My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

28.7.11

சுதந்திரம் - ஸ்வீட் எடு - கொண்டாடு!!



ஆற்று நீரைக் குப்பிக்குள்ளே
அடைத்துவிடும் மந்திரம் - அதை
சோற்றுக்கில்லா சேரிக்குள்ளே
விற்றுவிடும் சுதந்திரம்.

காடு மலை மணல் கடத்தி
காசு பார்க்கும் தந்திரம் - எதிர்
கேள்வி கேட்கும் ஆதிகளை
சூடுபோடும் சுதந்திரம்.

சந்தைப் பங்கு விந்தை காட்டும்
சூதாட்டச் சுதந்திரம் - வெறும்
வெத்துப் பொருளாதாரம்
விலையுயர்வு நிரந்தரம்.

நாள்தோறும் விலையேற்றி
நாமமிடும் பெட்ரோலியம் - ஏற்றி
சொன்னால் கொடுத்துவிடும்
சுரணையற்ற சுதந்திரம்.

சூட்சுமத்தைக் கண்டு கொண்ட
சோனியா, சிங், சிதம்பரம் - இவர்
ஆளும் அதிகாரத்துக்கு
அமெரிக்காதான் வரம் தரும்.

***
காவிரியின் நீரைக் கேட்டு
சோரம் போன இயந்திரம் - அது
மூத்திரம் பேயும் ஸ்டைல் பார்த்து
சூப்பர் ஸ்டாரு பட்டயம்.

சிறுவாடைத் திருடிக்கொண்டு
திரைக்குச் செல்லும் தீவிரம் - தன்
தலைவனுக்கு கரகமாடி
தெருவில் நிற்கும் சுதந்திரம்.

***
வள்ளுவன் மேல் ப(ச்)சைபூச
வாய்த்துவிட்ட தருத்திரம் - தமிழ்
வாய் மூடிக் கைக்கட்டி
வணங்கி நிற்கும் சுதந்திரம்.

காசு கேட்டுக் கட்டங்கட்டும்
கல்விக்கூடப் பயங்கரம் - ஒரு
'டிசி'க்கே பயந்துவிடும்
வெட்கங்கெட்ட சுதந்திரம்.

***
தருத்திரத்தைத் தொலைத்துவிட
திருப்பதிமேல் தரிசனம் - கழுத்தில்
இருப்பதையும் அறுத்தெடுக்கும்
உண்டியலின் நிதர்சனம்.

நித்தம் ஒரு சாயிபாபா,
நித்தியானந்தம், சங்கரம் - அந்த
பத்மநாபன் பாதாளத்தில்
பணம் பதுக்கும் சுதந்திரம்.

***

நாற்று நட்டு நடவு செய்து
காற்றைத் தின்ற தத்துவம் - பின்
ஊரைவிட்டுத் தெறித்துவந்து
நகர வாழ்வில் நிரந்தரம்.

நேற்றுவரை கோவணத்தில்
நாகரிக மானுடம் - இன்று
கோட்டு சூட்டு மாட்டிக்கொண்டு
கும்பி காயும் சுதந்திரம்.

ஓடியோடி உழைத்தபோதும்
போடு ததிங்கிணோம் - இப்படியும்
 
சுதந்திரம் கிடைத்ததென்று
கூவு - தத்தத் தரிகிடோம்!



- புதிய பாமரன்...

24.7.11

கூக்கூக் குருவி



வீப். வீப்.
வ். வி..... வீப்.
சன்னலோரத்துக் குருவியின்
சன்னக் குரல்.
சன்னற் கதவை
சற்றே விலக்கத் தோன்றியும்
சலசலப்புக் கஞ்சினேன்.

இன்னுமொரு முறை
இறங்கிய குரலில் :
வீப். வீப்.
விப். வ். வி.. வீ..... வீப்.

அது
காக்கையுருவொத் திருக்காது -
காக்கை கரைதலால்.

அந்த
கூவுங் குயிலின்
குரலோ நீட்சி.

கூடவே கூவிக் கூவி
குஷியேற்றிக்கொள்ளும்
குழந்தையின் குரல்;
தாமரைத் தடாகம்;
தலையாட்டுங் கோரை;
புளியமரக் கிளை;
புனலலையும் ஏரி.
இத்தனையுங் கடந்த
ஏகாந்தம்தான்
கூவுங் குயிலின்
குரல் நீட்சி.
ஆதலால்
அது குயிலில்லை.

அது
கீச்சிக் கொஞ்சும்
கிளியுமில்லை.

அது
விண்ணிற் பாய்ச்சலிடும்
ஊர்க்குருவியு மில்லை.

அது
கொண்டையிலே மஞ்சள் பூசி
கிணற்றோர நீருறிஞ்ச,
கொஞ்சமாய்த் தத்திவரும்
காட்டுக் குருவியுமில்லை.

அது
தவிட்டுக் குருவியுமில்லை.
தவழ்ந்தோடுங் காடையுமில்லை.
பூந்தேன் திருடும்
பூங் குருவியுமில்லை.

பூ நாரை,
புழுப் பொறுக்கி
பழுப்புக் கீச்சான்,
வானம்பாடி,
வீட்டு குருவி
இதிலுங் கூட
ஏதுமில்லை.

நீருள் புகுந்து
நீருள் அமிழ்ந்து
நீந்தியே வாழும்
நீர்க் குருவியுமில்லை.
நாணற் குருவியுமில்லை.
நாமக் கோழியுமில்லை.

மஞ்சள் வாலாட்டி
மணிப்புறா
மாடப்புறா
மைனா
மரங்கொத்தி
மீன்கொத்தி...
ம்ஹூம்..
இதிலும்கூட
ஏதுமில்லை.

கூக்குருவான்
கரிக்குருவி
கொண்டைக்குருவி
கானாங் கோழி
கூழைக்கிடா....

வானம்பாடி
வாலாட்டுங் குருவி
வரகுக் கோழி....

செங்கால் வாத்து
செம்போத்து
செண்பகம்
செங்கால் நாரை
சருகுக் கோழி
சோலைப்பாடி....

தையற் சிட்டு
தூக்கணாங் குருவி
ஆள்காட்டுங் குருவி
ஆறுமணிக் குருவி.........

...............
என்னவென்று
எடுத்துச் சொல்ல?
சொந்த ஊர்
சென்றபோது
இத்தனைக் குரலிலும்
இட்டுக் கட்டி
எடுத்துப் பாடி
காற்படி நெல்லுக்கு
குருவிக்காரன்
கூவிக்காட்டியது.

இத்தனை வகையிலும்கூட
இந்தக் கீச்சுக் குரல்
எடுபடவேயில்லை.

சரி.
சற்றே
சன்னலைத் திறந்து
என்னவாயிருக்குமென்று
எட்டிப் பார்த்தபோது...

அந்தோ
அது -
சின்னஞ்சிறு குழந்தை
சாவிக்கொடுத்து விளையாடும்
சைனாக் குருவி!
எட்டுவிதக் குரலெடுக்கும்
எலக்ட்ரானிக் குருவி!

என்னால்
இதைமட்டும்தான்
இன்று கேட்கமுடிந்தது.
ஏனென்றால்
நான்
காக்கைகளின்
கரைதலுக்கிடையே வாழ,
ஊரிலிருந்து வெளியேறி
உயிர்வாழத் தெறித்துவந்த
ஒரு எல
க்ட்ரானிக்
ஓட்டாண்டி.
நிஜத்திலிருந்து விலகிவிட்ட
நிழலாய்.
என் வயிற்றோடு
உயிர்வாழும்
ஒரு
கட்டுப்பெட்டிப் பட்டணத்தான்!!!




18.7.11

நிழலும் நிஜமும்


கிரீசில்,
கால்தடம் பதியாத
எங்கேயோ ஒரு
ஏகாந்த லொகேஷனில்,
காதலர்களின்
கனவுப் பாட்டில்
நீயும் கலந்திருந்தாய்.

ஜெர்மன் நகரத்து
வீதிகளில் உலாவி,
ஆல்ப்ஸ் மலைச் சரிவு
மரத்தைச் சுற்றிய
காதல் கிறக்கத்தில்
நீயும் கிறங்கிப்போனாய்.
கொடுத்து வைத்தவன் நீ;
காட்சி முடியும் வரை.

காட்சி முடிந்து,
மூத்திரச் சந்தைக் கடந்து
உன் இருப்பிடத்துள்
குனிந்து செல்.
உனக்கு
இன்றைய ‘டின்னர்’ மெனு :
ஒரு ரூபாய் அரிசியில்
வடித்துவைத்த சோறு!