு.
உண்ணாவிரதப் பந்தலிலே
உண்ணாம நீ இருந்தா
உடனடியா நக்சலைட்டு.
பால்குடிக்கும் பாப்பாவும்
பள்ளிக்கூடப் பிள்ளையும்
பயங்கரமான நக்சலைட்டு.
நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.

அரசாங்கம் சொல்லுறத
அப்படியே ஏத்துக்கிட்டா
உலகமகா உத்தமன் நீ.
உண்மையான இந்தியன் நீ.
தரமான தமிழன் நீ.
தலை நிமிர்ந்த மனிதன் நீ.
எதிர்த்து நின்னு ஒருவார்த்தை
ஏனென்று கேட்டாலும்
நீதாண்டா நக்சலைட்டு.
நாலு பேரு காறித்துப்பும்
நாதியத்த நக்சலைட்டு.

நல்லவனா இருக்கப்பாரு.
நாலு பேர மதிக்கப்பாரு.
கோஷமெல்லாம் போட்டுக்கிட்டு
கொடியெல்லாம் தூக்கிக்கிட்டு
போலீசில் அடிவாங்கி
பொறுக்கியாகிப் போகாதே.
நாட்டை நீயும் மதிக்கணும்.
நாமும் நல்லா இருக்கணும்.
கவருமெண்டு சொல்லுறத
காதுகொடுத்துக் கேக்கணும்.

புழுத்துப்போன அரிசியத்தான்
ரேஷனிலே வீசினாலும்
பொங்கித் திங்கப் பழகிக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
தெரு லைட்டு இல்லைன்னா
தடவி நடக்கப் பழகிக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
குடிக்கத் தண்ணி இல்லைன்னா
கொஞ்ச நாளு பொருத்துக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!
கொசுத்தொல்லை இருந்தாக்கா
கொசு அடிக்கக் கத்துக்க.
புதுசு ஒண்ணும் இல்லையே?!

கவலையெல்லாம் மறக்கணும்னா
கிரிக்கெட் பார்க்கக் கத்துக்க.
சிந்தனையும் சிக்கலானா
சீரியல் பார்க்கக் கத்துக்க.
சினிமா ரசிக்கக் கத்துக்க.
தினமலரை நீ படிச்சி
தினம் அறிவை வளத்துக்க.
வாழத்தானே பொறந்திருக்க?
வாழ்ந்துபாக்கக் கத்துக்க.
நாடு போற போக்கோட
நைசா போகப் பழகிக்க.
ஏன், எதுக்கு, எப்படின்னு
எடக்குமொடக்கா கேட்டுப்புட்டு
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டு
பொழப்பையே நீ கெடுத்துக்காத.
பொறுக்கி பேரும் எடுத்துக்காத.

எவ்வளவு உரைச்சாலும்
எட்டி ஒதைச்சிக் கொன்னாலும்
நக்சலைட்டு நக்சலைட்டு...
நாடுபூரா நக்சலைட்டு.
நாடே கெட்டுப் போகுது
நக்சலைட்டா ஆகுது!!
நல்லவனா நக்சலைட்டா?
நீயே முடிவு பண்ணிக்க.
புலம்பாம அலும்பாம
போத்திக்கிட்டு படுத்துக்க!!

18.3.12

எனது முகநூலிலிருந்து... 4






## ‘சாகறதுக்கு முன்னால ஒரு முறை சரவண பவன்ல சாப்பிட்டு சாகணும்’ அப்படீன்னு ரொம்ப நாளா என்னோட தாத்தா பொலம்பிக்கிட்டே இருக்காரேன்னு ஒரு நா அழைச்சிக்கிட்டு போனேன். சுத்திலும் பார்வையை மேயவிட்டவர் ஒரு நெய்ப்பொங்கலுக்கு ஆர்டர் கொடுத்தார். நம்ம வீட்டுல இருக்குற சின்ன குழம்புக் கரண்டியில வழிச்சிக் கவுத்து வச்ச அளவுக்குத்தான் பொங்கல் ‘தத்தியுண்டு’ சைசில் தட்டில் ஒரு மூலையில் இருந்தது. ஒரு கப்பில் சாம்பார். ஒரு கப்பில் சட்டினி. தாத்தா கட்டுப்பட்டியான கிராமத்து விவசாயி. கூச்ச நாச்சம் படாம ஒரே வாயா அள்ளிப்போட்டுக்கிட்டு, ‘டேய், இங்க எனக்கு ஆங்காது; பசி அடங்காது. வேற எடத்துக்குப்போகலாம்’ அப்படீன்னு சொல்லிட்டு என் பதிலுக்கும் காத்திருக்காம எழுந்து வெளியில போய்ட்டாரு. சுத்தி உக்கார்ந்திருந்தவங்க எங்களையே வேடிக்கை பார்த்தாங்க. பாக்கட்டுமே. ஒரேஒரு நெய்ப் பொங்கலுக்கு நாப்பதுச் சொச்சம் (டேக்சோட) குடுத்துட்டு, இன்னொரு 'உயர்தர சைவ உணவா இல்லாத' ஓட்டலாப் பார்த்து தேடிப் போனோம்!




## மிஸ்டர் ராஜபக்சே,

நித்தி - ரஞ்சிதா ஜோடி வீடியோ ஒட்டுவேலைன்னு அமெரிக்கா நிபுணருங்க ஆராய்ஞ்சி கண்டுபிடிச்சிட்டாங்களாம். நல்லவரு நித்தி அறிக்கை வுட்டு இருக்கான். நீங்களும் நித்தியா மாமாவை காக்கா புடிச்சா, சேனல் 4 விடியோவெல்லாம் டுபாக்கூர்ன்னு அமெரிக்காவுல இருந்து ஒரு சர்டிபிகேட் வாங்கிக் குடுத்துடுவான். நன்றி!

காப்பி to :
1. மன் மோகன் சிங்.
2. சோனியா காந்தி & ஃபேமிலி.
3. காங்கிரஸ் கூடாரம்.
4. சத்திய மூர்த்தி பவன், தமிழ் நாடு.
5. 'தி ஹிந்து' பத்திரிக்கை
6. சுப்ரமணிய சுவாமி.
7. சோ ராம்சாமி


## "டெல்லிக்குப் போகணும். எவ்வளவு செலவாகும்? அங்க போயி, பிரணாப் மூஞ்சில செருப்பு வீசினா, என்ன மிஞ்சிப்போனா ஒரு 420 கேஸ் போடுவானுங்களா?..." பக்கத்து இருக்கையில் கிராப்பு வெட்டிக்கொண்ட ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.

அந்த கடைக்குள்ளிருந்த அத்தனை பேருக்கும் சுரீரென்றது!!


## ஒரு குறவன் அல்லது குறத்தி, ஒரு டவுன் பஸ்ஸில் ஏறிவிட்டால், அவர்களுக்கு பொதுமக்கள் கொடுக்கும் அவமரியாதை மிகக் கேவலமாக இருக்கும்.. "டேய், யாரைக் கேட்டு வண்ணியில ஏறினே? எறங்குடா மொதல்ல" என்று கண்டக்டர்கள் டிரைவர்களே இறக்கிவிட்டுவிடுகின்றனர். ஏனென்று கேட்டால், 'சரியாக சில்லரை கொடுக்க மாட்டார்கள்; ஏமாற்றுவார்கள்' என்று சாக்குப்போக்குச் சொல்கிறார்கள். சினிமா தியேட்டர்களிலும் இதே கதைதான். குருவிக்காரர்கள் பிச்சை எடுப்பதில்லை. திருடுவதில்லை. தன்மானத்தோடும், தம் கலாச்சார உணர்வோடும் இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் - மனிதர்களாக. நம் மூதாதையர்களாக!!


## தாலாட்டு, தப்பட்டை, பறை, ஏற்றப் பாட்டு, எசப்பாட்டு, ஒப்பாரி... இவைகளை மட்டுமே கேட்டு, வளர்ந்து, உலகையே தன் இசை மழையால் நனையவிட்டார், இளையராசா. எந்த ஒரு மேற்கத்திய இசையையும் காப்பியடிக்காமல், தன் மனதளவில் தோன்றிய மெட்டுக்களால், நம் மனதுக்குள் புகுந்துகொண்ட இசையமைப்பாளர் - ஒரு விஞ்ஞானப் பரிமாணத்தையும் நமக்கு உணர்த்துகிறார். எப்படியென்றால் :

சட்டமும், நீதியும், விஞ்ஞானமும், கணிதமும், பூகோளமும், இசையும் தங்கள் இனத்துக்கு மட்டுமே உரித்தானது என 'பீலா' விடும் பிராமணர்கள், இசையை காலங்காலமாய் காவிரித் தண்ணீரில் மூழ்கி இடைவிடாது சாதகம் செய்து, சென்னை மியூசிக் அகாடமியிலிருந்து, திருவையாறு தியாகப் பிரும்ம உற்சவம் வரை, காது கிழியக் காக்காய் போலக் கத்தும் எண்ணிலடங்கா இசைச் செம்மல்கல்கள், ஏன் பாமர மக்கள் ரசிக்கும் சாதாரண மெட்டைக்கூட இன்றுவரை இசைக்க முடியவில்லை?!

ஏனென்றால் பிராமணர்கள், இசையென்பது 'தியாகையருக்காக மட்டுமே' எனும் அளவில் நிறுத்திக் கொண்டார்கள்.

'இசை மக்களுக்காக மட்டுமே' எனும் அளவில் இளையராசா தன் இசை மாலையை இன்னும்கூடத் தொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.

இளையராசாவின் கால் தூசிக்குச் சமமாகாது பிராமணர்களின் கர்னாடக இசை!!

காக்கைகளுக்கும் குயிலுக்கும் உள்ள வேறுபாட்டை நாம்தான் கண்டுகொள்ளவேண்டும்




## ராகுல் காந்தி விரும்பினால் நள்ளிரவு 12 மணிக்கு கூட பிரதமர் ஆக முடியும்: மத்திய மந்திரி ஜெய்ஸ்வால்.

வெள்ளைக்காரங்கிட்ட நடுராத்திரி 12 மணிக்கு இந்தியா சுதந்தரம் வாங்கியபோதே மக்களோட சுதந்தரம் பறிபோயிடுச்சி. அதனால நடுராத்திரி 12 மணி அதிர்ச்சி என்பது எங்களுக்கு ஒண்ணும் புதுசு இல்ல. நடத்துங்கடா டேய்!

## போன கவர்மெண்டு பவர்கட்டுல ஆற்காட்டாரை போட்டு அடிச்சி நொறுக்கி, ஊர் ஊரா போய் மைக் போட்டு பேசி, அவரை 'பெண்டு' எடுத்தாங்க ஜெயலலிதா. இப்ப அதே பவர் கட்டுக்கு கூடங்குளம் தொறக்காததுதான் காரணம் அப்படீன்றாங்க. இப்ப இருக்கிற நெலமையப் பார்த்தா, ஆற்காட்டாருக்கு அண்ணா சாலையில வெங்கலச்சிலையே வச்சி கையெடுத்து கும்பிடலாம்!!

## அணுஉலை 10 மீட்டர் ஒசரத்துக்கு மேல கட்டப்பட்டிருக்கு. அதனால சுனாமியால ஒண்ணும் செய்ய முடியாதுன்னு  நாராயணசாமியும், கோமாளி கலாமும் கூவராங்களே... 10 மீட்டருக்கு மேல அலை வராதுன்னு இந்த வில்லேஜ் விஞ்ஞானிங்க எப்ப கண்டுபிடிச்சாங்க?!

## ஆஃப்டர் ஆல் மெட்ராஸ்ல கொசுவைக்கூட கன்ட்ரோல் பண்ண முடியாத பிக்காளிப்பசங்க, கூடங்குளத்துல கதிர் வீச்சை கன்ட்ரோல் பண்ணிடுவாங்களாம். நம்பிட்டோம்டா!!

## அணுக்கழிவுகளை சுமார் 48 ஆயிரம் ஆண்டுகள் வரை பாதுகாக்கப்படவேண்டும். ஒரு ஆண்டு குறைந்தாலும் பேராபத்துதான். 'டெக்னிகல்லி ஸ்பீக்கிங்'... இந்தியாவுல இது நடக்குமா? தார் ரோடு போட்டாலே பத்து நாளுக்குள்ள பல் இளிக்குது!! கலாம் நமக்கு நல்லா குல்லா போட்றாருன்னு நெனைக்கிறேன்.

## ஜனங்க வசிக்கிற இடத்துலதான் அணுஉலை வைக்கணுமா? டெல்லி ராஷ்டிரபதி பவன், கிண்டி கவர்னர் மாளிகை... இங்கல்லாம் ஆள் நடமாட்டமே இல்லாம, ஏக்கர் கணக்குல காலி இடம் இருக்காமே? அங்க வைக்கக்கூடாதா?

## போயும் போயும் புயல் நிவாரணம் குடுக்கறதுக்கே 'புயல் நிவாரண நிதி' கேட்டு மக்கள்கிட்ட கையேந்தி, பிச்சை எடுக்கிற கவர்மெண்ட்டு, நாளைக்கு ஒரு கதிர்வீச்சு விபத்து நடந்தா கோடிகோடியா நிவாரணம் கொடுக்கவேண்டியிருக்குமே? அப்போ பிச்சை போடவும் ஆள் இருக்க மாட்டாங்க, நிவாரணம் வாங்கவும் ஆள் இருக்க மாட்டாங்க. கவர்மெண்ட்டு மட்டும்தான் இருக்கும்!!




## "முதலாவதாக தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரமைக்க வேண்டும். தமிழகத்தின் பொருளாதாரமே முற்றிலும் தடம் புரண்டு கிடக்கிறது. அதை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
கடந்த 5 ஆண்டாக தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலைமை உள்ளது. இதை சீர்படுத்தி வளர்ச்சி பாதையில் தமிழகத்தை கொண்டு செல்ல பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தொடர்ந்து தமிழத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரிப்படுத்த வேண்டும். விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும். இப்படி நிறைய முன்னுரிமை பணிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக செயல் படுத்துவோம்."

தேர்தல் முடிவு வந்து, பதவி ஏற்புக்கு முன், ஜெயலலிதாவின் பேட்டி.

'ஜெலூசில்' முழு பாட்டிலை அப்படியே முழுங்கிடுங்க. அப்பத்தான் வயிறு எரியாது!!!

## "பீதி: ஜெர்மானியர் ஹெர்மானின் வாக்குமூலத்தால், அணு உலை போராட்டத்தை பாதியில் விட்டு விட்டு, தப்பியோட போராட்டக் குழுவினர் சிலர் முடிவு செய்து உள்ளனர். சங்கரன்கோவில் தேர்தல் முடிந்ததும், உதயகுமார் கும்பல் மீதான நடவடிக்கை, அதிரடியாக துவங்கும் என்றும், கூடங்குளம் போராட்டம் ஒரேநாளில் முடிவுக்கு வரும் என்றும், போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன."

இந்த 'அதிமேதாவி' செய்தியை வெளியிட்ட பத்திரிக்கையின் பெயரை நீங்கள் சரியாகச் கண்டுபிடித்தால், நீங்கள் கண்டிப்பாக அந்தப் பத்திக்கையை வாங்காதவர்களில் ஒருவராகத்தான் இருப்பீர்கள்!!!

## வாஷிங்டன்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகக் கூர்மையான அறிவுடையவர், மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி காண்பதில் முனைப்பாக உள்ளார் என, அமெரிக்காவின் பிரபல அரசியல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பிளைட்டுலயே அமெரிக்காவுக்கு ஏத்தி அனுப்பிடறோம். ஏதாவது ஒரு ஸ்டேட்டுக்கு கவர்னாராக்கி அழகு பாருங்களேன்?! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!!!

## சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்காது என்றும், எந்த கட்சியையும் எதிர்க்காது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா. பாண்டியன்.

அதாவது... சமுதாயத்தைக் கொன்று போடுபவர்களை நாங்கள் எதிர்க்கவும் மாட்டோம்; அதே சமயத்தில் ஆதரிக்கவும் மாட்டோம். புரிஞ்சுதா? பொது மக்களே..., மொதல்ல நல்ல சிந்தனையாளரா இருக்கக் கத்துக்கங்க!!!

## பலமுறை கூறிவிட்டேன். சசிகலா பேசுவது யாருக்கும் கேட்பதில்லை. சப்தமாக பேசும்படி கூறியும் அவர் பொருட்படுத்தவில்லை. எனக்குத் தமிழ் தெரிந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பது புரிகிறது. அதற்காக என் கேள்வியும் புரியவில்லையா? - சசிகலா மீது நீதிபதி அதிருப்தி.

ஜட்ஜு சார், தமிழ் தெரியுது, ஆங்கிலம் தெரியுது... இதெல்லாம் முக்கியமில்லை. 'டெக்னிக்' தெரியணும். எப்படில்லாம் ஜகா வாங்கணும், எப்படில்லாம் டிமிக்கி குடுக்கணும், எப்படில்லாம் அல்வா குடுக்கணும், எப்படில்லாம் ஆக்ட்டு குடுக்கணும்னு இந்த மேன்மை தங்கிய மேடத்துக்குத் தெரியும். ஜட்ஜு... இன்னும் எவ்வளவோ இருக்கு. பாருங்க இன்னும் எப்படியெல்லாம் உங்களை புலம்ப வைக்கப்போறாங்கன்னு!!!

## வாஷிங்டன்: "ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள், கச்சா பெட்ரோலிய எண்ணெய்க்கு அந்த நாட்டைப் பெரிதும் நம்பியிருக்காதீர்கள்" என்று நாம் கூறியதன்படி இந்தியா நடக்கத் தொடங்கியிருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியிருக்கிறார்.

இருக்காதா பின்னே?! இந்தியாவின் அரசியல் நிர்வாக அலுவலகம் வெள்ளை மாளிகை எனும்போது, நங்கள்ளாம் ஈனம், மானம், சூடு, சொரணை பார்க்க முடியுங்களா? வேற எதுனா வேலை இருக்கா சொல்லுங்க. உங்கவீட்டு கக்கூஸ் கழுவனுமா? சொல்லி அனுப்புங்க. தலப்பா கட்டி தாடி வச்ச ஒருத்தர் உடனே அங்கே ஆஜர் ஆகிடுவார்!!

## சிறுதாவூர் பங்களா மதிப்பீடு, 5 கோடியே 40 லட்சம் ரூபாய் என்பது தெரியுமா?

"தெரியாது."

பையனூர் பங்களா மதிப்பீடு, ஒன்றே கால் கோடி ரூபாய் என்பது தெரியுமா?

"தெரியாது."

ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தின் மதிப்பு, 6 கோடியே 40 லட்சம் ரூபாய் என்று தெரியுமா?

"தெரியாது."

'இப்படியும் பதில் வரலாம்.'

உங்கள் பெயர் என்ன?
"தெரியாது!!!!"

ஜட்ஜ் ஐயா, வேர ஊருக்கு மாத்தலாயிடுங்க. ரெம்பப் பாவம்யா நீங்க!!

## நல்ல வேளை. தமிழகத்துக் காவல்துறை வாடகைக்கு குடியிருப்பவர்களின் போட்டோக்களை மட்டுமே கேட்கிறது. அனைவரின் கைரேகைகளைக் கேட்டிருந்தால் சுயமரியாதை என்னாவது?!

##கூடங்குளம் அணு மின் உலை மிகவும் வலுவானது, பாதுகாப்பானது. ஒரு விமானமே வந்து மோதினாலும் அணு உலைக்கு ஒன்றும் ஆகாது, நொறுங்கிப் போகாது -  நாராய்ன்ச்சாமி.

ஓ..., பாத்துடுவோம். ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி மோதிக்காட்டு. நல்லா மோதிக்காட்டு. அப்படி மோதும்போது நீ வேண்ணாக்கூட அந்தக் கட்டடத்துக்குள்ள இருந்துக்க, யாரு வேண்டாம்னது? (பயபுள்ளைக்கு பொய் சொல்லும்போது, வாய் எப்படியெல்லாம் கொளறுது பாரு!!)

## இது எல்லாமே இன்றைய செய்திகள் :

விழுப்புரம் : ரயில்வே துறையில் ஏற்படும் தொடர் விபத்துகளைத் தவிர்க்க, விழுப்புரம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

வடசென்னை புதிய மின் நிலையத்திற்கு, உத்தரப் பிரதேசத்திலிருந்து லாரியில் கொண்டு வரப்படும் மின் உற்பத்திக் கருவி, விபத்தின்றி பத்திரமாக வந்து சேர வேண்டும் என, மின் துறை அதிகாரிகள் சிறப்பு பிரார்த்தனை நடத்துகின்றனர்.

ஈரோடு, அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து எம்.எல்.ஏ., ரமணிதரன், டி.ஆர்.ஓ., கணேஷ் ஆகியோர், கடவுளுக்கு பூஜை பொட்டு புஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டனர்.

அறிவியல், டெக்னாலஜி மீது நம்பிக்கை வைக்காத அரசு, இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில், கடவுளுக்கு தேங்காய் உடைத்துக்கொண்டிருக்கிறது. வெட்கக்கேடு! இந்த லட்சணத்தில், இந்த 'பயந்தாங்கொள்ளி' அரசுகள் கூடங்குளத்தைத் திறந்துவைத்தால், அதன் பாதுகாப்பையும் கடவுளிடத்திலேயே கொடுத்துவிடுவார்கள்!!

நாம் அரசின்மீது நம்பிக்கை வைக்க வேண்டுமா அல்லது கடவுளின்மீதா?!

## கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும்: நாராயணசாமி .
இதையெல்லாம் வீராப்பா சொல்லுவாரு.
'சானல் 4 வெளியிட்ட வீடியோவைப் பத்தி உங்க கருத்து என்ன?' அப்படீன்னு கேட்டுப் பாருங்க. 'நோ கமண்ட்ஸ். அன்னையைக் கேட்டுத்தான் சொல்லமுடியும்.' அப்படீம்பாரு. வாய்லயே வச்சி குத்தணும்போல தோணுமா தோணாதா?!

11.3.12

குழந்தைப் பாராயணம் (கான்வென்டுப் படலம்) :



சோதனை செய்யவும்.
செய்முறை :
கை கால்களை உதைத்து பாலுக்கு அழும் கைக் குழந்தையின் முகத்தருகில் சிட்டிக்கையிட்டு இடம் வலமாய் கையை ஆட்டி சோதனை செய்யவும்.
சிட்டிக்கை யொலிகேட்டு சிந்தனையோடு உங்கள் கை விரல்களையே பார்த்தால்
கைக் குழந்தை இப்பொழுதே கல்வி பயிலத் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்பொழுது நீங்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

ஏபிசிடி வடிவில் பிளாஸ்டிக் எழுத்துக்களை வாங்கவும். பன்னாட்டுக் கம்பெனியின் டிரேட் மார்க் 'நான்-டாக்சிக்' பொம்மைகளையே வாங்கி அடுக்கவும்.
எழுத்துக்களைப் படிப்பதற்கு பதில் வாயால் கடித்து விழுங்கினால் கூட அது விஷத்தன்மை இல்லை என்பது அதன் தனிச் சிறப்பு.ஆனால்,
ஆங்கிலம் தொண்டையிலடைத்துக்கொண்டு, மரணம் நேரிட்டால், கம்பெனி பொறுப்பாகாது.

அடுத்ததாக, உடனே ஒரு கம்ப்யூட்டர் வாங்கவும். கண்டிப்பாக மல்டிமீடியா இருக்கவேண்டும். தாலாட்டை நிறுத்தி, ட்விங்கிள் ட்விங்கிள்
லிட்டில் ஸ்டார் முதல் ஹம்ப்டி டம்ப்டி வரை அனைத்து ஆங்கில ரைமிங்ஸ் பாடல் சிடிக்களை ஓடவிட்டு, அதி பயங்கரமாக அலறும்
ஹெட் போனை அதன் காதுகளில் மாட்டவும்.
'செகண்ட் லாங்குவேஜ்' என ஒரு நாதாரி சப்ஜெக்ட்டை இந்தக் குழந்தை படிக்க நேரிட இருப்பதால், எப்பவாவது ஒரு முறை, தாயின் மணிக்கொடி, தமிழ்த்தாய் வாழ்த்து,
வானாகி மண்ணாகி, போன்ற (ஒவ்வொரு தேர்வின்போதும் வரும்) மனப்பாடப் பகுதியை மனப்பாடப்படுத்தவும். எனக்குத் தெரிந்து,
ஜனகனமண தேவையில்லை. ஏனென்றால் அது கேள்வியாக்கப்படுவதில்லை. அது, பாடப்படும்போது வேறு எழுந்து நிற்க வேண்டும்.
பாவம், குழந்தையால் நிற்க முடியாது. படுத்தபடியாகவே படிக்கட்டும்.

காலம் வேகமாக ஓடுகிறது. அதோ இதோ என்று இந்தக் குழந்தைக்கு இரண்டு வயதாகிவிட்டது பாருங்கள்.
இதோ, நீங்கள் சீராட்டி, சிடி போட்டு, மனனம் பண்ணப்பட்ட குழந்தை, உங்கள் ஒரு வருங்கால டாக்டர் அல்லது
ராக்கெட் விஞ்ஞானி அல்லது ஏஆர் ரகுமான் அல்லது மன்மோகன் அல்லது எம். எஸ். சுவாமினாதன் அல்லது மணிரத்னம் அல்லது
கல்பனா சாவ்லா அல்லது அம்பானி அல்லது பிர்லா அல்லது குறைந்த பட்ச-பில்கேட்ஸ் அல்லது அதைவிட குறைந்த பட்சமாக நாட்டின் முதல் குடிமகன்(ள்)!

அந்த நாளும் வாராதோ? வரும். வரும். வந்துவிடும். கலாம் சொன்னது போல கனவு காணுங்கள். உங்கள் நடுத்தரத்திலிருந்து உங்கள் குழந்தை மேட்டுக்குடி வர்கத்துக்கு உங்களை அழைத்துச் செல்லும். அம்பானி போல அது ஒரு சிறிய வீடுகூட கட்டிக்கொள்ளுமென்றும் கனவும் காணுங்கள்.

ஏய்... கனவா...? கனவு காணக்கூடிய நேரமா இது? போய்யா போ. ப்ளே ஸ்கூல் நெறம்பிடப் போகுது. நல்ல மாண்டிசரி ஸ்டைல் (வீட்டிலிருந்து ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளியிருந்தாலும் பரவாயில்லை) பள்ளியில் சேர்த்துவிடு. பணத்தைக் கணக்கு பார்த்தால் 'அம்பானி-சிறிய கனவு வீடு' உண்மையிலேயே உடைந்து போய்விடும். உஷாராயிருக்க வேண்டும்.

வாங்க தொரை... வாங்க! இந்த கியூவில் நில்லுங்கள். பாவம் ரேஷன் கடைப் பக்கம் கூட எட்டிப்பார்க்காத நீங்கள்! விதி வலியது. நீங்கள் நிற்பது தரமான க்யூவா என்று பாருங்கள். உங்கள் முன்னால் நிற்பவர்கள் உங்களை விட வசதியானவர்களா என்று ஒரு முதல் பார்வையிலேயே கணித்துவிடுங்கள்.

"என்ன...ஆ...ஐய்யோ... போச்சா... அப்படியா.... ஐயையோ...சரி.... ஒண்ணு செய், ரிலையன்சிலிருந்து எடுத்து இன்ஃபொசிசில் போடு. தேறும் என்று இ.டி. சொல்லுது."

"ஐசிஐசிஐ... செக்கைத் தூக்கி சிட்டில போடு. ஆக்சிஸ்ல ஒரு பத்தாயிரத்தை ட்ராப் பண்ணி ஒரு மணிக்குள்ள கட்டிடு. செக்கு ரிடர்ன் ஆயிடுத்துன்ன நாறடிச்சிடுவான். வெளி நாட்டுக் கம்முனாட்டிங்க... வீட்டுக்கு ஆள் அனுப்பரானுங்க..."

இதுபோன்ற பேச்சுக்கள் இந்த க்யூவிலிருந்து உங்கள் காதுகளில் விழுந்தால், நீங்கள் தேர்ந்தெடுத்திருப்பதுதான் சரியான க்யூ. அந்த படித்த மேன்மக்கள் சரியான பள்ளியைத்தான் தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்று நீங்கள் தைரியமாக நம்பலாம். இரண்டாவதாக, க்யூவில் டீசன்சி கடைப்பிடிக்கப்படும். ரேஷன் கடையில் மாதிரி யாரும் உங்களுக்கு முன்னால் சந்தில் புகுந்துவிட மாட்டார்கள் - சண்டை சச்சரவும் இருக்காது.

ப்ரி-கேஜி அப்ளிகேஷன் வாங்கியாச்சா? சரி... நெற்றி வியர்வையைத் துடைத்துக் கொண்டு, கவனமாக அதை நிறப்புங்கள். நேமாலஜி ஜோதிடப்படி குழந்தையின் பெயருக்கு இடையில் ஏதாவது தெய்வீக எழுத்து சேர்த்திருந்தால் (அகிலேஷ்ஷ், ராஜேஷ்ஷ்), வீட்டில் போன் செய்து கேட்டு நிதானமாக தவறில்லாமல் நிறப்புங்கள்.

குழந்தையின் பள்ளி இண்டர்வியூவில் நீங்கள் பதற்றமடையத் தேவையேயில்லை. படுத்த படுக்கையிலேயே படித்த ரைம்ஸ் இங்கு கை கொடுக்கும். என்ன, கொஞ்சம் (உங்களைப் பொறுத்தவரை கடன் உடன் வாங்க வேண்டியிருக்கலாம். கனவு ஞாபகமிருக்கிறதில்லையா?) ரசீதில்லாத கட்டணங்கள் செலுத்த வேண்டியிருக்கும். பிச்சை புகினும் கற்கை நன்றே. அவ்வை சொன்னது.

இளமையில் கல் என்றும் அவ்வை சொன்னாள். இது முக்கியமான அடிப்படைக் கல்வி. குழந்தை கொஞ்சம் ததிங்கிணத்தோம் போட்டாலும் பேஸ்மெண்டை சரியாகப் போடுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். இந்த ப்ரி-கேஜி, எல்கேஜி, யுகேஜி படிப்பையெல்லம் ஏதோ போண்டா பஜ்ஜி சாப்பிடுவது என்று சுலபமாக நினைத்து விடவேண்டாம்.

அலாரம் வைத்து காலை ஐந்து மணிக்கே குழந்தையை தூக்கத்திலிருந்து எழுப்பிவிடவேண்டும். சும்மணாங்காட்டியும் பல் துலக்கி குளிக்கவைத்து புத்தகத்தின் மூஞ்சியில் உடனே முழிக்க வையுங்கள். மூளை வளர்ச்சிக்கு காலை வெறும் வயிற்றில் திக்காக ஜூனியர் ஹார்லிக்ஸ், அரை மணி நேரங்கழித்து
குழந்தையின் அபரிமிதமான உயர வளர்ச்சிக்கு காம்ப்ளான் கொடுங்கள். இல்லையென்றால் பள்ளியில் 'குள்ளன்' என்ற பேரெடுக்க வாய்ப்புண்டு. அரை மணி நேரங்கழித்து இரண்டு இட்டலி வாயில் திணிக்கப்பட வேண்டும். உடனே ஒரு டம்ளர் 4.5 பால் குடிப்பாட்டுங்கள். கவனம்... இந்த வேலைகளுக்கிடையிலும் குழந்தை புத்தகத்தை படித்துக் கொண்டேதானிருக்கவேண்டும்.

புத்தக மூட்டையை முதுகில் மாட்டிக் கையில் லன்ச்சு பேக் கொடுக்கும் நேரத்தில் பள்ளி வாகனத்தின் ஹாரன் காதைப் பிளக்கும். தரதரவென்று குழந்தையின் கையைப் பிடித்து இழுத்து வந்து வேனுக்குள் முப்பதாவது ஆளாக திணித்து விடுங்கள். அடுத்த நொடி வேன் சடுதியில் மறைந்துவிடும். இப்பொழுது நீங்கள் சற்று இளைப்பாரலாம்.

சாலை வாகன நெருக்கடியில் சிக்கித்தவித்து, அந்தி சாயும் நேரத்தில் பள்ளி வாகனமும் சாய்ந்து சாய்ந்து, ஆடியசைந்து வீட்டினருகில் வந்து நின்று உங்கள் குழந்தையை தள்ளிவிட்டுப் போகும். குழந்தையை லாவகமாக காட்ச் பிடித்து, தோளில் வாரி அணைத்துக் கொள்ளுங்கள்.

"டாடி, ஹி புஷ்ட் மி. சோ...ஐ கிக்ட் ஆன் ஹிஸ் நெக்...!" குழந்தை பேசும் மழலை ஆங்கிலம். கோடி கொடுத்தாலும் ஈடாகுமா? புளகாங்கிதமடையவும்.
இதோடு நிறுத்தாதேயும். அபாக்கசில் சேர்த்துவிட்டால் - நொடிக் கணிதம். பிறகு சல்ஸா நடனம், கராத்தே, குங்க்பூ, ஸ்கேட்டிங்க்.... உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம்! டபிள்யூ-டபிள்யூ-எஃப் - கண்ணுலயே காட்டாதீங்க. வன்முறை அதன் மனதுக்குள் புகுந்துவிடும். எல்லாம் ப்ளான் பண்ணி செய்யணும்.


"தூக்கம் வருது" என்று கண்களைச் சொக்கும் குழந்தை. நமக்கு மனம் இளகிப் போகும். என்ன செய்வது? இன்றைய கஷ்டம் என்பது நாளைய சுகம்.
வேண்டுமென்றால் சிறிது நேரம் போகோ அல்லது சுட்டியைப் பார்க்க விடுங்கள். குழந்தைக்கும் கொஞ்சம் 'ரிலாக்ஸ்' என்பது தேவைதானே!

இப்பொழுது கெல்லாக்ஸ் அல்லது நூடுல்ஸ் நேரம். உடனே ஒரு கிளாஸ் பூஸ்ட். சீக்ரெட் ஆஃப் குழந்தையின் எனர்ஜி. (மேலே கூறப்பட்ட, ஏ.ஆர். ரஹ்மான், கல்பனா சாவ்லா லிஸ்டில், எச்சிலிலேயே புத்தகம் எழுதிச் சாதித்த சச்சின் விட்டுப் போய்விட்டது. உங்கள் கனவு லிஸ்டில் இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நன்றி - பூஸ்ட்).

சல்சா டான்ஸ் ட்ரெஸ், அதற்கு மேலே கராத்தே ட்ரெஸ், காலில் சக்கரம் கட்டி, சுட்டிக் குழந்தையை உங்கள் வண்டியில் அழைத்துச் செல்லும்போது சாலையின் இரு பக்களிலும் திரும்பித் திரும்பி கவனித்துப் பாருங்கள். இன்னும் ஏதாவது குழந்தை கற்றுக் கொள்ளக் கூடிய பயிற்சிக்கான விளம்பரங்கள் கண்ணில் படலாம்.

எல்லாப் பயிற்சி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து வந்த உடனே ஹோம் வொர்க். அடியாத மாடு படியாது என்பது பெரியோர் வாக்கு. காதைப் பிடித்து திருகியோ, முடியைப் பிடித்து தலையில் நளினமான முறையில் தட்டியோ பாடங்களைச் சொல்லிக் கொடுங்கள். சட்டங்கள் கடுமையாயிருப்பதால் மூன்றாவது வீட்டு மனித உரிமை ஆர்வலர் பார்க்காதவாறும் பதுங்கிப் பம்மி அடிக்க வேண்டும்.

அதிக பட்சம் எட்டறை மணிக்குள் குழந்தை விரைந்து படிப்பை படித்து முடித்து விடவேண்டும்.பின் கதை சொல்லி தூங்க வைப்பதற்குப் பதில், 'உன்னால் முடியும் தம்பி' புத்தக வரிகளைப் படித்துதோ, கலாமின் புத்தக வரிகளைப் படித்தோ குழந்தையை சுலபமாக தூங்கிவிடச் செய்யலாம்.
நீங்கள் படுக்கைக்குச் செல்லும்முன் 'அஞ்சு மணி அலாரம்' வைக்க வேண்டும்.

ஆங்கிலக் கல்வி வழியில் பயின்றாலும் குழந்தை ஆங்கிலம் பேசத் திணறுவது உங்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கும். நல்ல பள்ளி என்றால் ஒரே வக்குப்பறையில் ஐம்பது குழந்தைகள் கூட படிக்க வாய்ப்புண்டு. அத்தனை குழந்தைகளுக்கும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்துவதென்பது இயலாத காரியம். அத்தனையும் அவர்கள் கட்டி மேய்க்கப் போராடுவதை நீங்கள் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையில் சிந்திதுப் பார்க்கவும். போகப் போக சரியாகி விடலாம் என்று பள்ளி நிர்வாகம் உங்களுக்கு ஆறுதல் சொல்லும். அதனால் ஆறுதல் அடைந்துவிடுங்கள். தமிழ் என்பது வேப்பங்காயாகத்தானிருக்கும். என்ன தமிழ் இது... கொம்பும், காலும், கொக்கியும், நெடிலும், குறிலும்.... குழந்தைகளுக்காக ஆங்கில எழுத்து மாதிரி ஒரு 26 எழுத்துகளிலேயே தமிழைச் சுருக்கிவிட தமிழ் ஆர்வலர்கள் முயன்றாலென்ன? செம்மொழி மானாட்டில் என்னதான் கிழித்தார்கள் என்று தெரியவில்லை.

இப்படியாக உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் மூச்சிறைக்க, நாக்கு வெளித்தள்ள கான்வென்டுப் படலம் முடிந்ததற்காக வருத்தப்பட வேண்டாம். கலாம் சொன்னது போல, கனவுதான் முக்கியம். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும்தான்.

7.3.12

குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்! நாள்: 8.3.2012



முன்னோரிரவில் உள்வாங்கி
முன்னூற்றாம்நாள் வெளித் தள்ள
அன்றோரிரவில் அம் மனையாள்
ஆர்ப்பரித்து வலித் துடித்தாள்.

காலால் உதை யுதைத்தும்,
தலைகீழாய்ப் புரண்டு வந்தும்,
தண்ணீர்க் குட முடைத்தும்,
தரை வீழ்ந்ததோர் குழவி.

ஏக்கமுற 'மகள்' என்ற செவிலி.
எதிர்பார்ப்பில் காத்திருந்த சுற்றம்.
மகளா வென முணுமுணுத்து
மருகி நின்ற பெற்றோர்.

சாம்பல் நிறம்பூசி - சிறு மகள்
செவ் விரல்களை மடக்கி
குருதிக் கறையோடே
குறுகிப் படுத்திருந்தாள்.

சிறு செவ்வாய்த் திறந்து,
சென்னிறக் கையசைத்து,
கீச்சுக் குரலெடுத்து - முதன்முறை
கேவி அவள் அழுதாள்.

முலைப்பா லுண்ணும் போது
தாயின் முகம் பார்க்கில்,
மூச்சுக் காற்றில் முகங்கருக
முகத்தை மூடிக்கொண்டாள்.

'நீயுமா பெண்ணானாய்,
நான் பெற்ற மகவே - தெரியுமா?
காய்க்கும் மரங்க ளிங்கே
கால்தூசிக்குச் சமானம்'

'நீயேன் மகளானாய், இங்கே
நான் பெற்ற மகவே - புரியுமா?
கிளைகளுக்கிருக்கும் மதிப்பு
கீழிருக்கும் வேருக்கில்லை'

மூச்சுக் காற்றில் முகந்திணற,
முனகும் வார்த்தை நெஞ்சு சுட,
கையறு நிலையிலேயே - அவள்
கண்ணயர்ந்து போனாள்.

'மகள்' எனும் குற்றத்தால்
சுற்றத்தால் கிள்ளப்பட்டு,
தூக்கத்திலும் கேவியழுதே,
திரும்பவும் கண்ணயர்ந்தாள்.

***
'அம்பாரத்து ஆனைப் பொம்மை,
அழகான கரடிப் பொம்மை'
கேட்டு ஏங்கிய மகளுக்கு
கிடைத்ததோ ஒரு கிலுகிலுப்பை.

தெருவிலோடி விளையாடித்
திரிந்த 'மகன்' கூட்டம், அங்கே.
புறக்கடைத் தனிமையிலே சுதந்திரமாய்
புலம்பி விளையாடும் மகள் - இங்கே.

***

'ஈன்றோர் கடமையிது; உலக மரபுமிது;
இனி 'மகன்' என்போன் கல்வி கற்க;
பிறிதொரு வீடுபோகும் பெண் நீ - இனி
பெருக்கிப் பழகு; கோலமிடக் கல்.'

'சிறுமியெனில் சிந்தனை எதற்கு?
சிறு மதங்களில் முடங்கிப் போ;
முசுலீமில் முக்காடைத் துவங்கு;
முகங்கவிழ் - இந்துவெனில்.'

'கன்னியெனில் பேச்சைக் குறை.
காதல் வந்தால் கட்டுப் படுத்து.
காதல் சொன்னால் கட்டுப்படு.
காதலனின் திராவகத்தை கவனம் கொள்.'

'ஆணின் அடிமையென்றுன்னை
அடையாளப் படுத்திக் காட்டு;
புன்னகை களைந்து, தாலி அணி;
புது மெட்டியணி அல்லது மோதிரமிடு.'

***

'காலையெழுந்து ஏவல் செய் - பின்
காற்றைப் பிடித்து பணிக்குப் போ.
மணாளன் வருமுன் வீடுதிரும்பி
மல்லிகை சூடிக் காத்திரு.'

'காமுற்றால் மட்டும் காமுறு.
கணவனின் பிள்ளை வரம் வாங்கு.
'மகன்' வேண்டி விதை விதைத்த
மணாளனின் கனவையே காண்.'

*** *** *** *** *** *** ***

ஆனால் ஈன்றது மகளென்றால்...
ஈன்றது மகளென்றால்...

ஆனால் ஈன்றது மகளென்றால்
ஆர்ப்பரித்து அறற்றாதே.
பட்டதெல்லம் போதும்; இனி
பாய்ந்திடப் பழகு.

'மகளா' என்று ஏக்கமுறும்
மண்ணாங்கட்டிகளை ஏசு.
முணுமுணுக்கும் சுற்றத்துக்கு
முறந்துடைப்பம் காட்டு.

தன்மானங்கலந்து முலைப்பாலூட்டு;
தன்னம்பிக்கை வெறியேற்று.
எல்லோர் செவியிலும் விழும்படி இந்த
இரகசியத்தை மகளுக்குச் சொல்:

"என் புத்தம் புது மகளே -
நீ இன்றிலிருந்து...

விளையாடி மகிழ்.
பாடம் படித்து -
சுயமாய்ச் சிந்தி.
அடிமை வெறு.
அடங்க மறு.
அத்து மீறு.
சாதி சிதை.
மத மிகழ்.
தெய்வத்தை நிந்தி.
தாலி மறு.
காதல் செய்.
பெண்ணியம் போற்று.
பெரியார் பேண்.
பொது நலம் பேசு.
அரசியல் பழகு.
அறிவியல் அறி.
உழைத்தபின் உண்;
அதையும் பகிர்ந்துண்
எனத் தத்துவம் பேசு.

என்றுமே இடித்துரை -
வேரின்றி மரமில்லை என்று!
யாம் இனி யாருக்கும்
அடிமையில்லை என்று!!"

4.3.12

ஜனநாயகத் திருடர்கள்



காதலுக்காக வருந்திய
கிழவயதுக் கலாம்
ராஷ்டிர பவனத்து
ரோஜா இதழ்களை 
வருடிக்கொண்டிருந்தபோது,
கடனால் தத்தளித்து
கதறிய உழவர்கள்
தூலத்தில் தூக்கிட்டுச் சாக
கயிற்றைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
கலாமின் காதல்
ஜெயித்ததோ இல்லையோ...
கயிறு ஜெயித்தது!

குடியரசுத் தினத்தில்
ஏழு முறை குண்டொலிக்க
இந்திய ராணுவம்
துப்பாக்கிகளில் தூசியை
துடைத்துக்கொண்டிருந்தபோது,
இலங்கை ராணுவம்
தமிழர்களைத் தேடிக்கொண்டிருந்தது.
இந்திய ராணும்
ஏழுமுறை சுட்டதோ இல்லையோ...
இலங்கை ராணுவம்
மீனவர்களைச் சுட்டுவிட்டது!

கனிமொழி கிறுக்கிவைத்த
கவிதை வரிகளுக்கு
கலைஞர் கருணாநிதி 
'  கரக்சன்  ' பார்த்துக்கொண்டிருந்தபோது
ராஜாவின் மந்திரிசபை
ராவோடு ராவாக
அலைக்கற்றையை ஏலம்போட்டுவிட்டது.
கனிமொழியின் கவிதை
அச்சேறியதோ இல்லையோ...
ஏலம்போட்டு 'கரப்ஷன்' செய்ததில் 
இந்தியாவின் மானம்
கப்பலேறிவிட்டது!

தோழியோடு தோழியாக
ஆறுமாத காலத்துக்கு
கொட நாட்டுத் தோட்டத்தில்
கும்பகர்ணத் தூக்கம்.
ஜெயலலிதா தூங்கினாரா தெரியாது...
பொதுமக்கள் சொத்துக்களை
திருடிக்கொண்டே இருந்தார்
விழித்துக்கொண்டிருந்த தோழி!

கூடங்குளத்து மீன்காரன்
கடலுக்குப் போனபோது,
அணு உலை ஒப்பந்தம்
அவனுக்கே தெரியாமல் 
கையெழுத்தாகிப்போனது.
அவன் மீன்பிடித்தானா தெரியாது...
ஆனால் அணுஉலை கட்டிடம்
திறப்புவிழா வைபவத்துக்கு
தயாராகிவிட்டது!

கூழுக்கும் வக்கில்லாமல்
இந்தியக் கும்பிகள்
காய்ந்துகொண்டிருந்தபோது
நிலவைத் தொட்டுவிட
சந்திராயன் நட்டுவைக்கப்பட்டது.
இந்தியனுக்கு கூழ் 
கிடைத்ததோ இல்லையோ...
ஆனால் சந்திராயன் 
நிலவைத் தொட்டுவிட்டது!

இலவசங்களை அள்ளிக்கொள்ள
தள்ளு முள்ளு வரிசையில்
பாமரன் சிக்கிக்கொண்டபோது
இரவோடிரவாக
பஸ் கட்டணமும் பால்விலையும்
இரண்டு மடங்காக 
உயர்த்திவிட உத்தேசிக்கப்பட்டது.
வரிசையில் காத்திருந்தவனுக்கு 
இலவசங்கள் கிடைத்ததோ இல்லையோ...
விலை உயர்வு 
இலவசமாகவே கிடைத்தது!


"ஓட்டுப்போடும் உரிமை கேள்
ஜனநாயகக் கடமை செய்"
தெருவுக்குத் தெரு
ஜனநாயகத் திருடர்கள்
உரக்கக் கூவினார்கள்.
மக்களெல்லாம் இந்திய நாட்டு
மன்னர்களோ இல்லையோ...
உலகமகா பணக்காரர்கள்
இந்த ஓட்டுத் திருடர்கள்!!