My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

26.10.11

தாயம்மாவின் தீபாவளி



நினைத்துப் பார்க்கவே வயிறு கலங்கியது தாயம்மாவுக்கு. வேண்டாத கடவுளில்லை. அட, உட்கார்ந்து செல்லவேண்டாம்; நின்று செல்லவாவது இடம் இருந்தால் போதுமென்று தாயம்மாவுக்குப் பட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு ஒரு ஐந்து மணி நேரம். ஊருக்குப்போய்விடலாம்.

டவுன் பேருந்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் சவுண்டும், தாயம்மாவும் இறங்கும்போதே தெரிந்துபோனது. ஊருக்குப் போவது நடக்காத காரியமென்று. பேருந்து கி
டைக்குமா என்னும் பதற்றம் அவளுக்கு வியர்வையை பொங்க வைத்தது.

கோயம்பேடு பேருந்து நிலையம் முழுவதும் வெறும் தலைகளாய் நிரம்பி இருந்தது. எங்கு பார்த்தாலும் மக்கள், மக்கள், மக்கள்தான். பெரிய மூட்டை முடிச்சுகளுடனும், பெரிய பெரிய பெட்டிகளுடனும், இரண்டு கைகளிலும் கொத்தாய்ப் பிடித்துக்கொண்டு, இங்குமங்கும் அலைந்தபடி இருந்தார்கள். சிலர் பெட்டிகளுக்கு நடுவில் அமர்ந்துகொண்டு பேருந்து வருவதை எதிர்பார்த்திருந்தனர். போலீஸ்காரர்கள் விசில் ஊதியபடி இங்குமங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். சிலரை லத்தியால் அடித்துக்கொண்டே போனார்கள். ஆங்காங்கே பெட்டிகளோடு பெட்டிகளாக குந்தியிருந்த குழந்தைகளெல்லாம் ஒன்றுபோலக் கதறியழுதுகொண்டே இருந்தன. அங்கே அமைதியான சந்தோஷமான குழந்தைகளோ அல்லது மனிதர்களோ ஒரேயொருவரைக்கூட பார்க்க முடியவில்லை. திருவிழாக் கூட்டத்தில் யானை புகுந்ததுபோல் எல்லோரும் இங்குமங்குமாக திக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டேயிருந்தார்கள். சுனாமி அடித்து ஓய்ந்தபின் நடக்கும் களேபரம் போல அந்த காட்சிகள் இருந்தன! அங்கே யாருமே சந்தோஷமாக இருப்பதாகத் தென்படவில்லை.

நின்றுகொண்டிருந்த பேருந்துகளைச் சுற்றி ஒரே நெரிசல். பேருந்தை நோக்கி ஓடிய நெரிசலால் சிக்குண்டு அந்த பேருந்துகளே நசுங்கிவிடும்போல இருந்தது. ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், சட்டையைப்பிடித்து சண்டையிடுவதும், பாய்ந்தோடி ஜனங்களின் மீதேறி பேருந்துக்குள் புகுந்துவிடுவதும், எல்லா பேருந்துகளைச் சுற்றிலும் நடந்துகொண்டேயிருந்தது.

உள்ளே வரும் பேருந்துகள் ஒலி எழுப்பியாவாறு உள்ளே நுழைந்தவுடன், சனங்கள் தத்தளித்து முண்டியிட்டன. சிலர் பேருந்து செல்லும் வழித்தடத்தைப் பார்க்க முன்பக்கம் பாய்ந்தனர். குழந்தைகளையும்ம், பெட்டிகளையும், உடன் வந்தவர்களையும் விட்டுவிட்டு, சரேலென வந்து நின்ற பேருந்தின் சன்னலுக்குள் ஆண்கள் பாய்ந்தார்கள்.

"நான் இந்தப் பக்கம் சீட்டிலே இருக்கேன். விட்டு எழுந்துவந்தா சீட்டு கெடைக்காது. எப்படியாவது நெருக்கியடிச்சி புள்ளக்குட்டிங்களை கூட்டியாந்துடுடீ. பொட்டிங்கள மறந்துடாத" என்று ஒலக் குரல் பொதுவில் கேட்டது.

திக்குத் தெரியாது விட்டதுபோல, பெண்களும் குழந்தைகளும் தடுமாறி நின்றார்கள். சூழ் நிலையைச் சாதகமாக்கி, சில பெட்டிகளும் மூட்டைகளும் திருடு போயின.

ஒரு பெண் குழந்தை எப்படியோ தவறி, "அப்பா, அப்பா..." என்று கதறிக்கொண்டேருந்தது. அதை அணுகி ஏனென்று கேட்க யாருக்கும் நேரமில்லை, அல்லது தோன்றவில்லை. பேருந்துகள் வருவதைப் பற்றியும் போவது பற்றியுமான இரைச்சலான அறிவிப்பு ஒலி அனைவருக்கும் சலிப்பைக்கொடுத்தன. நூற்றுக்கணக்கான பேர் போக்குவரத்து அலுவலகத்து அறையை சூழ்ந்துகொண்டிருந்தனர். கோபாவேசமான கேள்விகளுக்கு பதிலில்லாமல் அந்த அதிகாரிகள் தடுமாறினார்கள். கூட்டத்துக்கு நடுவிலிருந்த சிலர், அவர்களை வெளியே பிடித்து இழுத்துவருமாறு கத்திக்கொண்டிருந்தார்கள். சில இடங்களில் மக்கள் தரையில் அமர்ந்து அரசைக் கண்டித்து, கைகளையுயர்த்தி, கோஷம் போட்டுக்கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக வந்து குவிந்த கூட்டத்தை ஏறிக்கொண்டு வெளியே சென்ற பேருந்துகள் ஒருபக்கமாக சாய்ந்தபடியே சென்றன. அனேக வண்டிகளில் மேற்கூரையில் காய்கறிக்கூடைகளோடு, நிறைய இளைஞர்களும் குந்தியிருந்தார்கள்.

சவுண்டும், தாயம்மாவும் திணறிப்போனார்கள். மூட்டைகள் வேறு கனத்தன. தாயம்மாவின் தோள்பட்டைகள் வலித்தன.
"தாயி... இங்கயே நில்லு. சீட்டு புடிச்சிட்டு வந்து கூட்டிகிட்டுப் போறேன். எங்கியும் போய்டாத. அப்புறம் கண்டுபிடிக்கிறது கஷ்டம்" என்று சொல்லிகொண்டே கூட்டத்தின் நடுவில் புகுந்து சென்றான் சவுண்டு.

நேரம் கடக்கக் கடக்க, மக்கள் நெருக்கம் அதிகமாகிக்கொண்டே போனது. கூட்டமும் மூட்டை முடிச்சுகளுமாக அந்த ஆசியாவிலேயே பெரியதான பேருந்து நிலையம் தத்தளித்துக் கிடந்தது. இப்பொழுதே மணி இரவு ஒன்பது ஆகிவிட்டது.

'க்ர்ர்ர்த்தூ...நாய்ப் பொழப்பு. ஜெனங்களுக்கு மருவாதி ஏது? ஊரவிட்டு இந்த போக்கத்த ஊருக்கு பொழைக்க வந்ததுதான் தப்பாப் போச்சி.' தாயம்மா சலித்துக்கொண்டாள். குழந்தை ஆசை ஆசையாய்க் கேட்டு, பத்து ரூபாய்க்கு பலாச்சுளை வாங்கிவரச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 'சத்தியமா வாங்கிட்டு வரணும்' என்று கண்டிப்புடன் சொல்லி இருந்தாள். இங்கே வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று பார்த்தால், அது நடக்காது போலிருக்கிறது.

முக்கால் மணி நேரத்துக்கும் மேலாகியும் சவுண்டு வரவில்லை.
'பாவம், அது லோல் படுது. பேசாம தீவாளிக்கு ஊருக்கு போகாமயே இருந்திருக்கலாம்,' என்று முனகிக்கொண்டாள் தாயம்மா.

ஒரு மணி நேரம் கழித்து வந்தான் சவுண்டு. அவன் தளர்ந்த நடையிலேயே தெரிந்தது, அவனுக்கு சீட்டு கிடைக்கவில்லையென்று.
'என்னாச்சு?' என்று சத்தம்போட்டுக் கேட்டாள் தாயம்மா.

"இல்ல தாயி. போற போக்கப்பாத்தா நிண்டுகிட்டுக்கூட போகமுடியாது போலிருக்கு" என்று சவுண்டு ஈனக்குரலில் சொன்னான். "இதுக்கெல்லாம் ஏதாவது செய்தாகணும்." என்று பல்லை நறநறத்தான். 'இதுக்கெல்லாம் ஏதாவது செய்யணும்' என்று சவுண்டு சொன்னால் அவன் அதீத கோபத்திலிருக்கிறான் என்று அர்த்தம். சில பல சமயங்களில் அடிதடிகளில் முடிவதுமுண்டு!

தாயம்மாள் திடீரென எழுத்து அவன் சட்டையைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டாள். "இங்கன பாரு. இங்க வந்து சத்தம் போடறது, கோவப்படுறது, டென்ஷனாவறது, நியாயம் கேக்குறேன்னு அதிகாரிங்க கூட சண்ட போடறது, இதெல்லாம் வேணாம். அப்புடிப் பண்ணீன்னா, நான் திரும்பி வீட்டுக்குப் போய்ட்டே இருப்பேன்." என்று பதற்றத்துடன் கத்திச்சொல்லி எச்சரிக்கை செய்தாள்.

"இல்லை. போவலை." என்று இறுகிய முகத்தோடு சொன்னான் சவுண்டு. "என்ன பண்றதுன்னு தெரியலை."

அப்போது ஒரு ஆள் வந்து அவர்களை அணுகி நின்றான்.

"எங்கம்மா போவணும்?"

"நாகப்பட்னம். அங்கேருந்து வேற பஸ்ஸு புடிச்சு எங்க ஊருக்குப் போகணும்." தாயம்மா சொன்னாள்.

"நாகப்பட்டணம் போனா போதுமா, அங்கேருந்து நீங்க போஈடுவீங்கல்ல?"

"ஆமா சார். நாகப்பட்னம் போனாப் போதும்."


"எத்தினி, ரெண்டு பேரா? ஒரு ஆளுக்கு அறுனூறு. ரெண்டு பேருக்கு ஆயிரத்து இரு நூறு ஆகும். உக்காந்துக்கிட்டே போகலாம். என்ன சொல்றீங்க? வர்ரீங்களா?"

தாயம்மாள் சவுண்டைப் பார்த்தவாரே பதில் சொன்னாள். "அவ்வளவு காசா?"

"இன்னாவாம்?" சவுண்டு கேட்டான்.

தாயம்மாள் சவுண்டின் காதருகே சென்று இரைந்து சொன்னாள். "ஒரு ஆளுக்கு ஆறு நூறு குடுத்தா, குந்திக்கிட்டே போகலாமாம். என்ன சொல்றீங்கன்னு கேக்கறார்!"

சவுண்டுக்கு அந்தத் தொகை பெரும் அதிர்ச்சியைத் தந்தது. "அப்போ, ஆயிரத்து இரு நூறு ஆவுமே?!" ஏனென்றால் அவனிடத்தில் சொல்லிவைத்தற்போல மிகச் சரியாக ஆயிரத்து இரு நூத்துச் சில்லரை மட்டுமே இருந்தது.

"வேண்டாம் சார், அவ்வளவு காசு இல்ல." என்று தாயம்மா பதில் சொன்னதும் அந்த ஆள் அங்கிருந்து கிளம்பிச்சென்றான்.
போனால் போகட்டுமென்று கொடுத்துவிடலாம்தான். ஆனால் தீபாவளி செலவுக்கு பத்துபைசா மிஞ்சாது. சவுண்டு மனதுக்குள் கணக்குப் போட்டான்.
சற்று நேரத்தில் பதற்றத்தோடு சொன்னான். "இல்ல தாயி. இப்போ நூறு, ஆயிரம்னு பாத்தா வேலைகாவாது. எனக்கு மலரப் பாக்கணும்போல இருக்கு. செலவைப் பாக்காம போய்டலாம். அங்க போய் ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம்," என்று நிதானமான சன்னக் குரலில் சொன்னான்.

ஆனால் வந்த ஆள் அந்த பெருங்கும்பலுக்குள் கலந்துபோயிருந்தான். வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவில்லையோ எனப்பட்டது தாயம்மாவுக்கு.

"நீ சித்த இங்கயே இரு. நான் இதோ விசாரிச்சிட்டு வர்ரேன்," என்று சவுண்டுவிடம் உரக்கச் சொல்லிவிட்டு, கூட்டத்துக்குள் புகுந்துபோனாள் தாயம்மாள்.

ஐந்து நிமிடத்தில் திரும்பிவந்தவள் சவுண்டுவிடம் சொன்னாள் : "இங்கேருந்து கொஞ்சம் தொலைவு மேற்கால போனா, தனியாருங்க வண்டி கெடக்குதாம். அங்கன வெசாரிச்சி போகச்சொல்லுறாங்க." என்று சொல்லிவிட்டு, மூட்டைமுடிச்சுகளைத் தூக்கத் தயாரானாள்.

***
இப்பொழுது மணி இரவு பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒரு வழியாகத் தேடி அலைந்து இங்கே வந்துவிட்டார்கள். இந்தப் பேருந்து நிலையம் வேறு விதமாக இருந்தது. மனிதர்கள் மட்டுமல்ல, பேருந்துகளும்கூட வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்தன. அங்கிருந்த கூட்டத்துக்கு பாதி குறைவாக இருந்தது. அங்காங்கே மக்கள் கும்பல் கும்பலாகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு பேருந்து அருகிலும் காசு எண்ணி வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

சவுண்டு 'பாண்டி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம்' போர்டுக்காக சுற்றி சுற்றி வந்தான்.
ஒரு இடத்தில் போர்டு இருந்தது. எம்பிஎன் பஸ் சர்வீஸ். அந்தக் கூட்டத்துக்குள் நுழையும்போதே தானும் தாயம்மாவும் வித்தியாசப்பட்டிருப்பதை உணர்ந்தான். பளபள வேட்டி சட்டைகளும், பேண்ட்டு ஷர்ட்டுகளும் அணிந்த ஆண்களும், மேட்டுக்குடி ரக பெண்களும் குழுமிக்கிடந்தனர். ஒவ்வொருவரையும் கடந்தபோது விதம்விதமா செண்ட்டு வாசனை அடித்தது. இவர்களைப் பார்த்ததும் அவர்கள் சற்றே முகம் சுளித்து விலகுவது தெரிந்தது.

"நாகப்பட்டினம் ரெண்டுக்கு எவ்வளவு சார்ஜ் ஆகும்?" சவுண்டு அங்கே டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தவரிடம் கேட்டான்.
அந்த ஆள் நிமிர்ந்து பார்த்துவிட்டு சற்று யோசனை செய்தவாறு சொன்னான். "இங்கே ரேட்டெல்லாம் ரொம்ப ஜாஸ்திய்யா. உனக்குக் கட்டுப்படியாவாது. கோயம்பேடு போறதுதானே?"

சவுண்டு, "ம். என்ன சொல்றீங்க?" என்று வினவினான். தாயம்மா சங்கோஜப்பட்டு நெளிந்தவாறு நின்றாள்.
"காது கொஞ்சம் கேக்காது. கொஞ்சம் உறத்து சொல்லுங்க," என்றாள் தாயம்மா.
"எழுனூத்து அம்பது ரூபா. ரெண்டு பேருக்கு ஆயிரத்து ஐநூறூ. அதுகூட சீட்டு இருக்கான்னு பாக்கணும்யா." என்று உரத்த குரலில் சொன்னார் டிக்கெட் புக் செய்பவர்.

இந்த விசாரணையின் தாமதங்களால் பின்னாலிருந்த கூட்டம் அவர்களை விலக்கித் தள்ளியது.

சவுண்டும் தாயம்மாவும் மிகவும் தளர்ந்து போனார்கள்.
"என்ன செய்ய்யலாம்?" என்று சவுண்டுவின் காதருகில் கத்தினாள் தாயம்மா.

சட்டென்று பதில் சொன்னான் சவுண்டு. "நீ மட்டும் போ தாயி. நான் லாரி புடிச்சி எப்புடியாவது வந்து சேர்ந்துடரேன்."

இரண்டு பேருக்கும் நடுவில் நீண்ட மௌனம் நிலவியது.

பின்பு சவுண்டு சொன்னான். "நீ இங்கயே இரு. நான் டிக்கெட் வாங்கியாரேன்."

திரும்பவும் தயங்கித் தயங்கி அந்தக் கூட்டத்தில் புகுந்தான். அங்கிருந்தவர்கள் அவனை வேண்டா விருந்தாளியாகவே பார்த்தார்கள்.
"யோவ் தள்ளிப்போய்யா, இங்க உங்களுக்கு பஸ்ஸு கிடக்காதுய்யா. திருவள்ளுவர்ல ட்ரை பண்றதுதானே? இங்க வந்துட்டான் வசதி தேடி." என்று உரக்கக் கத்தி சலித்துக்கொண்டார் ஒருவர்.

"உங்கள மாதிரி நாங்களும் ஊருக்குப் போய்தானே ஆகணும்? ஏன், நாங்கள்ளாம் இங்க வரக்கூடாதா?" சவுண்டு அந்த ஆளை நிமிர்ந்து கேட்டான்.

"அட, ரோசத்தப் பார்ர்ரா.... போ... போய் வாங்கிக்க. நானா வேண்டாம்னேன். ஏம்பா கிளார்க்கு, இந்த மாதிரி ஆளையெல்லாம் ஆம்னில ஏத்தினா எப்படி? நாங்களாம் வரணுமா வேண்டாமா? தள்ளிப்போய்யா" என்று எகிறினார் ஒரு வெள்ளைச்சட்டை ஆள்.

ஏதேதோ தள்ளுமுள்ளுவில், சவுண்டு அருகில் வந்துவிட்டான். "சார். நாகப்பட்னம் ஒரு டிக்கெட் குடுங்க."

"இப்பத்தானே சொன்னேன். ரேட் ஜாஸ்தின்னு."

"பரவாயில்ல. ஒரு டிக்கெட் கொடுங்க."

இதற்குள் உள்ளேயிருந்த கண்ணாடிக் கேபினுக்குள் இருந்து ஒரு அதட்டல் குரல் வந்தது. "டேய் ராமு, யார்ர்ரா அவன்?"

"டிக்கெட்டு கேட்டு தொந்தரவு பண்றான் அய்யா, இல்லைனாலும் போக மாட்டேங்குறான்."

"நீ இங்க வா."

"யோவ் இருய்யா, ஓனர் ஐய்யா கூப்பிட்றாங்க." என்று உள்ளே போனான், அந்தக் கிளார்க்.

"கொடுத்தா இரண்டாக் கொடு. ஒரு டிக்கெட்டாக் கொடுக்காத. அவன் பக்கத்துல கஸ்டமர் உக்காரத் தயங்குவாங்க. அப்படி வாங்கலைன்னா அவன போகச்சொல்லு. நான் சொன்னேன்னு சொல்றா."

"யோவ், வாங்கினா ரெண்டு டிக்கெட்டா வாங்கிக்க. ஒண்ணு எல்லாம் கொடுக்க முடியாதுன்னு ஓனரே சொல்லிட்டார்." என்று கத்திச் சொல்லினான் அவன்.

இப்போது தாயம்மாவுக்கு பதற்றம் அதிகமானது. சண்டைக்காரன் இந்த சவுண்டு. பட்டென்று அடித்துவிடுவான்.

"இதுக்கெல்லாம் ஏதாவது செய்தாகணும்..." என்றவாறு கூறிக்கொண்டே சடாரென்று கண்ணாடிக் கேபினுக்குள் பாய்ந்தான் சவுண்டு.

"ரெண்டு டிக்கெட்டுக்கு காசு பத்தலை. ஒரு டிக்கெட் கொடுத்துத்தான் ஆவணும் சார் நீங்க. ஏன் நான் காசு கொடுக்கலை? எனக்கு மட்டும் ஏன் இல்லைன்றீங்க? ஏழைங்கன்னா எளப்பமா? தலை காய்ஞ்சவனப் பார்த்தா உங்களுக்கு கேலியாப்படுதா? நாங்க கஷ்டப்படுற ஜாதி. எங்க ஒடம்பும் துணியும் வதங்கனாப்பலதான் இருக்கும். ஏன் உழைக்கறவங்களைக் கண்டா, உங்கள மாதிரி ஆளுங்க மரியாதை குறைவா நடத்துறீங்க? நாங்க என்ன புண்ணும் சீழுமா புடிச்சிக் கெடக்குறோம்?" என்று ஓனர் மேசைமீது கையை ஊன்றி, முஷ்டியால் குத்திக் குத்திப் பேசினான்.

தாயம்மாவுக்கு தலை கிறுகிறுத்தது. அந்த டிக்கெட் கிளார்க்கிடம் கெஞ்சினாள்.
"நாளெல்லாம் சித்தாள், பெரியாள் செய்யறவங்க நாங்க. வருசத்துக்கு ஒரு தடவதான் ஊருக்குப் போறோமுங்க. என் அஞ்சு வயசு கொழந்தையப் பாக்கணும்போல ஆசையா இருக்குங்க. கொஞ்சம் தயவு பண்ணுங்க. அவருக்கு காது மந்தம். அவரண்ட பேசி அவரை குழப்ப வேண்டாம் சார்." என்று கெஞ்சினாள்.

ஆனால் உள்ளே போன சவுண்டுக்கு பளார் என்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது.
"வெளிய போடா நாயே. கூலிக்கு மாரடிக்கிர வேசிக்குப் பொறந்த சொறி நாயே. எங்கிட்டையா சவுண்டு குடுக்குற? கொண்ணுபோட்டுடுவேன். ஓடிரு. நான் யார் தெரியுமா உனக்கு?" என்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளினார்.

நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தாயம்மா, கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே சென்று, படாரென்று அந்த ஓனர் காலில் விழுந்து கெஞ்சினாள்.
"விட்டுடுங்க ஐய்யா. அடிக்காதிங்க. அது ஒரு வெகுளி."

"ஓடிப்போய்டுங்க. இந்தப்பக்கம் உங்களைப் பாக்கக்கூடாது இனிமே..."

தாயம்மா சவுண்டுவின் சொக்காயைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்.

"ஏன்யா, சொல்லி வச்சிருந்தும் இப்படிப் பண்ணிட்டியே... அசிங்கமாப்போச்சேய்யா, பாரு, எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க. இந்தக் கோவம்தான்யா உன்ன வாரிப்போடப்போவுது..." என்று கதறி அழுதாள்.

இருவரும் கையறு நிலையில் தங்கள் மூட்டைமுடிச்சுகளுடன் ஒட்டி நின்றார்கள்.
சவுண்டு சொன்னான். "இதுக்கெல்லாம் ஏதாவது செய்தாகணும்." அவன் வாயோரம் ரத்தம் வழிந்தது.

சிறிது நேரம் அங்கே அனைவரிடத்திலும் மௌனம் நிலவியது.
அந்த டிக்கெட் கிளார்க் என்ன நினைத்தானோ தெரியவில்லை. உள்ளே சென்று ஓனரிடம் சிறிது நேரம் ஏதேதோ பேசி எடுத்துச் சொன்னான். பின்பு வெளியே வந்து "சரி இங்க வா. ஒரு டிக்கெட் தர்றேன். எழுநூத்தம்பது கொடு."

தாயம்மாதான் சவுண்டுவின் சட்டை உள்பாக்கெட்டில் கைவிட்டு எடுத்து காசை எண்ணிக் கொடுத்தாள். அதை வாங்கிக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தான். "அதோ நிக்குதே அந்த பஸ்தான். கடைசீல போனீனா உன் சீட் இருக்கும். இப்ப பத்து நிமிஷத்துல கெளம்பும்."

டிக்கெட்டை வாங்கிக்கொண்டு திரும்பிவந்தாள்.
தாயம்மா அதிகமாக கலவரத்தில் கிடந்தாள். சவுண்டுவின் முகம் இறுகிக் கிடந்தது.

பிறகு தாயம்மா மட்டும் பேருந்துக்குள் ஏறி யாரையோ விசாரித்து அவள் சீட்டில் அமர்ந்துகொண்டாள். மூட்டைகளை சீட்டுக்கடியில் தள்ளிவிட்டுக்கொண்டாள். அவளுக்கு கதறியழ வேண்டும்போலிருந்தது.

ஜன்னல் வழியாகத் தலையை வெளியில் நீட்டி சவுண்டுவை அழைத்தாள்.
அவன் கீழேயிருந்து அவளைப் பார்த்தான்.
"எங்க போனாலும் உன்னோட ரோதனையாப் போச்சு. ஏதாவது வண்டியப் புடிச்சு பத்திரமா வந்துரு."
சவுண்டு அமைதியாக மீதப் பணத்தை அவளிடம் கொடுத்தான். "பத்திரமா வச்சுக்க."
"உனக்கு காசு வேண்டாமா. இந்தா." என்று இரு நூறு ரூபாயை அவன் கையில் திணித்தாள்.

ஒவ்வொருவராக ஏற இருக்கைகள் நிரம்பிக்கொண்டிருந்தன. சவுண்டு எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டேயிருந்தான்.
பேருந்து கிளம்பி மெல்ல நகரும்போது தாயம்மா சொன்னாள்.
"பத்துரமா பார்த்து வந்துடு. இங்க ஏதும் பிரச்சினை பண்ணாதே."
"பார்த்துப் போ தாயி." என்று மட்டும் பதில் சொன்னான் சவுண்டு.
பிறகு அவன் பார்வையிலிருந்து பேருந்து மறைந்துபோனது.

***
சவுண்டுவின் இயற்பெயர் செல்லா. கொஞ்சமாகக் காது கேட்காது என்றாலும், பீடி, குடி, கூத்தி ஏதுமில்லையென்று தாயம்மாவுக்கு கட்டிவைத்தார்கள். சவுண்டுவின் தாய் இறந்த பிறகு தாயம்மா வீட்டிலேயே இருந்துவிட்டான். இருவரும் இளம் வயதுக்காரர்கள். அவர்களுக்கு தமிழ் மலர் பிறந்தது. பேர் வைத்தது சவுண்டுதான். பத்தாவது பாஸ் செய்திருக்கிறான். நன்றாகப் படிப்பான். நிறைய பத்திரிகைகள் படிப்பான். அரசியலும் வெளியுலகமும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவான். தமிழை அவ்வளவு சுலபமாகப் படித்துவிடுவான். அச்சுபோல எழுதுவான். காது பிரச்சினையால், அவனே தனது சொந்த முயற்சியில் அரசியலிலும், பொது விஷயங்களிலும் ஏடுபாடு காட்டுவான். கடிதம் எழுதச் சொல்லியும், மனுவெழுதச் சொல்லியும், கண்ணீர் அஞ்சலி எழுதச்சொல்லியும் தினம் யாராவது ஒருவர் வருவார்கள்.
வேலை செய்யும் நேரம் தவிர்த்து அவன் கையில் ஏதாவது செய்தித்தாள், பத்திரிக்கை அல்லது புத்தகம் இருந்துகொண்டே இருக்கும்.
யாராவது சந்தம் போட்டுப் பேச தயாராயிருந்தால் அவனும் அரசியல் பேசுவான். அவன் எல்லா அரசியல் கட்சிகளையும் குறை சொல்லிகொண்டேயிருப்பான். ஆனால் அவன் பேசுவதில் நியாம் இருப்பதாக பலபேர் புரிந்துகொண்டார்கள். பொதுப் பிரச்சினை என்றால் முன்னால் நிற்பான். வெள்ள நிவாரணம் போன்ற அரசு விவகாரங்களுக்கெல்லாம் கலெக்டர் ஆபீஸ் அடிக்கடி சென்று மனு எழுதிக் கொடுப்பான். அப்படி நிறைய காரியங்கள் சாதித்திருக்கிறான்.

நிறைய பேர் ஆச்சர்யப்படுவார்கள். கட்டிட வேலை செய்யுமிடத்தில் 'பெரியாள்' வேலை. தினம் உழைத்தால்தான் சாப்பாடு. காய்ந்துபோன தலை. உழைத்துத் தேர்ந்த இளைஞனுக்கே உரிய முறுக்கான உடம்பு. எப்போதும் சேவேறிய வேட்டி சட்டை. நல்ல குணம். அங்கிருக்கும் மக்களிடையே நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் முனுக்கென்று கோபம் வரும். இரண்டு முறை சென்று மனுக்கொடுத்தும் வேலையாகவில்லை என்றால், அது எந்த இடமாயிருந்தாலும் ரகளை பண்ணிவிடுவான். கலெக்டரையே பார்த்துக்கூட நேருக்கு நேர் விவாதித்திருக்கிறான். போலீஸ் ஸ்டேஷன் விவகாரமெல்லாம் சவுண்டுக்கு அத்துப்படி.

இப்படி 'சவுண்டு' விட்டு யாருக்கும் பயப்படாமல் பொதுச் சேவை செய்வதாலோ, அல்லது, காது சற்று மந்தம் என்பதால் அவன் அருகில் சென்று கொஞ்சம் 'சவுண்டு' போட்டுப் பேசுவதாலோ, அவனுக்கு 'சவுண்டு' என்ற பேர் நிலவிவிட்டது. செல்லா என்ற அவனின் இயற்பெயர் அனேகம்பேருக்குத் தெரியாது.

ஊரில் வேலை வாய்ப்புக் குறைந்தபோது சவுண்டுவும் தாயம்மாளும் சென்னை சென்று வேலை தேட முடிவெடுத்தார்கள். இப்போது நான்கு வருடங்களாக சென்னையில்தான். இவன் பெரியாள். அவள் சித்தாள். தினந்தோறும் வேலை கிடைத்தது. வருடம் ஒரு முறை தீபாவளிக்கு ஊருக்குப் போய், இரண்டு நாள் இருந்துவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்துவைத்ததை அங்கே கொடுத்துவிட்டு வருவார்கள்.

இப்போது தமிழ் மலருக்கு ஐந்து வயது. ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். தாயம்மா செலவுகளை இறுக்கிப் பிடித்து, ஒரு லட்சம் ரூபாயை மகள் பெயரில் பேங்கில் டெபாசிட் செய்திருக்கிறாள். ஓரளவு சந்தோஷத்துக்குக் குறைவில்லைதான். சவுண்டுவின் கோபத்தைத் தவிர்த்து!! வாரம் ஒரு முறையாவது ஏதாவதொரு பிரச்சினை. 'இதுக்கு ஏதாவது செய்யணும்,' என்று அவன் வாய் விட்டுச் சொன்னால், அன்று பிரச்சினைதான். சென்னை வந்த பிறகும் இதே கதை தொடர்ந்தது. ரேஷன் கடை, மளிகை, கட்சி அலுவலகம், நகராட்சி அலுகலகம், போலீஸ் ஸ்டேஷன், கிருஷ்ணாயில் கியூ என்று எதையும் அவன் விட்டுவைக்கவில்லை. ஒரு இடத்தில் அராஜகம் என்று கேள்விப்பட்டால் முதல் ஆள் இவன்தான். ஆனால் அனைத்து சண்டை சாட்சிகளும் பொது நலனுக்காக. தனக்கென்று கிடையாது. தன் சக கொத்தனாரை மேஸ்திரியும் கட்டிட உரிமையாளரும் அடித்துவிட்டர்கள் என்பதற்காக, அவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டான். போலீசும்கூட சவுண்டு பக்கம்தான் நியாயம் என்று அனேக முறை அனேக விஷயத்தில் சொல்லி இருக்கிறது!

முதலில் தமிழ் மலர். அப்புறம்தான் தாயம்மா. அவன் உயிர் மொத்தமும் தன் மகளிடத்தில் கிடந்தது. தாயம்மா பெருமூச்சு விட்டாள். 'ஐய்யோ கடவுளே, அந்த ஆளை சண்டை சச்சரவில்லாம இங்க கொண்டுவந்து விட்டுடேன்...".

***
நாகப்பட்டினம் இறங்கி, இன்னொரு பேருந்து பிடித்து, இதோ... காலை ஏழு மணிக்கு ஊருக்கு வந்துவிட்டாள் தாயம்மா. தமிழ் மலர் ஓடி வந்து கட்டிப்பிடித்துக்கொண்டது. "அம்மா... அம்மா, அப்பா எங்கம்மா? அப்பா வரல்ல? எப்ப வருவாரும்மா?"

"கொஞ்சம் நேரம் கழிச்சி அப்பா வந்துடுவாரு என் செல்லக்குட்டி." என்று குழந்தையை தூக்கிக் கொண்டாள்.

குடிசைக்குள்ளே சென்று அனைத்தையும் எடுத்து வைத்தாள். தமிழ் மலரின் சொக்காயை எடுத்துக் காட்டினாள். வாங்கி வந்த பொம்மைகளை எடுத்துக்கொடுத்தாள்.

"என்னம்மா, மருமவன் எங்கே இன்னும் வரலை?" என்று அவள் அம்மா கேட்டாள்.
"வந்திடுவாரும்மா. எனக்கு மட்டும்தான் பஸ் கெடைச்சது. அவர் லாரி கீரி புடிச்சு வந்துடுறதா சொன்னார்."

எட்டு மணிக்கு நாலைந்து பேர் ஓட்டமும் நடையுமாக ஓடிவந்தார்கள்.

"தாயம்மா, உன் வீட்டுக்காரன் சென்னை கோயம்பேட்டுல, எம்பிஎன்  பஸ்
மொதலாளிய நடு ராத்திரில, கழுத்தறுத்துக் கொன்னுட்டானாம். சவுண்டுவ போலீஸ் அடிச்சி இழுத்துட்டுப் போறத டிவி நியூஸ்ல காட்டிக்கிட்டே இருக்காங்க. பாவம் சவுண்டு. மூஞ்சியெலாம் வீங்கிப்போய் கெடக்குது.'

தாயம்மா வயிற்றிலடித்துக்கொண்டு, டிவி பார்க்க ஓடினாள்.

தமிழ் மலர் பைக்குள் தன் சின்னஞ் சிறு கைகளை விட்டு பலாப்பழம் தேடிக்கொண்டிருந்தாள்!






16.10.11

எருமை



இந்த இடத்தில் எருமை மாடுகள் சாலையைக் கடந்தால், மணி சரியாக எட்டரை என்று கடிகாரத்தை திருப்பி வைத்துக்கொள்ளலாம். நான் அலுவலகம் போகும் நேரமாகப் பார்த்துத்தான் ஒரு நாளும் தவறாமல் இந்த மாடுகள் சாலையைக் கடக்கும். காரின் பின் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, பல்லை நறநறத்து, முஷ்டியால் காரின் சீட்டில் ஓங்கிக் குத்தி, கோபத்தைக்காட்டுவேன்.

இன்றும் அதே மாடுகள், எத்தனை மெதுவாக போகவேண்டுமோ அத்தனை மெதுவாக, ஆடி அசைந்தாடி, அசை போட்டு, சில கழுத்துகளில் டிங் டிங் மணியொலியோடு, கன்றுக்குக் குட்டிகளின் தடுமாறும் குடிகாரனின் நடையோடு, பின்னால் 'ஹேய், தேய், ஓடு... ஓடு...' என்று கூப்பாடு போட்டபடி ஒரு கிழவன் தொடர்ந்து வர, சாலையைக் கடந்துகொண்டிருந்தன. காரின் ஹாரன் ஒலித்துக்கொண்டேயிருந்தும், ஒரு எருமை, காரின் பம்பரை உரசியபடி, அது தண்ணீராய்க் கழிந்த சாணியை அதன் வாலால் முன் கண்ணாடியில் விசிறி அடித்தது. என்னை தினந்தோறும் வந்து கூட்டிச் செல்லும் அலுவலகத்துக்கான வாடகைக் கார் அது. வண்டியிலிருந்து டிரைவர் இறங்கிப் பார்த்தபோது, ஆயுதபூஜைக்கு சந்தனம் அப்பியது போல இருந்தது.

"நேத்துதான் சார் வாட்டர் வாஷ் பண்ணினேன். வண்டியே நாசமாப் போச்சு. கொஞ்சம் இறங்கிக்கங்க சார். தொடைச்சிட்டு கொண்டுபோகலாம். அப்படியேவும் ஓட்டமுடியாது. விஷன் மறைக்கும்" என்று டென்ஷனான குரலில் என்னிடம் சொன்னான் கேசவன்.

"பத்து மணிக்கு எம்டி வர்றார்யா. சீக்கிரம் ஆகட்டும். என்னதிது...? தெனத்துக்கும் இங்க பெரும் பாடாய்ப்போகுது" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, இடது கை மணிக்கட்டில் சாப்பாட்டுத் தூக்கை மாட்டிக்கொண்டு, வலக்கையில் மூங்கில் குச்சியுடன் அந்த பெரியவர் என்னைக் கடந்து சென்றார். இடுப்பில் ஒரு துண்டு. தலையில் துண்டால் இறுக்கிய தலைக்கட்டு. ஒரு எழுபது வயதுக்கான உடல். ஆனால் தளர்ந்துவிடாத தசைகள் அவரின் உழைப்பால் இறுகியிருந்தது.

பின்னால் நின்ற வாகன ஓட்டிகளெல்லாம் சகட்டு மேனிக்கு அவரைத் திட்ட ஆரம்பித்தார்கள். எனக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான் அவரைக் கோபமாகக் கத்திக் கூப்பிட்டேன்.

"யோவ் பெரியவரே, என்னையா இது, தெனத்தன்னிக்கும் இதே தொந்தரவாப்போச்சு. போதாக் குறைக்கு, இன்னைக்கு உன் மாட்டை விட்டு, காருக்கு சந்தனம் பூசிட்ட?! சே...!"

"அந்த மூதி ஏதோ மைக்கா கவர தின்னுட்டு பீசுதுங்க. நாளைக்கு சரியாப் போகும்" என்று சொல்லி விட்டு மேலும் நடக்கப் பார்த்தார்.

"ஏன்யா இந்த ஆபீசு நேரத்துல கழுத்தறுக்கற? வேற நேரமாப் பார்த்து ஓட்டிக்கிட்டுப் போகவேண்டியதுதானே?"

இன்னொருத்தர் கேட்டார் : "இந்த ரோடைக் கிராஸ் பண்ணிப்போய்த்தான் மாடு மேய்க்கணுமா, உனக்கு அறிவே கிடையாதாய்யா?"

இன்னொருத்தர் : "மூஞ்சியப் பாத்தியா அந்தாளுக்கு. இவரோட இன்னோவா காரை நாசனம் பண்ணிட்டான். யோவ், மாடுங்கள வச்சிக்கிட்டு இந்த ரோடக் கிராஸ் பண்ணக்கூடாது தெரியுமா? தூக்கி உள்ளப் போட்டுருவேன்."

இப்பொழுது நின்று, அந்த ஆளை நெருங்கி வந்தார் அந்தப் பெரியவர்.

"என்ன சொன்ன? ஜெயில்ல போடுவியா? அறுபது வருஷமா இந்த வழியாத்தாண்டா மாடு போவுது; வருது. ரோடு இப்பப் போட்டது. இதுக்காக கவுருமெண்டு நெலம் எடுத்துட்டு, இன்னும் எங்க ஜெனங்களுக்கு காசுகூட கொடுக்காம ஏமாத்துது. எங்களோட நெலத்துல நின்னுக்கிட்டு, என்னத் தூக்கி உள்ளப் போடுவியா?" என்று சொல்லி பளார் என்று கன்னத்தில் ஒரு அறை கொடுத்தார்.

"ஓடிப்போய்டு. இதுக்குமேல பேசினா, வெட்டி பொலி போட்டுறுவேன்." என்று திரும்பி மாடுகளை அதட்டிக்கொண்டே மெல்ல நகர்ந்தார்.

"நான் வக்கீல் சார். என்னையே அடிச்சுட்டான். யாராவது கேக்கக்கூடாதா?" என்று நியாயம் கேட்கத் தொடங்கியபோது ஒவ்வொருவராய் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றார்கள்.

என்னுடைய டிரைவர் கூட சற்று பீதியடைந்தாற்போல தோன்றியது. "ஆச்சு சார், போய்டலாம் வாங்க. நமக்கேன் வம்பு? அப்புறம் உள்ளூர் பிரச்சினையாயிடும். நீங்க வேற இந்த ஊர்லதானே இருக்கீங்க? ரொம்ப பேசிக்க வேண்டாம்."

நான் கைக்குட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டு, காரில் ஏறப் போகும்போது, அந்த வக்கீல் என்னருகில் விரைவாக வந்தார். கன்னம் சிவந்துபோயிருந்தது.

"சார், கொஞ்சம் நில்லுங்க. என்ன சார், படிச்சவுங்க நீங்க. எல்லாத்தையும் கிட்டதிலேர்ந்து பார்த்துட்டு போய்ட்டே இருந்தா எப்படி? உங்களுக்காகத்தானே நான் இப்படிப் பேசினேன்?" என்று கலவரமான குரலில் கேட்டார். "இதுக்கு ஏதாவது செய்தாகணும். எவ்வளவு திமிரு இருந்தா, ஒரு மாடு மேய்க்கிற நாயி என்னை கை நீட்டி அடிக்கும்? உள்ளூர்க்காரன்னு நெனைப்பு. கூப்பிட்டா பத்துபேர் வந்துருவாங்கன்ற தைரியம். அதான் கை நீட்டுது. பெரியவராச்சே, பொட்டுனு போயிடுமேன்னு திருப்பியடிக்கவும் பயமா இருக்கு. ரொம்ப அசிங்கமாப் போச்சு சார்" என்று பரிதாபக் குரலில் என்னைப் பார்த்தார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் முகத்தைத் திருப்பிகொண்டு, "கேசவா, போப்பா, டைம் ஆயிடுத்து" என்று கதவை சாத்திக்கொண்டேன். சற்று தொலைவு சென்றதும் பின் பக்கம் திரும்பிப் பார்த்தபோது, அந்த வக்கீல் மட்டும் தனிமையில் விடப்பட்டு, எங்களைக் காட்டி கையை நீட்டி நீட்டி ஏதேதோ கத்திக்கொண்டிருந்தார்.

***

இந்த இடம் நகரத்து அடர்த்தி குறைந்து, கிராமாய் தொடங்கும் பகுதி. நகரத்தில் கால் கிரவுண்டு கூட விற்பனைக்கில்லை என்னும் நிலவரமான பி
றகு, வீடு கட்ட இடம் வாங்கிப்போடும் இடமாகிப்போனது இந்த ஊர். நல்ல தண்ணீீர். காற்று. கிரவுண்டு முப்பது லட்சம். சாதாரண ஆள் வாங்க முடியாது. கையில் கருப்போ வெள்ளையோ, அல்லது லோன் எலிஜிபிளிடியோ இருக்கவேண்டும்.

இங்கேயும்கூட ஓரளவுக்கு வீடுகள் நிறையவே கட்டப்பட்டு குடி வந்தாயிற்று. அதிகபட்ச வீடுகள் கட்டுமானத்தில் இருந்தன. நிறைய அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகள். சிலபேர் இரண்டு கிரவுண்டுகளாக இடம் வாங்கி, ஒரே ஒரு பங்களா வீடாகக் கட்டி குடிவந்திருக்கிறார்கள். அதுமாதிரி வீடுகளை நீங்கள் அண்ணா நகரிலோ அல்லது அபிராமபுரத்திலேயோ கூட பார்க்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன்புதான், இந்த ஏரியாவை கார்ப்பரேஷனில் சேர்த்திருக்கிறார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக 'ட்ரெய்னேஜ்' வேலை கூட நடந்துகொண்டிருக்கிறது.

நான் இந்த ஏரியாவுக்கு குடி வந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. ஒரு அபார்ட்மெண்டில், நாலாவது மாடியில் டபுள் பெட் ரூம் வீடு. ஒரு அக்கவுண்டன்டின் ரொம்ப நாள் கனவு. தம்பிரான் புண்ணியத்துலே சிட்டிக்குள்ளே இல்லேன்னாலும், ஏதோ நகரத்தை ஒட்டியாவது கெடைச்சுதே. நாளைக்கு இதுவும் ஒரு சிட்டி ஆகிவிடாதா என்ன?

இந்த வீட்டு கிரகப் பிரவேசத்துக்கு கும்பகோணத்திலிருந்து வந்த எனது தாத்தா, கண்டதையும் தின்றுவிட்டு, பீயும் மூத்திரமுமாக, இங்கேயே படுத்த படுக்கையாகிவிட்டார். நிலைமை சீரியஸ் ஆகி இன்றோ நாளையோ என்று இழுத்துக்கொண்டிருந்தது. எங்களுக்கு இந்தப் புத்தம் புதிய வீட்டில் ஏதும் நடக்கக் கூடாது என்று வேண்டாத தெய்வமில்லை. இதை அந்தக் கும்பகோணத்து அண்ணன் புரிந்து கொள்ளவேயில்லை. 'புது வீடாவது மண்ணாங்கட்டியாவது? கிழவன் அங்கேயே கிடந்து சாகட்டும். எத்தனை நாள் நான் மட்டும் வைத்துக்கொண்டு மாரடிப்பது.' என்பது என் அண்ணன்காரனின் வேண்டுதல். நான் அப்போது வாடகை வீட்டில் இருந்ததால், அவன்தான் இத்தனை ஆண்டுகளாய் எங்கள் தாத்தாவைப் பார்த்துக்கொண்டான். இனிமேல் முறை வைத்துவிடுவான். இங்கு ஆறு மாதம்; அங்கு ஆறு மாதம்.

'நாராயணா, கிழவன் உயிர் இங்கே போகாமல் பார்த்துக்க' என்று வேண்டாத நாளே இல்லை. 'கும்பகோணம் பழைய வீடு; அங்கே போனால், ஊருக்கு கொண்டுபோகிற செலவும் மிச்சம்' என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, என் மனைவி ஓடிவந்தாள்.

"அவருக்கு இழுக்குதுங்க. பயமாயிருக்கு."

நான் ஓடிச் சென்று பார்த்தபோது கண்கள் குத்திட்டிருந்தன. பொக்கை வாய் மேலும் கீழுமாய் மென்றபடி இருந்தது. இதற்குள் அக்கம்பக்கதினர் வந்துவிட்டார்கள். அந்த அறையிலிருந்து வந்த நாற்றத்தால் யாரும் கிட்டத்தில் போகத் தயங்கினார்கள்.

"உயிர் போரதுக்கு முன்னாடி, யாராவது வாயிலே பால் ஊத்துங்க; இல்லைன்னா சக்கரத் தண்ணியாவது ஊத்துங்க," என்று ஒரு பெண் பதற்றப்பட்டார்.

"நீ போடி, எனக்கு பயமாயிருக்கு" என்று என் மனைவியைத் தள்ளிவிட்டேன்.

"எனக்கென்ன தலையெழுத்தா? ஏன், வாரிப் போட்டதெல்லாம் பத்தாதா? இது வேறயா?" என்று எல்லோர் முன்னாலும் இரைந்து பேசி, தன் ஆதங்கத்தைக் காட்டினாள். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள்.

"நீங்க போங்க. பேரனாயிருந்துகிட்டு பயப்படறீங்க?" என்று என் காதருகே யாரோ சொன்னர்கள்.

நீண்ட தயக்கத்துக்குப் பிறது, ஒரு கிண்ணத்தில் சர்க்கரைத் தண்ணீரோடு கிட்டத்தில் போனபோது தாத்தா அசைவற்றுக் கிடந்தார். இறப்பதற்கு முன்னால் அந்தக் கட்டிலையே பீ மூத்திரத்தால் குழப்பிவிட்டிருந்தார். நாற்றம் சகிக்க முடியவில்லை.
இதற்குள்ளாக என் கையில் ஒரு தேங்காயும் கற்பூரமும் திணிக்கப்பட்டது. தேங்காய் உடைத்து தலைமாட்டில் வைப்பதற்குள் தலை கிறுகிறுத்து, வாந்தி குமட்டியது.

"மேல ஆகவேண்டியதப் பாருங்க," என்று கூட்டம் கலைய ஆரம்பித்தது.

போன் ஒலித்து எடுத்த போது சி.இ ஏகத்துக்கு எகிறினார்.

"இப்பத்தான் கேசவன் விவரம் சொன்னான். என்னைய்யா நீ, ஒரு எம்என்சி சீஃப் அக்கவுண்டன்ட் மாதிரியாப் பேசுற? முப்பத்தாறு லட்சம் டிடி எடுத்து அனுப்பினாத்தான் கன்சைன்மென்ட் யு எஸ்லேருந்து வந்து சேரும். லாஸ்ட் டேட். கீழே கேசவன் நிக்கறான். கெளம்பிவா. மதியத்துக்கு மேல வீட்டுக்குப் போய்டுய்யா..."

"சார், சாவிய வேணும்னாகூட கேசவன்கிட்ட கொடுத்தனுப்புறேன். ரெண்டே நாள்ள, இத எடுத்துப்போட்டு, ஆபீஸ் வந்துடறேன் சார்."

"இங்கப் பாருங்க. ஆபீஸ் ஃபார்மாலிடீஸ் எல்லாம் உங்களுக்குத்தான் தெரியும். ஒரு ஒருமணி நேரமாவது வந்து முடிச்சிக்கொடுத்துட்டு போயிடுங்க. அதுக்கு அப்புறம்வேணா, ஒரு நாலு நாள் கூட லீவு எடுத்துக்கங்க." என்று சொல்லிவிட்டு போன் துண்டிக்கப்பட்டது.

என் மனைவி என்னை முறைத்தாள்.

"கும்பகோணத்து ஆளுங்களுக்கெல்லாம் போன் பண்ணி சொல்லிட்டு, இத இங்கிருந்து ஊருக்கு கொண்டுபோகப் பாருங்க. குழந்தைங்க வந்தா பயப்படும். ரொம்ப நேரம் வச்சிருக்ககூடாது. ஏற்கெனவே நாறுது"

"கொஞ்சம் கோவப்படாம கேளு. எனக்கு நேரமில்ல. நீயே போன் பண்ணி எல்லாருக்கும் சொல்லிடேன். கும்பகோணம் போக ஒரு வண்டியும் ஏற்பாடு பண்ணிடு. இதோ போய் உடனே வந்துடறேன். சி.இ ரொம்ப கத்துரான்." என்று சொல்லிகொண்டே நான் கீழே இறங்கிப் போய்விட்டேன்.

***

போன வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு, நாலு நாள் லீவு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மணி நான்கு ஆகிவிட்டது. வாசற்கதவை சாத்திக்கொண்டு, வெளியே வந்து என் மனைவியும் குழந்தைகளும் உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும், சட்டையை பிடிக்காத குறையாக என் மனைவி எழுந்து வந்தாள்.

"உள்ள இருக்க முடியலை. நாத்தம் குடலைப் பிடுங்குது. குழந்தைங்க வேற ரொம்பவும் பயப்படுதுங்க. உங்க அண்ணன், எப்படியாவது இங்க கொண்டுவந்துடுங்க என்று சொல்லிட்டு போனை வச்சுட்டார். ஆம்புலன்சுக்கு போன் செய்தா யாரும் அவ்வளவு தூரம் வரமாட்டேங்கராங்க." என்று அழுதுகொண்டே சொன்னாள்.

"கொஞ்சம் இரு." என்று சொல்லி கீழே எட்டிப் பார்த்தேன். கேசவன் திரும்பிச் செல்ல காரைத் திருப்பிக்கொண்டிருந்தான்.

"கேசவா, நில்லுப்பா. ஒரு உதவி செய்யணும். பிணத்தை இங்கிருந்து கும்பகோணம் கொண்டுபோக ஏதாவது வண்டி ஏற்பாடு செய்து தர முடியுமா?" என்று கேட்டேன்.

நீண்ட நேரம் யோசித்தான். பிறகு யாரிடமோ பேசினான்.

"சார், எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். பிணத்தை வைக்கிற பிரீசர் கடை வைத்திருக்கிறார். அவரிடம் கேட்டேன். ஒரு பழைய மகீந்திரா வண்டி இருக்காம். அதுல கொண்டு போகலாம்; ஆனா ஏத்த இறக்க நீங்கதான் பார்த்துக்கணும் அப்படீன்னு சொல்றார். என்ன சொல்ல?" என்று கேட்டு போனை லைனிலேயே வைத்திருந்தான்.

"பிரச்சினையே அதானேப்பா, நாலாவது மாடிலேருந்து கொண்டுவரணும். என்ன பண்றதுன்னு தெரியலை." என்று தயங்கினேன்.

"சரி. வேண்டாம்னு சொல்லிடவா?"

"இல்ல, இல்ல, வரச்சொல்லு." என்று பதற்றத்துடன் சொன்னேன்.

கேசவன் பேசிவிட்டு சொன்னான். "வேன் ஒரு மணி நேரத்துல வந்துடும். இருபதாயிரம் ரேட். குடுத்துடுங்க. வரட்டுமா?" என்று விவரம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

"இறக்கி ஏத்த ஆள் கெடைக்குமா?" என்று கேட்பதற்குள் கேசவனின் கார் கிளம்பிப்போயிருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து கேசவன் சொன்ன வேன் வந்தது. வண்டி ஓட்டிவந்த டிரைவர் லேசான தள்ளாட்டத்திலிருந்தான்.
வேன் டிரைவரும் மேலே வந்து பார்த்துவிட்டு, "என்னால இறக்கமுடியாதுங்க," என்று கூறிவிட்டான்.

ஆறு மணிவரையிலும் என்னால் பிணத்தை கீழே இறக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப்பார்ட்மெண்ட் ஆட்களெல்லாம் கதவை மூடிவிட்டு உள்ளேயே கிடந்தார்கள்.

உதவிக்காக, தெருவையே வெறித்து உட்கார்ந்திருந்த நேரத்தில், தினமும் பால் ஊற்றும் பையன் சைக்கிளில் வந்தான். அவனாகவே மாடி ஏறி வேகமாக எங்களிடத்தில் வந்தான்.

"அடப்பாவமே, தாத்தா செத்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்."

"ஆமாப்பா, அவர சொந்த ஊருக்கு கொண்டுபோகணும். வண்டி வந்திருச்சி..." என்று தயங்கினேன்.

"என்ன தயங்கறீங்க? வண்டியில ஏத்தணுமா?" என்று கதவை அவனே திறந்து உள்ளே போய் பார்த்தான்.

"ரொம்ப கலீஜா இருக்கே. கொஞ்சம் இருங்க, தோ வர்றேன்" என்று சொல்லி கீழே இறங்கி சைக்கிளில் விருட்டென்று போனான்.

"சட்டுபுட்டுன்னு ஆவட்டும். இப்பக் கிளம்பினாத்தான் காலம்பிரயாவது போய்ச் சேரலாம்." வேன் டிரைவர் கத்த ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் பால்காரன் திரும்பி வந்தான்.

"இது எங்க அப்பா" என்று பின்னால் வந்த பெரியவரைக் காட்டினான்.

அவரேதான். எட்டரை மணிக்கு மாடு ஓட்டிக்கொண்டு போவாரே, அதே பெரியவர்தான்.

"ஓ... நீதானா. சரி இருக்கட்டும்." என்று என்னைப் பார்த்து சொல்லிவிட்டு, பையனோடு உள்ளே சென்றார்.

"நீங்க அப்படி கொஞ்சம் தள்ளி வெளியே நில்லுங்க. கொழந்தைகள கீழ அனுப்பிடுங்க. நான் ரெடி பண்ணிடுறேன்." என்று எங்களை வெளியில் அனுப்பிவிட்டார்.

பையன் மேலும் கீழுமாக ஓடி வைக்கோல் கம்பு ஓலைத்தட்டி என்று ஏதேதோ உள்ளே கொண்டுபோனான்.

கால் மணி நேரத்தில் நீள வாக்கில் நேர்த்தியாக ஓலைத் தட்டி வைக்கோலால் சுற்றப்பட்டு, முகம் மட்டும் வெளியில் தெரியுமாறு வைத்து, அப்பனும் மகனுமாகவே படிகள் வழியாக பிணத்தை இறக்கி, வேனுக்குள் ஏற்றிவிட்டனர்.

"வீட்டையெல்லாம் பூட்டிக்கிட்டு, கெளம்புங்க. பார்த்துப் போகணும். என்னப்பா டிரைவர்... தண்ணியா?" என்று கேட்டுக்கொண்டே பையனுடன் கிளம்பிப் போய்கொண்டேயிருந்தார்.

***

முடிந்தது. தாத்தாவை நீர் நெருப்பாக்கி, செலவுக்கணக்கையெல்லாம் தீர்த்துவிட்டு, காரிய நாள் குறித்துக்கொண்டு, கும்பகோணத்திலிருந்து வீடு திரும்பியாகிவிட்டது. வீட்டைக் கழுவி மெழுகி, நிமிர்ந்து நிற்கும்போது தாவு தீர்ந்துவிட்டது. இருந்தாலும் கிழவன் போய்ச் சேர்ந்ததில் எங்களுக்கு பெரிய நிம்மதி; விடுதலை. ஒரு விதத்தில் மகிழ்ச்சியும்கூட.

மறு நாள் பால்காரப் பையன் வந்தான். "முடிஞ்சுதா... என்ன செய்யறது? என்னைக்காவது ஒரு நாள் போய்த்தானே ஆகணும். இதுக்கெல்லாம் வருத்தப்படாதீங்க." என்று எங்களைச் சமாதானப் படுத்தினான்.

"வாப்பா தம்பி, உன் உதவிய மறக்கவே முடியாது." என்று சொன்ன என் மனைவி என்னைப் பார்த்து
"எவ்வளவு கொடுக்கணும்னு கேளுங்க," என்று சொல்லிவிட்டு, பாத்திரம் எடுத்துவர உள்ளே சென்றாள்.

"சரி தம்பி, எவ்வளவு கொடுக்கணும்?" என்று நான் கேட்டேன்.

"பால்காசுக் கணக்கா, அது அஞ்சாந்தேதிதானே கொடுக்கணும்?" என்று பால் ஊற்றிக்கொண்டே சொன்னான். "வர்றேன் சார்" என்று சொல்லி போய்விட்டான்.

"ஏங்க. இந்தமாதிரி வேலையெல்லம் யாரும் சும்மா செய்து தருவாங்களா? எதுக்கும் அந்தப் பெரியவர் வீட்டுக்குப்போய் அவரைப் பார்த்துப்பேசி, ஏதாவது கொடுத்துட்டு வந்துடுங்க. அவர் வீடு பெருமாள் கோயில் தெருவிலதான் இருக்காம்." என்று மனைவி சொன்னாள்.

"ஆமாமாம். கிழவர் வேறு ரொம்ப முன்கோபி. அப்புறம் வீட்டு வாசலில் வந்து சத்தம் போடுவார். அதனால் ஆபீஸ் போய்ட்டுவந்து ஒரு ஏழு மணிக்கு போய் பார்த்து கொடுத்துட்டு வர்றேன்." என்றேன்.

அலுவல் வேலை முடிந்து வீடு வந்து சேர்ந்தாயிற்று. பெரியவரைப் பார்க்கப் போகவேண்டும். இன்று அவர் முகத்தில் விழிக்கவே தயக்கமாக இருந்தது.
நான் அவரை அன்று அப்படிப் பேசியிருக்கக்கூடாது. என்ன இருந்தாலும் வயதில் பெரியவர்.

ஐநூறு ரூபாய்த் தாளை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, எங்கள் நகரைக் கடந்து, பெருமாள் கோயில் தெருவை விசாரித்து, அவர் இருக்கும் வீட்டை விசாரித்தேன்.

"செங்கேணி தாத்தா வீடா? அதோ ஒரு வேப்பமரம் தெரியுதுல்லே, அதான்."

அந்த வீடுக்கு இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் அப்பார்ட்மெண்டுகள். இதன் நடுவில் சுமார் ஒன்றரை கிரவுண்டு அளவில் காம்பவுண்டு இல்லாமல் பனையோலையால் ஆன தடுக்குகள் முகப்பில் இருந்தன. ஒரு மூங்கில் தட்டிக் கதவு. அதை விலக்கிக்கொண்டு உள்ளே போனால், இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒழுங்கற்ற நிலையில் நான்கு சிறிய ஓலைக் குடிசைகள். ஒரு நாட்டு ஓடு போட்ட பழைய மண்சுவர் வைத்த வீடு. ஒரு ராட்டினம் போட்ட கிணறு. அதைச் சுற்றிலும் சேறும் சகதியும். அதன் பக்கதில் பனையோலை வேய்ந்த மாட்டுக் கொட்டகை. மிகப் பெரியது. கொட்டகை கொள்ளாத மாடுகள். இங்கும் அங்குமாய் துள்ளித்திரியும் கன்றுக்குட்டிகள். ஒரு பத்து பதினைந்து ஆடுகள். சிதறியோடிய கோழிகள். ஒரு நாலுசக்கர டயர் வண்டி. ஏர்க்கலப்பைகளும், பரம்புகளும், மண்வெட்டி கடப்பாரைகளும், எல்லா வீட்டுச் சுவர்களிலும் சாய்ந்துகிடந்தன. வேப்ப மரத்தடியில் பிரம்மாண்டமான எருதுகள் கட்டப்பட்டு, மணிகளை ஆட்டியபடியே வைக்கோலைத் மேய்ந்துகொண்டிருந்தன. அதன் பக்கத்தில் தவிடு வைக்க ஒரு பெரிய மண் தொட்டி இருந்தது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் இங்கும் அங்கும் வேகமாக நடந்து போவதும் வருவதுமாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் விளித்து, ஏதாவதொரு வேலையை செய்துகொண்டேயிருந்தார்கள். எங்கும் இரைச்சலாய் இருந்தது.

அந்தப் பெரியவர் கிணற்றங்கரையில் குளித்துக்கொண்டிருந்தார். யாரோ ஒரு பெண் அவருக்கு முதுகு தேய்த்து விட்டுக்கொண்டிருந்தாள். அது அவரது மகளோ அல்லது மருமகளோ தெரியவில்லை.

"பெரியவரைப் பார்க்கணும்," என்று அந்த இரைச்சலில் சத்தமிட்டு கூறினேன்.

"சித்த அந்த வண்டிமேல உட்காருங்க. மாமனார் குளிக்கிறார். வந்திடுவார்." என்று அந்த முதுகு தேய்த்துக்கொண்டிருந்த பெண் கூறினாள்.
"டேய் பசங்களா, சாருக்கு கொஞ்சம் எடம் விடுங்கடா," என்று அந்த வண்டியின் மீது குதித்து விளையாடிக்கொண்டிருந்த வாண்டுகளுக்கு கட்டளை போனது. அவர்களின் விளையாடில் நான் இடைஞ்சலாய்ப் போனாதால் எனக்கு இடம் கொடுத்துவிட்டு வேறு இடத்துக்கு விளையாட அவர்கள் போய்விட்டார்கள்.

சிறிது நேரம் கழித்து, முதுகை துண்டால் துடைத்தவாறே அந்தப் பெரியவர் வந்தார். கோவணம் காட்டியிருந்ததற்காக அவர் சங்கோஜப்பட்டதாகத் தெரியவில்லை.

"ஓ, நீதானா, இருக்கட்டும், இருக்கட்டும்" என்று அந்த ஓட்டு வீட்டின் வாசலில் விரிக்கப்பட்டிருந்த கோரைப் பாயில் உட்கார்ந்துகொண்டார்.

"என்ன, எல்லாம் ஆச்சா. என்ன பண்றது. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?" என்றார்.

"எல்லாம் முடிஞ்சுது. ஆனா,உங்களுக்குத்தான் நான் ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஊர்ல ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கிறதுதானே? நாளைக்கு நான் போய்ட்டா நீ வந்து தூக்க மாட்டியா?" வயதானவர்களுக்கே உரித்தான சன்னக்குரலில் சொன்னார். "இங்க இதெல்லாம் சகஜம்!"

"இருந்தாலும்..... அதுக்காக யாரும் சும்மா உதவி செய்வாங்களா? அதுவும் இந்தக் காலத்துல? அதான் உங்களப் பார்த்து குடுத்துட்டு போலாம்னு வந்தேன்," என்று நான் கொண்டுவந்த அந்த ஐநூறு ரூபாயை அவர் முன்னால் நீட்டினேன்.

நீண்ட நேரம் மௌனமாயிருந்தார். அவர் முகத்தில் கோபம் வரும்போலத் தெரிந்தது.

"இப்படி கொடுப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா, நான் வந்திருக்கவே மாட்டேன்," என்று என்னை நிமிர்ந்து பார்த்தார். "இதெல்லாம் ஊர் வழக்கமில்லை."

நான் தயக்கத்தோடு நின்றுகொண்டிருந்தேன்.

"வேண்டாம்யா. அதை மடிச்சு உள்ளாற வை. காப்பி குடிக்கிறயா?"

"....."

"மோரு?"

"இல்ல, வேண்டாம் பெரியவரே... நீங்க ஏதோ கோபத்துல இருக்கிறமாதிரி படுது."

"எதுக்கு?"

"ஒரு வாரத்துக்கு முன்னால, நீங்க மாடு ஓட்டிக்கிட்டு வரும்போது நடந்த சின்ன பிரச்சினைதான். நான் உங்களை அப்படிக் கேட்டிருக்கக் கூடாது."

இதற்கிடையில் ஒரு தட்டு நிறைய சாதமும் ஒரு கிண்ணத்தில் குழம்பும் கொண்டுவந்து அவர் முன்னால் வைக்கப்பட்டது.

"சாப்பிடறியா?"

"வேண்டாம்!"

தட்டை இழுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, சாதத்தின் நடுவில் ஒரு குழி தோண்டினார். அதில் குழம்பை ஊற்றி, தன் வலது கை முழுவதையும் விட்டு பிசைந்து, கை நிறைய உருண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். மென்று விழுங்கிய பின் சொன்னார் :

"நான் நடக்கத் தெரிஞ்சதிலேருந்து மாடுதான் மேய்க்கிறேன். இப்போ, ரோட்டை தாண்டி அந்தாண்ட போனா, அங்கதான் தாங்கல் இருக்கு. மாடுகள ஓட்டியாந்து மேயவிட்டு, சாயந்திரம் ஆச்சின்னா, தாங்கல் குட்டையில கழுவி அதே ரோட்டு வழியாத்தான் வீட்டுக்கு திரும்பி வர்றேன். ரோடுன்றது இப்பத்தான் வந்தது. அதுவும் இந்த பை-பாஸ் தேவையேயில்ல. அப்போல்லாம் அது ஒத்தையடிப்பாதை. ரெண்டு பக்கமும் சவுக்குத்தோப்பும், பனந்தோப்புமாத்தானிருக்கும். சாராயம்கூடக் காய்ச்சுவாங்க.

அங்க ஒரு கா காணி எங்களுக்கு சொந்தமாயிருந்தது. ஏதோ பை-பாஸ் ரோடுக்குன்னு சொல்லி புடிங்கிட்டாங்க. நெறைய பேருகிட்டேருந்து பறிச்சிக்கிட்டாங்க. ஒத்த பைசா இன்ன வரைக்கும் குடுக்கலை. அந்தப் பக்கம் ரோடு இருக்குதுன்றதுக்காக பயந்துக்கிட்டு மாடுங்களை எங்க கொண்டுபோய் மேய்க்கறது? வேற மேச்ச நெலம் இல்ல. எல்லாத்தியும் பிளாட்டு போட்டுட்டாங்க. நீங்க பாரதியார் நகரா? உங்களுக்கு இதெல்லாம் என்னத் தெரியப் போகுது? நீங்க வீடு கட்டி குடியிருக்கிற அந்த எடம் பாதி ஏரி, பாதி சுடுகாடு. மண்ணத்தள்ளி, பட்டா வாங்கி, உங்களுக்கு கட்டிக்குடுத்துட்டானுங்க.

எங்களுக்கு வெவசாயம், மாடு மேய்க்கிறதத் தவிற எதுவும் தெரியாது. நெலத்தப் பிடுங்கிட்டப்புறம், எங்களுக்கும் கொஞ்சம் கிலிதான். அதான், இப்போ எங்க பசங்க வேற வேலைக்குப் போறாங்க. அதோ அந்த வீடு பெரியவனோடது. பிளம்பிங் வேல செய்யுறான். இந்த வீடு இன்னொரு பையனோடது. லாரி கிளீனராய்ப் போய்ட்டான். அதோ அந்த வீடு இன்னொருத்தனோடது. போர் போட்டுக் கொடுக்கற வேலை. அதோ இருக்கே அந்த வீடு இன்னொருவனோடது. அவன் லோடு வண்டி ஓட்டுறான். கடைசீ பையன் பால் ஊத்தறான். என்னோடதான் இந்த ஓட்டு வீட்டிலே இருக்கிறான். இந்த வீடுதான் என் தாத்தன் பூட்டன் பொறந்து செத்த வீடு. மவளுங்க மூணு பேர கட்டிகொடுத்திருக்கேன். நல்லாத்தான் இருக்காங்க. இதோ வெளையாடுதுங்களே, இதுங்க என் பேரப் பசங்க. ஒரே சமையல், சாப்பாடு. படுக்கறதுதான் வேற வேற.

இதோ இருக்கறமே, இந்த இடம் எங்க பூர்வீக குடியிருப்பு. கிராம நத்தம். தெனத்துக்கு ஒருத்தன் வர்றான். 'பெரியவரே, இந்த எடத்தை குடுத்துடேன். இத்தினி கோடி தர்றேன், அத்தினி கோடி தர்றேன்' அப்படீன்னு தொந்தரவு பண்றானுங்க.

காசு இருந்து என்னத்தக் கிழிக்க? பணத்த வாங்கி பொட்டிலதான் பூட்டிக்கணும். இதே இப்ப சாப்பிட்டதத்தானே அப்பவும் சாப்பிடப்போறோம்? என்ன, கொஞ்சம் சொகுசா இருக்கலாம். ஆனா அந்த சொகுசு எங்க யாருக்கும் ஒத்துக்காது. எங்களுக்கு கை இருக்கு, காலிருக்கு உழைக்க. உழைக்கலைன்னா எங்க குடும்பத்துக்கு நோவு புடிச்சுக்கும். உழைச்சே பழக்கப் பட்டவங்க நாங்க. எழுவது வயசு எனக்கு. ஒரு ஊசி போட்டதில்ல. பத்து பேர அடிச்சு சாய்ச்சுடுவேன். இந்தா... என் கையப் பாரு... எப்படிக் காய்ச்சுக் கெடக்கு.

என்னை உள்ள தள்ளிடுவேன்னு சொன்னானே, அவன் ஒரு அ
றையோட தப்பிச்சான்! யாருக்குத் தம்பி நாங்க பயப்படணும்? நான் என்ன திருடிட்டேனா? ரோடுல மாட்ட ஓட்டிக்கினு போகக்கூடாது அப்படீன்னு கூட ஒரு சட்டம் போட முடியுமா? அப்பிடிப் போட்டா, நான் நேரா கோர்ட்டுக்கே போயி, ஜட்ஜோட சொக்காய புடிச்சிடமாட்டேன்?. நான் எதையும் விட்டுக்கொடுக்கறதில்லை. எங்களுக்கு நெலத்தோட நஷ்ட ஈடு சரியாக் கொடுக்கலைன்னா, ஒரு நாளைக்கு அந்த ரோடு குறுக்கால படுத்திடுவோம். அப்ப எப்படிப்போவீங்க நீங்க?"

சாப்பிட்டு முடித்து, தட்டில் கைகழுவி, பாயிலிருந்து தள்ளி வைத்தார்.

"காலம் மாறுது, தம்பி. அதுக்கேத்தாமாதிரி சட்டுன்னு, எங்களை மாத்திக்க முடியலை," என்று ஒரு அழுக்குத் தலையணையை இழுத்துவைத்து, அதன் மீது சாய்ந்துகொண்டார். விளையாடிக்கொண்டிருந்த அத்தனை பிள்ளைகளும் மொத்தமாக, கோவென்று குரலெழுப்பியவாறு, பெரியவர் மீது வந்து விழுந்தன.

"அட என் கண்ணுங்களா..." என்று குழந்தைகளை அணைத்துக் கொஞ்சினார். "இண்ணைக்கு நீங்க நல்லா விளையாடினீங்களா?"

பிரமித்துப்போய் அமர்ந்திருந்தேன் நான்.

இதற்கிடையில் யாரோ ஒரு மருமகள் சூடாக காப்பி போட்டுக் கொண்டுவந்தாள். மிகவும் திக்காக இருந்தது. புகை வாசனை அடித்தது.

"குடி தம்பி" என்றார் பெரியவர்.

"இங்க நடக்கற நல்லது கெட்டதுக்கு எல்லாம் நான் போவேன். எங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா மொத ஆளா நான் நிப்பேன். வெந்தத் தின்னு செத்துப்போறதுக்கு நாம என்ன மாடுங்களாய்யா? சொரண இல்லாத வாழுறதவிட, தூக்கு மாட்டிக்கலாம். அதெல்லாம் போகட்டும். நீங்க வேல மெனக்கெட்டு காசு குடுக்க வந்த பாரு... அத வெளிய சொல்லாத. பால் ஊத்த வர்றாம்பாரு என் கடைசீ பையன், அவனுக்கு தெரியவே வேண்டாம். ரொம்ப வருத்தப்படுவான்."

"சரிங்க பெரியவரே... ஆனா அன்னைக்கு நடந்ததுக்கு நான் ரொம்பவே வருத்தப்படறேன். அதை ஏதும் மனசுல வச்சிக்காதீங்க."

"திருப்பியும் அதையே பேசுறீங்களே... போய்ட்டுவா தம்பி. எனக்கு தூக்கம் வருது." என்று சொன்னார் பெரியவர். எத்தனை திறந்த மனது?

கொடுத்த காப்பியை குடித்து முடித்துவிட்டு, நீண்ட நேரம் மௌனமாகவே அமர்ந்திருந்தேன். அந்தச் சூழலை சுற்றிலும் ஒரு கண்ணோட்டம் பார்த்தேன். இதுவல்லவா வாழ்க்கை? கவுரவமான வாழ்க்கை. பணத்துக்கு மடிந்து போகாத வாழ்க்கை. சட்டத்துக்கு பயந்து போகாத வாழ்க்கை. உரிமையை விட்டுக் கொடுக்காத வாழ்க்கை. ஒன்றோடொன்று உதவி ஒத்தாசை செய்துகொள்ளும் வாழ்க்கை. உழைத்தே உண்ண விரும்பும் வாழ்க்கை. இதோ... வாழ்வாங்கு வாழும் மனிதக் குடியிருப்பு!

கனத்த மனதுடன் விடை பெற எழுந்தேன்.

"பெரியவரே, போய்ட்டு வர்றேன்."

"....."

"பெரியவரே..., ஐயா....?"

குழந்தைகளின் அரவணைப்புகளினூடே அவரின் குரட்டை சத்தம் பலமாகக் கேட்டது!!