My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

29.11.11

கோட்டு சூட்டு போட்டஅண்ணே

(ஒரே நாளிரவில், முன்னறிவிப்பேதுமின்றி, பால் விலை, பேருந்துக் கட்டணம் ஏற்றியது குறித்து, ஏதுமறியாத ஒரு பாமரனின் புலம்பல்)

கோட்டு சூட்டு போட்டஅண்ணே
கோபிக்காம எனக்கு நீங்க,
நாளொன்னுக்கு நூறு நூறா
நாலு நாளாக் குறையுறத,
கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே.
புண்ணியமாப் போகும், உனக்கு
புள்ளைங்க நாலு பொறக்கும்.

மட்டப் பலக மண்ணுவெட்டி
சோத்து மூட்டைக் கட்டுக்கு
முப்பது ரூபா டிக்கெட்டு.
அந்த சொத்துக்கள சொமந்து நிக்கும்
இந்த சோப்ளாங்கி ஒடம்புக்கு
இன்னொரு முப்பது டிக்கெட்டு.
வேலைக்குப் போக வர, இந்த
எழவெடுத்த பஸ்ஸுக்கு
அழவேணும் ஒரு அறுவது.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
கொஞ்சம் கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

ஒத்த ரூபா அரிசி அவிக்க
பத்து ரூபா வெறகுக் கட்டு.
வெந்தத வழிச்சி முழுங்கி
உள்ளே தள்ளி செமிச்சு வைக்க
உப்பு புளி மொளகா,
கத்திரிக்காக் கருவாடு.
இத்தனையும் சேத்துப் பார்த்தா
மொத்தமா ஒரு நூறு.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
எனக்கு கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

ஆனைக்குள்ளே ஆடித்தூங்க
அடம்பிடிக்கும் அழுமூஞ்சி
ஊள மூக்குக் கைக் குழந்தை
உறிஞ்சிக்குடிக்கும் பாலுக்கு
நாளன்னைக்கும் ஒரு நாப்பது.

வெயில் வதக்கும் பொழப்பு;
வேலமேல கொஞ்சம் அலுப்பு.
களைப்பு போக்க டீக்குடிக்க,
பீடிக்கட்டு புகை பிடிக்க
பாக்கு கீக்கு போட்டுத் துப்ப
ஒரு நாப்பது ரூபா.

துணி துவைக்க, குளிக்க,
சோப்பு சாம்ப்பு வாங்கிக்கவும்
வச்ச கண்ணு வாங்காம
வாசலையே பாத்து நிக்கும்
புள்ளப் பூச்சி ரெண்டுத்துக்கும்
உப்புக் கடல ஒடச்சக்கடல
வாங்கிப் பையில் போட்டுக்கவும்
இன்னொரு நாப்பது.

கோட்டு சூட்டு போட்ட அண்ணே
கொஞ்சம் கணக்கு கூட்டிக் காட்டு அண்ணே!

வேணாம்னு ஒதுங்கினாலும்
வா வான்னு கூப்பிடுற
வெக்கங்கெட்ட மானிட்டரு.
என்னத்தச் சொல்ல அண்ணே...
ஒடம்பு வலி மனசு வலி
ஒத்தடமா ஒரு மருந்து.
கருவுமெண்டு கடையிலயே
கூவிக் கூவிக் குடுக்கறாங்க.
அதுக்கு ஒரு நூறு.

தீவாளித் துணியெடுக்க,
சொந்த ஊரு போகவர,
பள்ளிக்கோடப் பீசு கட்ட,
வட்டிக்கு வாங்கிப் போட்ட
துட்டுக்கு வட்டின்னு
தெனத்தன்னிக்கும் ஒரு நூறு.

நாள் பூரா மாரடிச்சு
நானூறு கூலி வாங்க,
'தீனிக்கி தானின்னு'
ஒத்த ரூபா மீறாம,
ஓட்டமா ஓடிப்பூடும்
ஒரு ஒரு நாளும்.

ஆனா பாருங்க
அட, படிச்ச அண்ணே,
போன வாரம் பூராவும்
போக்கிடமே தெரியாம
நாளொண்ணுக்கு எனக்கு
நூறு ரூபாக் குறையுதண்ணே...
எனக்கேதும் தெரியாம,
என் கோமணத்தில் கைய வுட்டு,
துட்டையெல்லாம் திருடுறாங்கன்னு
தெனத்தன்னிக்கும் ஒரு டவுட்டு.

கோட்டு சூட்டு போட்டஅண்ணே
கோபிக்காம எனக்கு நீங்க,
கூட்டிக் கழிச்சிக் கணக்குப்போட்டு
கண்டுபிட்டிச்சு சொல்லுங்கண்ணே
புண்ணியமாப் போகும், உனக்கு
புள்ளைங்க நாலு பொறக்கும்.

26.11.11

செல்லக்குட்டி



விடியல் நான்கு மணி. பயாலஜி டெஸ்ட் என்று என் மகள் அலாரம் வைத்து, எழுந்து சப்தமிட்டு படித்துக்கொண்டிருந்தாள். வேத பாராயணம் பண்ணும் பாலகன் மாதிரி, சம்மணமிட்டு, தன் உடலை முன்னும் பின்னுமாக ஒரு ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டிருந்தாள். தரையிலிருந்த புத்தகத்து வரிகளை கண்களால் ஓட்டமிட்டு, அண்ணாந்து பார்த்து ஒப்புவித்துக்கொண்டிருந்தாள். ஒரு காக்கை தண்ணீர் குடிப்பதுபோல அந்தக் காட்சி இருந்தது.

"செல்லக்குட்டீ... டீ போட்டுத் தரவா?" என்று கேட்ட மறு நொடியில் எனக்கு பதில் வந்தது.

"அப்பா... கொஞ்சம் பேசாம கம்முன்னு இரு. நான் நெறைய படிக்கவேண்டியிருக்கு."

நான் கதவை மெல்லத் திறந்தேன். சில்லென்ற ஊதைக் காற்று முகத்தில் வீசியடித்தது.
விடியலின் வெளிச்சமும் மேகக்கருக்கலும் கலந்த ஒரு மங்கிய விடியல் அது. அப்போதுதான் மழைவிட்டு, தாழ்வாரத்து ஓட்டு முனைகள் வரிசைக்கிரமமாய் நீரைத் தாரைத்தாரையாய் வார்த்துக்கொண்டிருந்தன. தெருவில் மணலை அறித்து ஓடிய தெளிந்த நீரோட்டத்தில் விடியல் வானம் பிரதிபலித்து, சிக்கல் நிறைந்த ஒரு ஓவியத்தை எனக்கு வரைந்து காட்டிக்கொண்டிருந்தது.

குளிரின் தாக்கத்தால், நான் கதவைத் திறந்து உள்ளே திரும்புகையில், எனக்கு விசும்பியழும் சத்தம் கேட்டது.

"என்ன செல்லக்குட்டி, என்னவாச்சு?" என்று தலையக் கோதியவாறு கேட்டேன்.

"அப்பா, ஒண்ணுமே புரியலைப்பா. நெறைய புதுசு புதுசா வார்த்தைங்க பக்கம் பக்கமா வந்துகிட்டே இருக்குப்பா. எதையுமே என்னால மனப்பாடம் செய்ய முடியலை... பாடத்தையும் புரிஞ்சு படிக்க முடியலை," என்று என் விரலைப் பற்றித் தேம்பியழுதாள் என் குழந்தை.

"விடும்மா. படிக்கக் கஷ்டமாயிருந்தா, இன்னைக்கு லீவு போட்டுடேன்?" என்று சொன்னவுடன் எனக்கு ஒரு கராரான பதில் கிடைத்தது.

"நல்லாப் படின்னு சொல்வீங்களா, அதவிட்டுட்டு, லீவுபோடு அது இதுன்றீங்களே" என்று தூக்கத்திலிருந்த என் மனைவி பாயைச் சுருட்டி எழுந்தவாறு, என்னைக் கடிந்துகொண்டாள். "நல்லாப் படிக்கணும்னுதானே கவுருமெண்டு ஸ்கூல்ல இருந்து கான்வெண்டுக்கு மாத்தினது?"

"ஆமா. கான்வெண்டுக்கு மாத்தினதுதான் தப்பு." என்று எனக்குள் நான் முணுமுணுத்துக்கொண்டேன்.

வெளியில் மழை வெளுத்து வாங்கியது. கூரை ஓடுகள் தடதடவென்று சப்தமிட்டன.

"அப்பா, அந்த கரீமா மிஸ்ஸை நெனைச்சாலே பயமா இருக்குப்பா. சரியா மார்க்கு எடுக்கலைன்னா, கிளாசுக்கு வெளியில நிக்கவைச்சுடுவாங்க. ரொம்ப கேவலமா திட்டுவாங்கப்பா... எல்லார் முன்னாலயும் முட்டி போடச் சொல்றாங்கப்பா. ரொம்ப அவமானமா இருக்கும்," என்று கதறியழ ஆரம்பித்தாள் என் மகள். "இந்த முறை நம்ம ஸ்கூலுக்கு 'சென் பெர்சென்ட்' ரிசல்ட் வரணும்னு பிரின்சிபால் சொல்லியிருக்கார், பார்த்துக்குங்க. ஒருத்தர்கூட ஃபெயில் ஆகக்கூடாது... அப்படீன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்காங்க, அப்பா."

"இதப் பாரு செல்லக்குட்டீ, நான் கண்டிப்பா சொல்றேன். இன்னைக்கு லீவுதான். கவலையேப் படாத. வெளியில பாரு, சும்மா பேய்மழை அடிக்குது. நீ வேணும்னா பாரேன், கண்டிப்பா லீவு அறிவிச்சுடுவாங்க."

"ஆஹா... கொழந்தைக்கு நல்ல புத்தி சொல்ற அப்பனை இந்த வீட்டிலதான் எல்லாரும் பார்க்கணும். அட, எழுந்து போங்க. கொழந்தை படிக்கட்டும். ஆயிரம் ஆயிரமா பணத்தக் கொட்டி கான்வென்டுல சேத்துருக்கோம். நல்லா படின்னு சொல்றத விட்டுபுட்டு..." என்று அடுப்பங்கரைக்கு போனாள் என் மனைவி.

"அப்பா, ஏம்ப்பா என்னை கான்வெண்டுல சேர்த்தீங்க..." என்று என்னை நிமிர்ந்து பார்த்து என் குழந்தை கேட்டாள்.

"நான் என்னம்மா செய்யறது? இந்த விஷயத்துல யாரோ சொன்னதைக் கேட்டு, அம்மாதான் அடம் பிடிச்சுட்டா. உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். பார்த்துப் படிம்மா."

"இல்லைப்பா... ஒம்பதாவது வரையிலும் தமிழ் மீடியத்துல படிச்சுட்டு, இப்ப இங்கிலீசுல படிக்கிறது, ரொம்பவும் கஷ்டமா இருக்குப்பா. ஒன்னுமே புரிஞ்சுக்க முடியலை. இந்த கரீமா மிஸ் வேற புஸ்தகத்துல இருக்குறத அப்படியே படிச்சுட்டு போய்ட்றாங்க. 'புரியலை மிஸ்' அப்படீன்னு கேட்டா, 'உன் மர மண்டைக்கு புரியாது' அப்படீனு தலையில ஓங்கி கொட்றாங்க."

டீயை ஆற்றிக்கொண்டே என் மனைவி வந்தாள். "இங்கப்பாரு செல்லம்மா. எல்லாம் உன் நல்லதுக்குத்தான் செய்யுறோம். இந்த ஊருல படிக்கிறவுங்க எல்லாருமே இப்ப புதுசா வந்த உங்க கான்வென்டு ஸ்கூல்ல சேர்ந்துட்டாங்க. நாம மட்டும் சும்மா இருக்க முடியுமா? எவ்வளோ கஷ்டப்பட்டு, பீஸ் கட்டி அந்த பள்ளிக்கூடத்துல சேர்த்துவிட்டுருக்கோம்? நல்லா படி தாயீ. படிச்சு ஒரு டாக்டரோ எஞ்சினீயரோ ஆனாத்தான், என்னய மாதிரி, எவனையாவது கட்டிக்கிட்டு லோல் படத் தேவையில்ல."

எனக்குக் டீக்கிளாசு சுரீரெனச் சுட்டது. "நீங்க அமைதியா இருங்க. அவ படிக்கட்டும்."

மீண்டும் பயாலஜி பாடங்களை படித்து மனப்பாடம் செய்யத் துவங்கினாள் என் செல்லக்குட்டி.

நான் சுவற்றில் தலையணை கொடுத்து சாய்ந்துகொண்டேன். என் மகளின் முகத்தைப் பார்க்க எனக்கு ரொம்பவும் பரிதாபமாகப் பட்டது. அவள் மனமுவந்து படிக்கவில்லை. அந்த விளக்கு வெளிச்சத்தில், அவளின் உள்மன வலி அவளின் முகத்தில் தெரிந்தது.

நான் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டேன். 'ஏய் செல்லக் குட்டி, நீ கவலைப் படாத. இந்தப் பேய் மழைக்கு கண்டிப்பா லீவுதான்."

ஆறு மணிவரை படித்துவிட்டு புத்தகத்தை மூடினாள் செல்லக்குட்டி. பூனை மாதிரி நடந்து அடுத்த அரையிலிருக்கும் டிவியை திருகினாள். நானும் கூடவே எழுந்து சென்றேன்.

"என்னடீ இப்ப டிவி கேக்குது உனக்கு? வென்னி வெச்சிருக்கேன். குளிச்சுட்டு ஸ்கூலுக்கு கெளம்புற வழியப் பாரு" என்று என் மனவி இறைந்து கத்திக்கொண்டிருந்தாள்.

நான் மட்டும் ஒவ்வொரு சானலாக மாற்றிக்கொண்டே வந்தேன். யாரோ சொன்னார்கள். ஆளுங்கட்சி சேனலில் தான் 'பள்ளி விடுமுறையை' உடனடியா தெரிவிச்சுடுவாங்களாம். அவர்கள் சொன்னதுபோல அந்த ஆளும் கட்சி சேனலின் கீழே 'ஃப்ளாஸ் நியூஸ்' வந்து, தொடரோட்டமாய் ஓடிக்கொண்டிருந்தது.

'பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு : மழை காரணமாக, நாகை, கடலூர் மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.'

"ஏய் செல்லக்குட்டி... உனக்கு கண்டிப்பா லீவுதான். ஒவ்வொரு மாவட்டமா சொல்லிக்கிட்டு வர்றான்." என்று உற்சாகத்தில் நான் கத்தினேன்.

"என்னங்க இது. சின்னப் பயங்க மாதிரி பேசுறீங்க? நீங்களே உங்க பொண்ணை ஸ்கூலுக்கு போகவேண்டாம்னு சொல்றீங்களே, கொஞ்சமாவது கேக்க நல்லாவா இருக்கு." என்று கடிந்துகொண்டாள் என் மனைவி.

எனக்குத் தேவை செல்லக்குட்டி பள்ளிக்குச் செல்லக்கூடாது. அவ்வளவுதான். இன்றைய தேதிக்கு பயாலஜி டெஸ்ட் தள்ளிப்போனால், ஓரளவுக்கு இன்னும் நன்றாகப் படிக்க நேரம் கிடைக்கலாம்.

தலை வாரி, பள்ளிச் சீருடை அணிந்து, முதுகில் சுமையை மாட்டிக்கொண்டு, முகம் நிறைய சோகத்தை அப்பிக்கொண்டு, என் முதுகுக்குப் பின்னால் வந்து நின்றாள் செல்லக்குட்டி. "என்னப்பா, லீவு விடமாட்டங்களா?"

நானும் வைத்த கண் வாங்காமல் டிவிப் பெட்டியை பார்த்துக்கொண்டேயிருந்தேன். நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை... ம்ஹூம், இன்னும் திருவள்ளூர் மாவட்டம் அறிவிக்கப் படவில்லை.

பள்ளி செல்லும் வாகனத்தின் ஒலி வீட்டு வாசலில் கேட்டது. அதன் ஒலியிலேயே அதன் அவசரம் தெரிந்தது.

என் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லக்குட்டி கேட்டாள்.

"அப்பா, நானே லீவு போட்டுவிடட்டுமா. சரியாவேப் படிக்கலைப்பா. பயமா இருக்கு...." என்று சொல்லி முடிப்பதற்குள் என் மனவி, செல்லக்குட்டியை வலிய இழுத்தாள்.

"நல்லா இருக்கு கதை. ரெண்டு பேரும் கூட்டுக் களவாணியா இருக்கீங்களே. அடி செல்லக்குட்டி, வேன் நிக்குது வாடி," என்று தரதரவென இழுத்துக்கொண்டு, கொட்டும் மழையில் நனைந்தவாறே வாசலைக் கடந்து சென்றார்கள். செல்லக்குட்டி என்னையே திரும்பித் திரும்பி பார்த்தவாறு வேனில் ஏறிச் சென்றுவிட்டாள்.

நான் கையசைத்து விடை கொடுத்துவிட்டு, திரும்பவும் டிவியைப் பார்த்தேன்.

'நாகை, கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர்....'

நான் தெருவையே வெறித்துப் பார்த்துக்கொடிருந்தேன். தெருவில் மெல்லியதாய்ப் பரந்து ஓடிக்கொண்டிருந்த மழை நீரில், பள்ளி வேன் தன் சக்கரங்களைப் பதித்து கலக்கிவிட்டுப் போயிருந்தது.

19.11.11

சொக்கலால் சேட்டும் ஷேர் மார்க்கெட்டும்


இன்று சொக்கலால் சேட்டுக்கு ஒரு சோக நாள். அவருடைய ஷேர் மார்கெட் வெள்ளாமையில கரடி வந்து உள்ளாற புகுந்து அடிச்சி, கடிச்சி, துவம்சம் செய்ஞ்சுடுச்சாம். அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாலதான், சரியா காலம்பர பத்து மணிக்கு, சேட்டுக்கு சேதி தெரிஞ்சுது. 16 கோடிக்கும் மேல நஷ்டமாயிடுத்தாம். நாடி லபக்கு லபக்குன்னு அளவுக்கு மீறி துடிக்க, பளபளப்பான சொட்டை மண்டையிலேருந்து வியர்வை தாரைத் தாரையாய் சொட்டிக்கொண்டிருந்தது சொக்கலாலுக்கு. தன்னுடைய ரங்க ராட்டினம் நாற்காலியில வாய பொளந்த மேனிக்கு மல்லாக்க சாய்ஞ்சு கெடந்தாரு சேட்டு.

அவரோட பெர்சனல் செக்ரடரி மஞ்சு சேஷாத்ரிக்கு (எம்.பி.ஏ) கொஞ்சம் பேஜாராப் போய்டுத்து. சேட்டின் ஏ.சி அறையிலேருந்து வெளியில படதட்டத்தோட ஓடி வந்து, ஆபீஸ்ல வரிசையா உட்கார்ந்து கம்ப்யூட்டர்லயே ஷேர் மார்கெட்ட நொடிக்கொருதடவை நாடி பார்த்துக்கிட்டிருந்த எல்லாருக்கும் கேக்கறமாதிரி கத்தி சொல்லுச்சி. "எம்.டி ய யாரும் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். இன்னைக்கு விசிட்டர் யாரையும் அலோ பண்ணாதிங்க. நீங்களும் யாரும் என்னைக் கேக்காம உள்ளாற போகவேண்டாம்." அலுவலகமே அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு பத்து நிமிட இடைவெளியில, சேட்டுவோட பொஞ்சாதி டென்ஷனோட ஆபிசுக்கு வந்தாங்க. நெத்தியில 'சீரோ' வாட்சு பல்பு மாதிரி ஒரு பெரிய நெத்திச்சுட்டி டங்கு டங்குன்னு இடமும் வலமுமா ஆடிக்கிட்டே இருந்தது. அந்த அம்மாவோட உடம்பின் அகலமே குறைஞ்சது மூணு அடி இருக்கும். வெயிட்டு கேக்கவே வேணாம். நூறைத் தாண்டியே ஆகணும். இரண்டுக்கு இரண்டு சதுர அடி அகலத்துல இருக்கிற உப்பிப்போன வயித்தை சங்கோஜமில்லாம காட்டிக்கிட்டே வந்தாங்க. அவுங்க நடையில டென்ஷன் ஏகத்துக்கு இருந்தாலும் அவங்களால ஆமை மாதிரித்தான் நடக்க முடிஞ்சது! மஞ்சு சேஷாத்ரி, மிசர்ஸ் சொக்கலால் சேட்டை கைத்தாங்கலாய் பிடித்தபடி சேட்டின் அறைக்கு கூட்டிக்கொண்டு போச்சு.

சேட்டைப் பார்த்தவுடனே, மிசர்ஸ் சொக்கலால் ஹிந்தியில ஏதேதோ புலம்பியவாறு கண்ணீர் விட்டு, தலையைக் கோதிவிடுவதற்கு முடியில்லாததால, தடவிக் குடுத்தாங்க. மனைவியை பார்த்த பின்புதான் சேட்டுக்கு கொஞ்சம் அசுவாசம் வந்தது. ஒரு பெரிய டம்ளர்ல இருந்த ஐஸ் வாட்டரை மொடக் மொடக்னு குடிச்சாரு.

"மஞ்சு, கொஞ்சம் வெளிய இரு..." என்று மிசர்ஸ் சொக்கலால் சொன்னதும் மஞ்சு, கொஞ்சமா கதவைத் திறந்து வெளியில வந்துடுச்சி.

அடுத்த ஒரு அஞ்சு நிமிடத்துல ஒரு உச்சிக்குடுமி ஐய்யர் உள்ளார போனார். சேட்டம்மா வரும்போதே டாக்டருக்கு போன் பண்ணுச்சோ இல்லையோ ஐயருக்கு போன் பண்ணி இருக்குபோல! ஃபேமிலி டாக்டர் மாதிரி, ஃபேமிலி ஐயர்.

மஞ்சு கொஞ்சமாக் கதவத் தொறந்து வழிவிட்டதால, ஐயரால உள்ளே நுழைய முடியல. ஐயரின் உடம்பு சேட்டம்மாவின் உடம்பை விட மூணு அங்குலம்தான் கம்மி. அதனால மஞ்சு அறைக் கதவை 'பாணா'வா தொறந்தப்புறம் தான் ஐயரால உள்ளார போக முடிஞ்சது. அப்படி கதவை விரித்துத் திறந்தப்போ, அலுவலகத்துல இருந்த அத்தனை பேராலும் சேட்டையும் சேட்டம்மாவையும் பாக்க முடிஞ்சது. பாவம், ரொம்ப சோகத்துலதான் இருந்தாங்க. சேட்டுவின் தலைக்குப் பின்னால, பெரிய கோல்டு கலர் பிரேமுக்குள்ளாற, சீரியல் லைட்டு, பட்டை நாமத்தோட ஜொலித்துக்கொண்டிருந்த ஏழுமலையான் கூட, இங்கேருந்து பாக்கும்போது, சற்றே முகம் வாடினாப்புலதான் தெரிஞ்சாரு.

உள்ளே நுழைஞ்ச ஐயர், எடுத்தவுடனே சொக்கலால் சேட்டுகிட்ட சேதிய சொன்னாரு. "நான் அடிக்கடி சொல்லிக்கிட்டே இருக்கேன். திருப்பதியானுக்கு வைர மாலை நேர்த்திக் கடன் ஒண்ணு பெண்டிங்ல இருக்குன்னு. நீங்க யாரும் அதை காதுல போட்டுக்கலை. அதனாலதான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. ஒரு வைரமாலை செய்ஞ்சு ரெண்டு நாள்ள திருப்பதியானுக்கு சாத்திடணும். இதுதான் பரிகாரம். அப்புறம் எல்லாம் சரியாகிடும் பாருங்கோ. என்ன, ஒரு அறுபது லட்சம் ஆகப்போகுது. செலவோட செலவா இதையும் செஞ்சுடுங்க. மிட்டாலால் சேட்டைக்கூட போன வருஷம் இந்த சாங்கியத்தை செய்யச்சொன்னேன். இப்ப அவருக்கு எல்லாம் நல்லபடியா நடந்துண்டிருக்கு. க்ஷேமமாய் இருக்கார். ஏழுமலையானோட பொல்லாப்பு நமக்கு எதுக்கு?" என்று கூறியவாறு, பையிலிருந்து கொஞ்சம் துளசியும் ஏதோ பிரசாதமும் கொடுத்தார். சேட்டு நெத்தியிலயும் சேட்டம்மா நெத்தியிலயும் ஐயரே பெர்சனலா விபூதி ஈஷி விட்டார். "இப்ப நோக்கு உடம்பு பரவாயில்லையா? உடம்பப் பார்த்துண்றுங்கோ."

சரின்னு இரண்டுபேரும் தலையாட்டினாங்க. "சரி, நான் கெளம்பறேன்," என்று சொல்லி, "நாராயணம், சதுர்ப்புஜம், சசிவர்ணம்," என்று ஏதோ மந்திரத்தை முணுமுணுத்துக்கொண்டே கிளம்பிப் போய்ட்டாரு. ஒரு அரைமணி நேரம் கழிச்சி சேட்டம்மாவும் கிளம்பினாங்க. போகும்போது மஞ்சுகிட்ட சொன்னாங்க.

"மஞ்சுஜி, அறுபத் மூண் லட்சம் செக் போட் சேட்டுகிட்ட 'கையேய்த்து' வாங்கி, 'அக்காராம் அண்டு துக்காராம் ஜுவல்லர்ஸ்க்கு' உட்னே அன்ப்பிடு. மத்ததை மே பாத்கர்த்தியும்," என்று உத்தரவு போட்டுவிட்டு, நடக்க முடியாமல், அடிப் பிரதர்ஷனம் மாதிரி, பொடிப் பொடி நடையாய் நடந்து, லிஃப்டுக்குள் தன்னை நுழைச்சிக்கிட்டாங்க.

மஞ்சுவின் பளபள முகம் கூட சோகத்தால அப்பளம் மாதிரி கோணல் மாணலாக் கிடந்துச்சு. பாக்கவே சகிக்கல. 'க்ர்ர்ர்ர்க்' அப்படீண்ணு, காலிங் பெல் அடிக்கவும் மஞ்சு, கொஞ்சமாக் கதவத் துறந்து உள்ளார போச்சி.

சேட்டு சொன்னார். "மஞ்சு. எப்படியாகிப்போச்சு பார்த்தியா, ஏன் எனக்கு மட்டும் இந்த ஒரு மாசமா இப்படி ஆகுது..." கொஞ்ச நேரம் அமைதியாயிருந்தாரு. பிறகு சேட்டு சொன்னாரு. "எனக்கு ரெண்டு நாள் ரெஸ்டு வேணும். கம்ப்ளீட் ரெஸ்ட். அதுவும் அமைதியான இடத்துல. நான் மட்டும் போறேன், வேற யாரும் வேண்டாம். இப்பவே கிளம்பறேன்.. அமைதியான இடமாப் பாத்து ரூம் புக் பண்ணிடு. நான் இப்பவே கிளம்பியாகணும்," என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.

மஞ்சு வெளியில் வந்து, தனது கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்தாள். சேட்டுவின் விருப்பப்படியே, ஒரு இடத்தை கம்ப்யுட்டரில் வலைவீசி, தேடு தேடு என்று தேடிப் பிடித்த மஞ்சு, சேட்டுவின் பேர் சொல்லி இரண்டு நாளைக்கு பதிவு செய்துவிட்டு, சேட்டுவிடம் போய் சொல்லிடுச்சி.

டிரைவர் ஆறுமுகம் சும்மா ஏரோப்பிளான் பைலட் கணக்கா, வெள்ளைச் சொக்காயும், வெள்ளைப் பேண்டும், வெள்ளைத் தொப்பியும், பளபள ஷூவுமா, செமத்தியான கெட்டப்புல இருந்தான். ஆறுமுகம் ஒருத்தனின் 'கெத்தே' போதும், சொக்கலால் சேட்டுவின் கவுரவத்தை உலகம்பூரா எடுத்துச் சொல்ல. பின்னே? பென்சு கார் டிரைவராச்சே?!

ஹேஹேய்... அந்த பென்சு கார் டிரைவர் நாந்தான் சார். நானேதான். எல்லாத்தையும், எனுக்குன்னு போட்டு வச்சிருந்த ஸ்டூல் மேல குத்துக்கால் போட்டு உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தது நாந்தான்... ஆறுமுகம். டிரைவர் ஆறுமுகம்!

கொஞ்ச நேரத்தில், வெள்ளை நிற பென்சு காரும், சேட்டுவும் நானும் கிளம்பிப்போனோம். சேட்டுக்கு கொண்டாட்டமோ இல்லியோ, எனக்கு கொண்டாட்டந்தான்!! ஏன்னா இந்த மாதிரி நிறைய இடத்துக்கு சேட்டொடவோ இல்லைன்னா அவுங்க பேமிலியோடவோ அடிக்கடி போய்ட்டு வருவேன். என்னோட ட்ரைவிங்னா சேட்டுக்கு ரொம்பப் பிடிக்கும்.

கடற்கரைச்சாலை. குளுகுளு காற்றை பென்சு கார் அனுபவிக்க, காரின் கண்ணாடிகளை மூடிக்கொண்டு, ஏசியில் சேட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு, தூங்கித் தூங்கி விழுந்தார். ஈ.சி.ஆர் ரோடு, பென்சு காரு... அடேய் 'எட்டங்கிளாஸ் ஃபெயிலு' ஆறுமுகம்....! போ... போ, போய்ட்டே இரு. எனது இரண்டு மணி நேர சுகமான பயணத்தில், மஞ்சு சொன்ன இருப்பிடம் வந்துச்சி.

கார் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு,"சேட்ஜி, சேட்ஜி," என்று நான் என் சுண்டு விரல் நகத்தினால் சேட்ஜியின் சொட்டையில் பட்டும் படாமலும் சுரண்டினேன். கனாக்கண்டு எழுந்தமாதிரி, சொக்கலால் சடக்கென்று தலையை நிமிர்த்திப் பார்த்தார். பின்பு கீழே இறங்கினார். அதற்குள் ஒரு பெண் பூச்செண்டு கொண்டுவந்து சேட்டின் கையில் கொடுத்து, "வெல்கம் டு வில்லேஜ் ரிசார்ட், மிஸ்டர். சொக்கலால். எஞ்சாய் யுவர் ஹாலிடேய்ஸ்.." என்று ரெடிமேடான சிரிப்பு ஒன்றைச் சிரிச்சி வெச்சுது.

ஒரு அட்டெண்டர் வந்து காரின் முன்பக்கம் அமர்ந்துகொண்டார். "டிரைவர், வண்டியை எடுங்க. இங்கிருந்து பீச்சை ஒட்டினாப்புல ஒரு அரை கிலோமீட்டர் போகணும். அங்கதான் உங்க ஐயாவுக்கு புக் செய்த 'மட் ஹவுஸ்' இருக்கு என்று சொன்னார். சேட்டு திரும்பவும் காருக்குள் உட்கார, கார் மெல்ல நகர்ந்தது. அந்த ரிசார்ட்டுக்குள்ள இங்க ஒண்ணும் அங்க ஒண்ணுமா, தொலைவு தொலைவா, விதம் விதமா வீடுங்க இருந்துச்சி. நிறைய வெளி நாட்டு ஆணுங்களும் பொண்ணுங்களும் அவுங்க ஒடம்ப வெயிலில்ல காயப்போட்டுக்கிடிருந்தாங்க. அழகழகான தோட்டங்களுக்கு நடுவே மண்பாதை வளைஞ்சி வளைஞ்சி பென்சுக்கு வழிகாட்டிக்கொண்டே வந்துச்சி. எனக்கு, நான் ஏதோ சொர்கத்திலிருப்பதுபோல ஒரு ஃபீலிங்க் வந்தது. சிறிது நேரத்தில் அட்டெண்டர் வண்டியை நிப்பாடினாரு.

"வெல்கம் டு ஹெவன் ரிசார்ட்ஸ். திஸ் இஸ் யுவர் மட் ஹவுஸ்." என்று பணிவுடன் சொல்லிவிட்டு, கார் கதவைத் திறந்தாரு. சுற்றிலும் மூங்கில் பத்தையால வேயப்பட்ட வேலி. வேலிக்கு உள்ளார போகிற இடத்துல ஒரு வாச்மேன் இருந்தாரு. அவரு தங்கிக்க ஒரு சிறிய காங்கிரீட் கட்டிடம். அதுக்குப் பக்கத்துல கார் டிரைவர் தக்கிக்க ஒரு ரூம். டிரைவர் ரூம்ல, டிவி, ப்ரிஜ்ஜி எல்லாம் இருந்துச்சி. காரை நிப்பாட்ட ஒரு ஆஸ்பெஸ்டாஸ் ஷெட்டு. காரை அங்க நிப்பாட்டிட்டு, அட்டெண்டர் எங்களை அந்த குடிசை நோக்கி கூட்டிக்கிட்டுப்போனார்.

இப்போ புரியுது, 'மட் ஹவுஸ்' அப்படீன்னா என்னன்னு. நட்ட நடுவுல ஒரு மண் குடிசை. கோரையால வேய்ஞ்ச கூரை. ரொம்பவும் மக்கிப்போயிருந்தது. குடிசைய வட்டவடிவில் களிமண்ணால கட்டியிருந்தாங்க. மூங்கிதட்டிதான் அதுக்கு கதவு. ரெண்டு குட்டி சைஸ் ஜன்னலுக்கு அரிசி கோணிப் பைய தச்சி, சீலையா தொங்க விட்டுருந்தாங்க. ஒரு பழைய மர நாக்காலியும் ஒரு மேசையும், அந்த மேசைமேல ஒரு லாந்தர் விளக்கும், ஒரு இன்டர்காமும் இருந்துச்சி. குடிசைக்குள்ளாற ஒரு நார் கட்டில். நல்லவேளையா அதுமேல மெத்துன்னு ஒரு மெத்தயும் தலவாணியும். போத்திக்க ஒரு கம்பிளி. கரண்டு, டிவி, ப்ரிஜ்ஜி, அடுப்பு எதுவும் காணும். குடிசைக்கு பின்னால சுத்தி பனை ஓலை கட்டி ஒரு சிறிய பாத்ரூம் டாய்லெட்டு.

குடிசையச் சுத்தி ஏகாந்தமா ஒரே பூந்தோட்டம், புல்வெளி, வாழ மரம், தென்ன மரம், பன மரம் அப்படீன்னு நெறைய இருந்துச்சி. நடு நடுவுல ஒத்தையடிப் பாதை ஒண்ணு வளைஞ்சு வளைஞ்சு சுத்தி வந்துது. பாக்கறதுக்கு அழகாத்தான் இருந்துது. ஆனா கரண்டு இல்லாம எப்புடி? நம்ம சேட்டுதான் வித்தியாசமா விரும்புற ஆளாச்சே.

தொபுகடீர்னு சேட்டு கட்டில்மேல உகார்ந்தாரு. அவரை விட்டுவிட்டு நாங்க வெளியில வந்துட்டோம். நான் காருக்குப் பக்கதிலிருந்த என் ரூமுக்கு போனேன். நல்லா வசதியா இருந்துச்சி. பேச்சுத்துணைக்கு வாச்மேன் இருந்தாரு.

"வாச்மேன் அண்ணே, என்ன கொடுமை பாத்தீங்களா? எவ்ளோ பெரிய பணக்காரன் இந்த சேட்டு, இந்த மண்ணு குடிசைல குந்திக்க ஆசப்படறான். என்னத்தச் சொல்ல?" என்று சலிச்சிக்கிட்டேன் நான்.

"ஒரு ராத் தங்க இருபதாயிரம் தம்பி. நம்புவியா? அது மட்டுமில்ல. இந்த குடிசைய புக் பண்ணி தங்கறவுங்களுக்கு எல்லாமே கிராமத்து டைப் சமையல், சாப்பாடு. பின்னால இருக்கிற சோலார் வாட்டர் ஹீட்டர் வழியா சுடுதண்ணி, பாத்ரூம்ல இருக்கிற பித்தள அண்டாவுக்கு வந்துடும். மொண்டு மொண்டு ஊத்தி குளிக்கணும். இந்த மாதிரி வீடுங்களுக்கு பேரு 'எக்கோ ஸ்டைலு ரிசார்ட்டு.' ஏதோ இயற்கை அது இது அப்படீன்றாங்க. ங்கொய்யால, ஒண்ணுமே இல்லாததுக்கு ரேட்டு போட்டு தீட்டிருவானுவ. ஃபைவ் ஸ்டார் ஓட்டலாச்சே!" வாட்ச்மேன் விவரம் சொன்னாரு.

"சாப்பாட்டு மெனுவை கேட்டின்னா, கெக்கேபிக்கேன்னு சிரிப்ப. காலம்பர சுக்கு காப்பி. அப்புறம் இட்டிலி, ஆப்பம். பதினோரு மணிக்கு ஒரு ஜோடுதலை நெறைய கம்பங்கூழு. மதியானம், கேழ்வரகு களி, கொஞ்சம் சோறு, மொச்கக்கொட்டை போட்ட கருவாட்டுக் குழம்பு. சாயுங்காலம் கொழுக்கட்டையும், சுக்குக் காப்பியும். ராத்திரிக்கு நாட்டுக்கோழி கறிக்குழம்பு. ஆனா செம டேஸ்ட்டா இருக்கும். எல்லாத்தையும் ஒரு காரைக்குடி ஆச்சிதான் செய்யுது, அதுக்கு சம்பளம் நாப்பதாயிரம் ரூவா."

எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு. சிரிப்பும் தாங்கிக்க முடியலை.

"அட தம்பீ, இன்னும் இருக்கு கேளு... நல்லெண்ணையை தும்பைப்பூ போட்டு காய்ச்சி எடுத்துக்கிட்டு, ஒரு கரடு முரடான ஆளு வந்து மசாஜ் செய்ஞ்சி விடுவான். சும்மா, செத்த பொணத்த கொளுத்தும்போது, வெட்டியான் ஓங்கி ஓங்கி அடிப்பாம்பாரு, அதுமாதிரி சொத்து பொத்துன்னு மொத்தி எடுத்துடுவான். இதுக்கு பேருதாம்பா ஸ்பா." என்று சிரிப்பை அடக்க முடியாம சொல்லி முடிச்சாரு.

"வாச்மேன் அண்ணே, திருத்தணி பக்கத்துல மலைப்பாக்கம் அப்படீன்ற ஊருல எங்க தாத்தா இருக்காரு. எவ்வளவு கூப்பிட்டும் பட்டணத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. இங்க பாக்குறீங்க பாருங்க... இதே கெட்டப்புலதான் எங்க தாத்தா குடிசைபோட்டு, ஆடு மேய்ச்சி வாழ்ந்துகிட்டிருக்காரு. அதே கூழு, களி, சோறுதான் திங்கிறாரு. அது கஷ்டமான வாழ்க்கை. இங்க சொகுசான வாழ்க்கை. என்னணே உலகம் இது... த்தூ..." என்று சொல்லி நான் சலித்துக் கொண்டேன். "ஒரு இன்கிரிமெண்ட் போட்றதுக்கு பத்து தடவ யோசிப்பாண்ணே இந்த சேட்டு...!."

ஆடு, கோழி, மீனு, நண்டுன்னு என்னோட மெனு ஐட்டங்க ரெண்டு நாளா சும்மா ஜமாய்ச்சுது. நால்லா சாப்பிட வேண்டியது. சுத்திப்பாக்கவேண்டியது, கடல்ல குளிக்க வேண்டியது, தூங்க வேண்டியதுன்னு, போதாக்குறைக்கு வாச்சுமேன் அண்ணனின் சளைக்காத பேச்சு வேற. எனக்கு ரெண்டு நாள் போனதே தெரியலை.

ரெண்டாம் நாள் திரும்பிப் போக நானும் சேட்டுவும் தயாரானோம். என் கையில் கிரெடிட் கார்டு கொடுத்து பில்லை செட்டில் பண்ணச் சொல்லி இருந்தார். பில்லைப் படித்துக்கொண்டே மெயின் கேட்டில் இருக்கும் ரிசப்ஷன் ஆபீசுக்கு போனேன். நாப்பத்தி எட்டாயிரத்துச் சில்லரைக்கு பில். அட தேவுடா, ஒரு கப் கம்பங்கூழ் நானூத்து அம்பது ரூபாய். சுக்குக் காப்பி நூத்தி எண்பது. கொழுக்கட்டை அறுனூத்திப் பத்து. கறிச் சாப்பாடு ஆயிரத்து சொச்சம். நல்லெண்ணைக் குளியலுக்கு ஏழாயிரத்து நானூறு. பிளஸ் டேக்ஸ். எனக்கு பெருமூச்சு வந்தது.

அடேய் ஏழுமலையானே, ஏண்டா இந்த வித்தியாசம்?

சேட்டு காரில் ஏறி உட்கார்ந்து இருந்தாரு. "ஆறுமுகம்... ரொம்ப சந்தோஷமா இருக்கேண்டா. நல்லா ரிலாக்ஸ் பண்ணினேன். நாம கட்டின பில்லுக்கு இது ரொம்ப வொர்த்." என்று வாயெல்லாம் பல்லாகச் சிரித்தார். "நீ என்னடா டல்லா இருக்க? நாளைக்கும் தயாரா இரு ஆறுமுகம். அக்காராம் அண்டு துக்காராம்ல இருந்து போன் வந்துது. வைர மாலை ரெடியாயிடுத்தாம். திருப்பதி போகணும்."

"சரி சேட்டு." என்று அவரோட உற்சாகமான முகத்தப் பார்த்து, அவருக்கு செயற்கையாக சிரித்து பதில் சொன்னேன்.

வரும்போது எனக்கு இருந்த உற்சாகம், திரும்பிப் போகும்போது காணவில்லை!

இ.சி.ஆர். ரோடுல, பென்ஸ் கார் ஏனோ கொஞ்சம்கூட சத்தமே இல்லாம மௌனமா போய்கிட்டே இருந்துச்சி. அந்த மௌனம் என்னோட கனத்த மனசுக்கு சப்போர்ட் பண்ணினாப்புல இருந்துச்சு. என்னைப்போல, அதுவும் ஒரு இயந்திரம்தானே?!

18.11.11

கடவுளுக்காகக் காத்திருந்தேன்


சுற்றி வளைத்துப் பேசாமல், எடுத்தவுடனேயே நான் விஷயத்துக்கு வந்துவிட விரும்புகிறேன். ஏனெனில் நான் உங்களுக்கு சொல்லப்போகும் இந்த செய்தி என்னைப் பொருத்தவரை அதி முக்கியமானது. இந்தச் செய்தியைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியடையவும் கூடும்.

அந்தச் செய்தி இதுதான் :

நான் கடவுளைப் பார்த்தேன். உலகத்திலேயே முதன் முறையாக, அதுவும் நேரடியாக. நேருக்கு நேர் நின்று பேசினேன். நான் மட்டுமல்ல. சாட்சிகளாக என்னுடன் இன்னும் இரண்டுபேர். இது நடந்தது சென்ற வாரம் வியாழக்கிழமை, காலை ஆறு பத்துக்கு. அண்ணாச்சி மளிகைக் கடையில் வைத்து கடவுளை நேருக்கு நேராக நாங்கள் பார்த்தோம்.

நான் ஏதோ கதை புனைவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். இட்டுக்கட்டி சொல்வதாகவும் கருதவேண்டாம். அல்லது இந்த ஆள் எப்பவும் நாத்திகம் பேசுகிற ஆள்தானே, சும்மா புருடா விட்டு கலாட்டா செய்கிறான் என்றும் நினைக்கவேண்டாம். ஏனெனில் இந்தச் செய்தி உங்களுக்கு அண்டப்புளுகாகத் தெரியலாம். ஆனால் பார்த்ததற்கான சாட்சிகள் இருப்பதால், மற்ற கடவுளைப் பார்த்த 'கதைகள்' போல, இதை நீங்கள் ஒரேயொரு சதவிகிதம் கூட மறுக்க முடியாது. நான் கடவுளை நேரில் பார்த்தேன் என்பதனால் சிரிக்கவோ, கோபப்படவோ, அல்லது நிதானம் தவறிவிடவோ வேண்டாம். நம்புங்கள்.

பொதுவாக, தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் எனக்கான சாபக்கேடு ஒன்றை நான் நிவர்த்தி செய்தாகவேண்டும். காலை ஆறு மணிக்கெல்லாம் இரண்டு ரூபாய்க்கு பச்சை மிளகாய் கேட்டு, அண்ணாச்சிக்கடை வாசலில் நிற்பது! இதுதான் அந்தச் சாபக்கேடு. ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல... அனேகமாக, தினந்தோறும்.

என் மனைவி பத்து நாளைக்கு ஒரு முறை இறுனூறு ரூபாய்க்கு ஒரு பை நிறைய காய்கறிகளை வாங்கிவந்து பிரிட்ஜில் அடைத்துவிடுவாள். பச்சை மிளகாயைத் தவிர்த்து. வேண்டுமென்றல்ல. மறதிதான் காரணம். காலையில் இட்டிலிக்காக சட்டினி அரைக்கும்போது, கத்திக்கொண்டிருக்கும் மிக்சி, மிள்காய் கேட்டு நிற்கும். பச்சை மிளகாய். கொஞ்சம் நான் சுணக்கம் காட்டினேனென்றால், 'இட்டிலிக்கு சர்க்கரை தொட்டுக்கறீங்களா' என்கிற கோபமான கேள்வியால், அடுத்த நொடி அண்ணாச்சி கடை வாசலில் நான் நிற்பேன்.

அண்ணாச்சிகூட எத்தனையோ முறை கிண்டலடித்திருக்கிறார் "என்னையா, காடு, மேடு, மலையெல்லாம் சுத்தி மார்கெட்டிங் செய்யுதீரு... எங்கனயாவது ஒரு எடத்துல வண்டிய நிறுத்தி ஒரு ரெண்டு ரூபாய்க்கு பச்சை மிளகாயை வாங்கி பெட்டியில வச்சிக்கப்படாதா? அந்த அளவுக்கு என்னையா மறதி உமக்கு? உலகத்து கதை மொத்தம் பேசத் தெரியுது, நியாயம் அனியாயம் பேசுதீரு, கடவுள் இல்லை, கருமாந்திரம் இல்லை அப்படீன்றீரு, ஆனா, இந்த மறதியப் போக்கறதுக்கு இன்னும் நீர் வழி கண்டுபிடிக்கலையாக்கும்?! வேற." எது பேசினாலும் 'வேற' என்றுதான் முடிப்பார். மளிகை வியாபாரத்தில் அது அவ்வாறு அவருக்கு பழக்கமாகிப்போனது.

"அட அத விடுங்க அண்ணாச்சி. ஜாப் டென்ஷன். எனக்கும் மறதி. என் மனைவிக்கும் மறதி. பச்சை மிளகாய்க்கும் எங்களுக்கும் அப்படியொரு ராசி. நீங்க ரெண்டு ரூபாய்க்கு பச்ச மிளகாய் கொடுங்க. அப்புறம் லேட் ஆகிடும்" என்று நான் அவரை விரைவுபடுத்துவேன்.

பல நாட்கணக்கான போராட்டம் இந்த பச்சை மிளகாய் விவகாரம். ஆனால் இந்த சோகக் கதைக்குள்ளே என் சிறிய சொந்தக் கதையும் சொருகிக்கிடக்கிறது.

இரண்டு வருடத்துக்கு முன்னாடி, பாழாய்ப்போன எங்கள் ஃபேமிலி டாக்டர் என் மனைவியிடம் தீர்மானமாக சொல்லிவிட்டார்.
"இங்க பாருங்கம்மா. இந்த மெடிகல் ரிபோர்ட்படி, உன் புருஷங்காரன் தண்ணி, சிகரெட்டு இதெல்லாம் இன்னையிலேருந்தே விட்டுடனும். கொலஸ்ட் ரால் ஹை ரிஸ்க்குல இருக்கு. எனி டைம் ஹார்ட் அட்டாக் வரலாம். கவனமாப் பார்த்துக்குங்க..."

அன்றிலிருந்து கண்கொத்திப் பாம்பானாள் என் மனைவி. கண்டிப்பான கண்டிப்பில் எல்லாத்தையும் விட்டாச்சு; இந்த கருமம் பிடித்த சிகரெட்டைத் தவிர்த்து.

காலையில் பச்சை மிளகாய் வாங்குவது என்பது என்னைப் பொருத்தவரையில் ஒரு சாக்கு. அண்ணாச்சிக் கடையில் வந்து ஒரு திருட்டு தம் அடிக்க இது ஒரு குருட்டு அல்லது திருட்டு வழி. வீட்டுக்குத் தெரியாமல், அண்ணாச்சிக் கடையில் சிகரெட்டுக்கு மட்டும் தனி அக்கவுண்டு. ஆனா அண்ணாச்சி அடிக்கடி 'போட்டுக்கொடுத்துட்றேன்' என்று சொல்லிக்கொண்டிருப்பாரே தவிர, இது வரை அது நடக்கவில்லை.

"உன் உடம்பைவிட புகைதான் முக்கியமாய்யா? விட்டுத் தொலைக்கணும்னு நெனைச்சா, விட்டுரலாம். ஆனா பாத்துக்க. ஒரு நாளைக்கு இல்லைன்னா ஒரு நாள் நான் அம்மாகிட்ட விஷயத்தை ஒப்பிச்சுடுவேன். வேற," சலிப்புக் கலந்த குரலோடு, குறி தவராமல் சிகரெட்டு ஒன்றை எடுத்து அந்த அழுக்கு மரப்பலகையின்மீது வீசி எறிவார். அந்த வீசலில் அவரது கோபமும், கண்டிப்பும், எச்சரிக்கையும் எனக்கு தெரிவிக்கப்படும். தினந்தோறும்!

இந்த முன்னுரையின்படிதான், போன வியாழக்கிழமை, கடவுளை நான் நேரில் பார்க்க நேரிட்டது!

என்றைக்கும்போல அன்றும் அண்ணாச்சி கடையில் பச்சை மிளகாய் கேட்டு நிற்கிறேன். எனது பக்கத்தில் இரண்டு பேர். ஒரு பையன் பால் பாக்கெட், நூடுல்ஸ் வாங்கவும், இன்னொருவர் வெங்காயம், கத்தரிக்காய் வாங்கவும் வந்திருந்தனர்.

இங்கேதான் முக்கியமான கட்டத்தை நெருங்குகிறோம். கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள். நான் ஒரு முறைக்கு இருமுறை பச்சை மிளகாய் கேட்டும் அவர்களும் பால், வெங்காயம் என்று கத்தியும், அண்ணாச்சி அப்படியே கற்சிலை மாதிரி நின்றிருந்தார். கண்களும் இமைக்கவில்லை. ஓரிரு நிமிடங்கள் அவ்வாறு இருந்திருக்கலாம். இப்போது அண்ணாச்சி கேட்டார்.

"உனக்கென்ன, பால் பாக்கெட்டா, அந்த பெட்டியிலே இருக்கு. எடுத்துக்க. பதினாலு அம்பது. வேற?"

"என்ன ஆச்சு அண்ணாச்சி உங்களுக்கு. கொஞ்ச நாழி, அப்படியே பிரமை பிடிச்சாப்ல நின்னுட்டீங்க?" என்று நான் கேட்டேன்.

அதற்கு அண்ணாச்சி, "நாந்தாண்டா கடவுள். உன்னைத்தான் பார்க்க வந்தேன்!" குரல் தீர்க்கமாகவும், கூர்மையான பார்வையுடனும் என்னைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

"என்ன அண்ணாச்சி, காலங்காத்தால விளையாட்டு?" என்றேன். நானும், அந்தப் பையனும் மற்றொருவரும் அண்ணாச்சி முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

"எனக்கு அரைக்கிலோ வெங்காயம், அரைக்கிலோ கத்தரிக்காய் கொடுங்க அண்ணாச்சி" என்றார் மற்றவர்.

கை நிறைய வெங்காயம் அள்ளி எலக்ட்ரானிக் தராசு மீது வைத்தார். அது மிகச் சரியாக 500 கிராம் காட்டியது. அதை எடுத்து ஒரு கவரில் போட்டுவிட்டு, கை நிறைய கத்தரிக்காய் அள்ளியெடுத்தார். ஒரே அள்ளு. இந்த முறையும் எலக்ட்ரானிக் தராசு 500 கிராமை மிகச் சரியாகக் காட்டியது.

பையன் சொன்னன். "அண்ணாச்சி, உண்மையிலேயே நீங்க கடவுள்தான். ஒரே அள்ளு அள்ளினா சரியா 500 கிராம்! எப்படி அண்ணாச்சி? சரி எனக்கு நூடுல்ஸ் கொடுங்க."

அண்ணாச்சி வெறும் கையை பையனின் முகத்தருகே நீட்டினார். ஒரு பெரிய பேப்பர் கப்பில் சுடச்சுட ஆவியோடு நூடுல்ஸ்.

நாங்கள் மூவரும் சற்றே அதிர்ச்சியுற்று ஓரடி பின்னால் நகர்ந்தோம். இப்பொழுதுதான் எங்களுக்கு ஏதோ ஒன்று விளங்கியது. அண்ணாச்சி அண்ணாச்சியாயில்லாமல் வேறு யாரோவாக இருக்கிறாரென்று. எங்களுக்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

"அண்ணாச்சி?!" என்று குறுகிய குரலில் நான் அவரை அழைத்தேன்.

"நம்பிக்கை இல்லையா?.... இதை கையில் எடு!" என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து பலகை மீது வைத்தார். கையில் எடுத்துப் பார்த்தேன். பழக்கமான கனத்தைவிட அதிக கனமாக இருந்தது. ஒரு கிலோவுக்கும் மேல் இருக்கலாம். அதை ஆட்டிப் பார்த்தபோது கலகலவென்று உலோகச் சத்தம் கேட்டது.

"பிரித்துப் பார்," என்றார் அண்ணாச்சி.

பையன் வெடுக்கென்று என் கையிலிருந்து பிடுங்கி அதைப் பிரித்தான். அந்த பிஸ்கட்டுகள் உலோகத்தால் இருந்தது. மின்னியது.

"பையா, இது தங்க பிஸ்கட்டு. வேற." என்றார் அண்ணாச்சி.

பையன் இரு கால்களும் மடங்கியவாறு மயங்கி தரையில் சொத்தென்று விழுந்துவிட்டான்.

"இப்போ பாருங்க... இந்த வழியா முதலமைச்சர் போவார்." என்றார் அண்ணாச்சி. அடுத்த வினாடி, பைலட் கார்கள் புடைசூழ முதல்வர் எங்களைக் கடந்து போனார். எங்களைப் பார்த்து கையசைத்தார்.

இப்போது வெங்காயம் கத்தரிக்காய் வாங்க வந்தவர் மெதுவாக அங்கிருந்து நழுவினார்.

"அண்ணாச்சி," என்றேன் நான் ஆச்சரியம் கலந்த குரலில். நானும் நழுவிவிடலாமா என்ற யோசிப்பில் இருந்தேன்.

"நான் அண்ணாச்சியில்லை. கடவுள். உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்."

சிறிது நேரம் மௌனம் நிலவியது.

நான் கேட்டேன். "சொல்லுங்க... ஏன் என்னைப் பார்க்க வந்தீங்க?"

"கடவுள் இல்லை என்கிற உன் வாதத்தை மறுக்கவும், என்னை உனக்கு எடுத்துக்காட்டவும், உனக்குத் தேவையான சாட்சிகள் உன் பக்கத்திலேயே இருக்க, இங்கே வந்தேன். சாட்சிகளோடு என்னை நீ பார்த்துவிட்டாய். இப்போது என்னை நம்புவாய்தானே? இருந்தாலும் உன்னால் மக்களை நம்பவைக்க முடியாது பார்க்கிறாயா?!"

"அண்ணாச்சி... நான் நம்பவில்லை. நீங்கள் கடவுள் இல்லை. அண்ணாச்சிதான்" என்று அவரிடம் சொல்லிகொண்டிருக்கும்போதே வெங்காயம் வாங்க வந்த ஆள் ஒரு பத்து இருபது பேரோடு திபுதிபுவென்று அண்ணாச்சி கடை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

நான் திரும்பவும் அண்ணாச்சியைப் பார்த்தேன். முழு உருவமாய்த் தெரிந்த அண்ணாச்சி நீருக்குள் தெரியும் உருவம்போலத் தெரிந்து பின்பு மறைந்துபோனார்.

அதற்குள் கடை முன்னால் கூட்டம் கூடிவிட்டது. "என்ன, என்ன ஆச்சு." என்று ஆளாளுக்கு கேள்வி கேட்டனர்.

அதே நேரம் சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து கடையை நோக்கி அண்ணாச்சி நடந்து வந்துகொண்டிருந்தார்.

"என்ன, என்ன ஆச்சு? அதோ அந்தாண்ட போயி ஒண்ணுக்கடிச்சிட்டு வர்றதுக்குள்ளாற என்ன நடந்துபோச்சி?" என்று கேட்டவாறு கடைக்குள்ளே நுழைந்து போனார். இந்தச் களேபரச் சப்தத்தில் மயக்கம் தெளிந்து பையன் எழுந்து திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தான்.

"என்ன ஆச்சின்னா கேக்கிறீங்க? அண்ணாச்சி... நடிக்காதிங்க!" என்று உரத்த குரலில் நான் அவரிடம் கேட்டேன். "பையன் மயங்கி விழுந்ததுகூட உங்களுக்குத் தெரியாதா?"

"தெரியாதே. பாலும் நூடுல்சும் வாங்கிக்கிட்டு போய்ட்டான்னுதான் நினைச்சேன். வேற."

"அட அண்ணாச்சி. இந்த ஆள் என்னமோ நீங்க கடவுளா மாறிட்டீங்கன்னு சொல்றாரு. சூடா நூடுல்ஸ் எடுத்து முகத்துக்கு நேரா காட்டினீங்களாமே. தங்க பிஸ்கட் காடினீங்களாம். உண்மைதானா?" என்று கூட்டத்திலிருந்து ஒரு ஆள் ஆச்சர்யத்தோடு கேட்டான்.

"ஆமாய்யா, நான் மளிகை யாவாரத்த விட்டுட்டு, மந்திரம் கத்துக்கிட்டு வந்திருக்கேன். அட போங்கையா. அடக்க முடியலையேன்னு, அதோ அந்தாண்ட போயி ஒண்ணுக்கடிச்சிட்டு வர்றேன். என்னயப் போயி கடவுள், புண்ணாக்குன்னு சொல்லிக்கிட்டு. யாரு... இந்தாளு எதாச்சும் பிரசங்கம் பண்ண ஆரம்பிச்சுட்டாரா?" என்று என்னைக் கோபமாக பார்த்தவாறு கேட்டார்.

எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். "நீங்க பார்த்தீங்களா சார்?"

"ஆமாம். நான் பார்த்தேன். இவுங்க ரெண்டுபேரும்கூட பார்த்தாங்க." என்று நான் சொன்னபோது பையனும் தலையை ஆட்டினான்.

"பிஸ்கெட் பாக்கெட்டிலிருந்து தங்க பிஸ்கெட்டை நாந்தான் பிரிச்சுப் பார்த்தேன். அத்தனையும் தங்கம்." என்று ஆச்சரியப்பட்டுச் சொன்னான் அந்தப் பையன்.

"என்ன அண்ணாச்சி. நீங்க இல்லைன்னு சொல்றீங்க. இந்த ஆளை விடுங்க. இந்தப் பையன் ஏன் பொய் சொல்லப்போறான்?"

அண்ணாச்சி முகத்தில் கோபம் கொப்புளித்துக்கொண்டு வந்தது. "என்னையா, காலங்காத்தால விளையாட்டுக் காட்டுறீங்க? வீணா பிரச்சினை பண்ணாதீங்க. தங்கம்கிறீங்க. பிஸ்கட்டுங்கறீங்க. என்ன, நான் திருட்டுதனமா செய்யுறேன். உள்ளார வந்து பாருங்கையா." என்று உரத்த குரலில் அந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கத்தினார்.

வெங்காயம் வாங்க வந்த ஆள் சடாரென்று கடைக்குள் புகுந்து இங்குமங்கும் பார்த்தான். வேகவைக்கப்பட்ட நூடுல்சோ அல்லது தங்க பிஸ்கட்டுகளோ ஏதும் அவர் கண்ணீல் படவில்லை.

"இல்லை. நாங்கள் பார்த்தோம்." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே சைரன் ஒலியுடன் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து லத்தியுடன் ஒரு கான்ஸ்டபிள் கீழே இறங்கிவந்தார். "என்னைய்யா கூட்டம் இங்கே?"

ஒரிரு நிமிடம் மௌனம் நிலவியது. யார் முதலில் சொல்வதென்கிற குழப்பம். இப்பொழுது பையன் பேசினான்.

"சார். இங்கே கடவுள் வந்தார் சார். நாங்க பார்த்தோம்."

கான்ஸ்டபிள் சற்றே மிரண்டாவாறு, பையனின் தலையைக் கோதினார். "கடவுளைப் பார்த்தியா? உன் பேரு என்ன? எங்கேருந்து வர்றே?" என்று கேட்டுக்கொண்டே, ஜீப்பின் அருகில் சென்று குனிந்து இன்ஸ்பெக்டரிடம் பேசினார். "ஐய்யா, இங்க ஏதோ கடவுள் வந்தாராம். அந்தப் பையன் ஸ்டேட்மெண்ட் குடுக்கறான். கொஞ்சம் இறங்கிவந்து என்னான்னு பாருங்க."

இன்ஸ்பெக்டர் கீழே இறங்கி எங்களை நெருங்கி வந்தார். "என்னையா... என்ன பிரச்சினை இங்கே?" என்று எங்கள் அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தார். கழுத்து நிறைய ருத்ராட்சக் கொட்டை மாலை போட்டுக்கொண்டு, சந்தனப்பொட்டும் குங்குமமும், விபூதி வாசமுமாக, ஐயப்ப பக்தராய் இருந்தார்.

அண்ணாச்சி உரத்த குரலில் சொன்னார். "வீணா பிரச்சினை செய்ய்யுறாங்க. கடவுளைப் பார்த்தாங்களாம். தங்க பிஸ்கட் பார்த்தாங்களாம். புரளி கிளப்புறாங்க சார். இதோ.. இங்க மாட்டியிருக்கிற ஏசுராஜா படத்து மேல சத்தியமாச் சொல்றேன். அப்படியெல்லாம் ஏதும் நடக்கவேயில்லீங்க."

"தங்க பிஸ்கட்டை யார் சாமி பார்த்தது?" என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"நான்கூட பார்த்தேன். இந்தப் பையந்தான் பாக்கெட்டிலிருந்து பிரிச்சான்," என்றேன் நான்.

"நீங்க கொஞ்சம் வெளியில வாங்க சாமி..." என்று அண்ணாச்சியை வெளியேற்றிவிட்டு, இன்ஸ்பெக்டர் உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்து தீவிரமாகத் தேடினார். அந்தத் தேடுதலில் ஏட்டும் இணைந்துகொண்டார்.

ஒரு பத்து நிமிடத் தேடலில் ஏதும் கிடைக்கவில்லை என்கிற முடிவோடு இருவரும் வெளியில் வந்தனர். அண்ணாச்சி மீண்டும் கடைக்குள் போய் நுழைந்துகொண்டார்.

கூட்டத்தைப் பார்த்து உரத்த குரலில், கைகளை உயர்த்தி இன்ஸ்பெக்டர் பேசினார்.

"இங்கே பாருங்க. இப்பதான் சி.எம் இந்த வழியா திடீர்னு போனாங்க. எங்களுக்கு இன்ஃபார்மேஷன் கொடுக்கவேயில்ல. ஏற்கெனவே போட்ட ஷெட்யூல்ட் ரூட்ல டிராபிக் அதிகமா இருக்குன்னு, திடீர்ன்னு இந்த வழிய செலக்ட் செய்து, இப்பத்தான் போனாங்க. இந்த நேரத்துல, கடவுள்... தங்க பிஸ்கட் அது இதுன்னு புரளி கிளப்பி கூட்டம்போட்டிங்கன்னா, நல்லாயிருக்காது. அப்புறம் எல்லாரையும் ஸ்டேஷன் கூட்டிகிட்டுபோய் தீவிரமா விசாரிக்க வேண்டியிருக்கும். கடவுளைப் பார்த்தாங்களாம்... கடவுளை! இது கம்ப்யூட்டர் யுகம்யா! என்ன, கேக்கறவனை கேணைன்னு நெனைச்சீங்களா? நான் மாலை போட்டிட்டிருக்கேன். இல்லைன்னா வண்டை வண்டையா வார்த்தைங்க வந்து விழும். இங்கேருந்து எடத்தை உடனே காலி பண்றீங்களா, இல்ல, ஸ்டேஷனுக்கு வர்றீங்களா?"

போதாக் குறைக்கு ஏட்டு தரையில் லத்தியைத் தட்டினார். கூட்டம் பின்னோக்கிக் கலைந்தது.

பையன் பால் கவரையும் நூடுல்ஸ் பாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு காசைக் கொடுத்துவிட்டு, அண்ணாச்சியின் முகத்தை தயக்கத்துடன் பார்த்தவாறே சென்றான்.

"என்ன அநியாயம் பாருங்க," என்னைப் பார்த்துப் புலம்பியவாறு, வெங்காயம், கத்தரிக்காய் பையை எடுத்துக்கொண்டு இன்னொருவர் புறப்பட்டார்.

அண்ணாச்சி சொன்னார். "வந்தமா, ஜாமான வாங்கனுமா, போனமான்னு இருக்கணும். உன் பொஞ்சாதி சொல்றாப்ல, இங்க வந்தும் பிரசங்கம் ஆரம்பிச்சுட்டியா? வரவர உன் நடவடிக்கையே சரியில்லையே? பச்சமிளகாய எடுத்துக்கிட்டு மொதல்ல இங்கேருந்து கிளம்பு. கடவுளைப் பார்த்தாராம். பேச்சு பேசறது மட்டும் வாய்க்கு ஒருதரம் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை' அப்படீங்கறது. ஊருக்கு ஒரு நியாயம்... உனக்கு ஒரு நியாயமா? கொஞ்ச நேரத்துல எவ்வளவு கலாட்டா பண்ணிப்போட்ட? மொதல்ல கெளம்புய்யா இங்கேருந்து" என்று காகிதத்தில் மடித்த பச்சைமிளகாயை என் கையில் திணித்தார். "அப்புறம்... உன் சிகரெட்டுக் கணக்கு நூத்தி எம்பது ரூவா ஆகுது. நாளைக்கு குடுத்துரு. இனிமே உன் சங்காத்தமே வேணாம். வேற." என்று முகத்தை திருப்பிக்கொண்டார்.

முகத்தில் ஈயாடாத குறையாக வீடு நோக்கி நடந்தேன்.

என்னை எதிர்பார்த்துக் காத்திருந்த என் மனைவி நான் மெல்ல, சோர்ந்து நடந்துவந்ததைப் பார்த்து உரத்துக் கத்தினாள். "ஒரு இடம் பாக்கி விட்றதில்லை. முடி வெட்டிக்கப் போனா அங்க ஒரு பிரசங்கம். ரேஷன் கடைக்குப் போனா அங்க ஒரு பிரசங்கம். மளிகைக் கடைக்குப் போனா அங்க ஒரு பிரசங்கம். பெரிய ரோதனையா போச்சிய்யா உன்னோட. போனா போன இடம், வந்தா வந்த இடம்." ஏதோ பாத்திரங்களை உருட்டிவிட்டு அவளின் கோபத்தைக் காட்டினாள். "கடவுளே, இந்தாளுக்கு நல்ல புத்தியக் குடு."

நான் ஏதும் மறு பேச்சு பேசவில்லை. என் மனம் அதீதக் குழப்பத்தில் இருந்தது. நடந்த எது ஒன்றையும் என்னால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஏனென்றால் நான் என் இரு கண்களாலும் நிகழ்வுகளைப் பார்த்தவன்.

வார இறுதியில் விவாதக் கூட்டங்கள், அரங்கக் கூட்டங்கள், பொதுமேடைப் பேசுக்கள், நாத்திகம் அல்லது அறிவியல் விவாதங்கள், மார்க்சிய சிந்தனைகள். என்ன பிரயோசனம்? அட... இது நான் தானா? என்ன நடந்தது இன்று? இதை என் தோழர்களிடத்தில் எப்படி விவரிப்பேன்? எப்படி விவாதிப்பேன்? அவர்கள் இதை நம்புவார்களா? நகைக்கமாட்டார்கள்? ஆனால் இது நடந்ததே? எந்த விதத்தில் யோசித்தாலும் இது சாத்தியமில்லை. ஆயினும் நடந்தது!

என் மனைவியின் பல்வேறு புலம்பல்களுக்கிடையே நான் இங்குமங்கும் நடந்தவாறிருந்தேன். என் மனம் ஒரு நிலையிலில்லை. ஒரு பக்கம் அதிர்ச்சி. ஒரு பக்கம் அவமானம். என் மனைவியிடம் நடந்ததை பகிர்ந்துகொள்ள விருப்பமில்லை. ஏனெனில் ஏற்கெனவே 'கொஞ்சம் லூசு' என்று பேர் வாங்கி இருந்த நான் அவளிடம் இன்னும் அவமானப் பட்டுப்போவேன்.

ஆனால் எனக்கு தீர்வு வேண்டும். அதை என் தோழர்களிடத்தில் நான் கேட்கவேண்டும்.

ஒரு தோழருக்கு செல்பேசியில் அழைத்து, நிறுத்தி நிதானமாக, பதற்றமேதுமில்லாமல், அவரிடம் தலையிலிருந்து கால் வரை நடந்ததை விவரித்தேன். சிறிது நேரம் எதிர் முனையில் மௌனம் காத்தார் தோழர். பின்பு சொன்னார்.

"தோழரே, இதுவரை நீங்கள் விளக்கியவரையில், எல்லாம் உங்களின் சுயநினைவோடுதான் நடந்ததென்று நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"

"ஆமாம், ஆமாம். அதில் ஏதும் சந்தேகமேயில்லை. நான் நடந்த எல்லாவற்றையும் பார்த்தேன். சாட்சிகளோடு."

"சரி தோழரே. நான் உங்கள்மீது வைக்கும் நம்பிக்கையால் நடந்தது நடந்ததாகவே எடுத்துக்கொள்கிறேன். இதன் சொச்ச மிச்சங்களை நாம் வார இறுதியில் மற்றவர்களோடு கலந்து விவாதிக்கலாம். ஆனால் நான் சொல்லவருவது ஒன்றேயொன்றுதான். அந்தக் கடவுளைப் பற்றி நீங்கள் கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளத் தேவையேயில்லை. ஏதோ வந்தான் அல்லது தோன்றினான்; தான் இருக்கிறேன் என்பதை ஒரு கடவுள் மறுப்பாளனுக்கு சாட்சிகளை வைத்துக்கொண்டு காட்சி தருகிறான். கூட்டம் வருகிறதென்று மறைந்துவிடுகிறான். அவ்வளவுதான். மூன்றே வரிகளில் இதுதான் நடந்தது.

அவனின் இந்த அவதாரம் 'தான் இருக்கிறேன்' என்பதை உறுதிசெய்வது மட்டுமே. இது மட்டும் தான் அவனின் நோக்கம். இருக்கட்டுமே. ஆனால் அதைப்பற்றியெல்லாம் நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள். இந்த உலகில் அவன் இல்லை என்பதற்கான ஆதாரங்களே அதிகம் உள்ளன. பசியும், நோயும், ஏழ்மையும், வசதியும், சாதியும், மதமும்... என உலகமே வேறுபட்டுக் கிடக்கிறது. இதையெல்லாம் சரிசெய்யமுடியாத ஒரு கடவுள் இருந்தால் என்ன; அல்லது இல்லாவிட்டால்தான் என்ன? ஏதோ தெரு முனையில் ஒரு குறளிவித்தைகாரன் உங்களுக்கு வித்தை காட்டியதாக நினைத்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் அவமானப்பட ஏதுமில்லை. இன்று அலுவலகம் லீவு போட்டுவிட்டு, நன்றாகப் படுத்து தூங்குங்கள். ஞாயிற்றுக்கிழமை நாம் சந்திப்போம். நன்றி." என்று தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

ஒரு இரண்டே நிமிட இடைவெளியில் அதே தோழர் திரும்பவும் என் செல்பேசியில் அழைத்து இவ்வாறு சொன்னார்.
"தோழரே, ஒரு முக்கியமான விஷயம். இன்னொரு முறையும் அத்தகைய 'கடவுள்' சந்திப்பு நேர்ந்த்தால், அடுத்த கணம் நீங்கள் யோசிக்கவே வேண்டாம். அவனின் கைகளிரண்டையும் பின்பக்கமாகத்திருப்பி, தெருக் கம்பத்தில் சேர்த்து கட்டிவைத்து, எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்கள் வரும்வரை விட்டுவிடவேண்டாம். ஏனென்றால், அவனை தீவிரமாக விசாரிக்கவேண்டியிருக்கிறது!"

ஒரு வார இடைவெளியில் என் மனம் ஓரளவு அமைதி கொண்டது.

பால் வாங்க வந்த பையனை தினந்தோறும் அருகிலுள்ள மசூதிக்கு அழைத்துச் சென்று, அவனை இப்பொழுது பூர்ணமாக குணப்படுத்திவிட்டதாகச் சொன்னார்கள்.

வெங்காயம் வாங்க வந்தவர்கூட மனவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குணமாகிவிட்டதாக கேள்விப்பட்டேன்.


இப்பொழுதெல்லாம் பச்சை மிளகாய் வாங்க அண்ணாச்சிக் கடைக்குப் போனாலும், எனக்கு அவரிடமிருந்து பழைய நட்போடு வரவேற்பு கிடைப்பதில்லை. அதேபோல, கடனுக்கு சிகரெட்டும் கொடுப்பதில்லை. எனக்கு மரியாதை கிடைக்காத இடம்தான். ஆனாலும் நான் அங்கே போயாக வேண்டும். அது எனது கடமை.

என்றாவது ஒருநாள் 'அவன்' திரும்பி வருவான் எனும் நம்பிக்கையில் நான் காத்திருக்கிறேன்!

அப்படி வந்தால், அன்றோடு அவன் கதை தீர்ந்தது!!





14.11.11

வாழ்வின் பொருள் தேடும் அகராதிகள்



கேட் மெல்லத்திறக்கப்பட்டு, எட்டிப் பார்த்தவாறே பார்வை உள்ளே சென்றது.

"வணக்கம் சார், அகராதி... இங்கிலீஷ் டு தமிழ்..."

"டேய்... எருமக் கடா, டேப் தட்றா... டேப் தட்றா"

"சேவ் பண்ணலையா, முண்டக்கலப்ப... எத்தனை முறை சொல்லியிருக்கேன், அர மணி நேரத்துக்கு ஒருக்கா சேவ் பண்ணுடான்னு? எஸ்கேப் தட்டு! கண்ட்ரோல் -ஆல்ட் - டெலிட்...?"

"சார்... வணக்கம். இங்கிலீஷ் டு தமிழ் அகரா..."

"சனியன் ஹேங்க் ஆகிடுத்து..."

"என்ன பண்றது இப்போ...? எம்டி கேப்பானேடா... அர்ஜெண்ட் ஜாப்... காலையிலேர்ந்து ஒர்க் பண்ணினது எல்லாமே வேஸ்ட்!"

"பன்னாட, ஒண்ணு, காப்பிய குடிச்சுட்டு வேலைய செய்திருக்கணும்... இல்லைன்னா காப்பியே வேண்டாம்னு சொல்லியிருக்கணும். கீ போர்டையே கொளமாக்கிட்டியேடா?"

"சார்........ சார்........ அகராதி சார். லேடஸ்ட் வெர்ஷன் சார்..."

"மூதேவி, அப்-டு-டேட்ல, டேலி பண்ணி வச்சிருந்தேன். எல்லாம் போச்சு. எம்டி கேக்கப்போறான். இண்ணிக்கித்தான் ஐ டி சப்மிஷன் லாஸ்ட் டேட்..."

"10 பெர்சண்ட் டிஸ்கவுண்ட் தர்றேன் சார். ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்!"

"வாட் 14% போட்டு என்ட்ரி குடுக்கறதுக்குள்ளார தாவு தீந்துபோய்டுத்து. ஒரு மாசத்து அக்கவுண்ட நாசனம் பண்ணிட்டியேடா..."

"சார்... இங்கிலீஷ் டு தமிழ்... ரொம்ப ஈசியா இருக்கும் சார்..."

"என்ன படிச்சி பிரயோஜனம்... உனக்கு மூளையே இல்லையே... மூஞ்சியப் பாரு?! எழுந்து வா... எம்டி கூப்பிடறான். பிராப்ளத்த சொல்லுவோம். கழுத, ஒத்துக்கிடுச்சின்னா சரிதான்... இல்லைன்னா வேற வேலைய பாத்து தேடிப் போகவேண்டியதுதான்..."

"சார், டிக்ஷ்னரி...?"

மூன்று பேர் எழுந்து எம் டி ரூம் கதவைத் தயக்கத்துடனே திறந்து எட்டிப் பார்த்தவாறு உள்ளே போனார்கள்.

மீண்டும் கேட் கதவு மெல்லச் சாத்தப்பட்டது.

"ஒரு நாலு டிக்ஷனரி கூவி விக்க லாயக்கில்ல... எம். காம் படிச்சிருக்கிற!" எப்பவும் போல சேல்ஸ் மேனேஜர் எறிந்து விழுவான்.

அடுத்த கேட் மெல்லத் திறக்கப்பட்டு, பார்வை தயங்கி உள்ளே சென்றது.

"வணக்கம் மேடம்... இங்கிலீஷ் டு தமிழ் டிக்ஷனரி மேடம்... பத்து பெர்சண்ட் டிஸ்கவுண்ட்..."

9.11.11

சனநாயகம் அருளிய பரதேசிக் கீதா



எது நடந்ததோ, அது இனி நன்றாகவே நடக்காது.
எது நடக்காதோ, அது இனி நன்றாகவே நடக்கும்.

எது நடக்க இருக்கிறதோ, ங்கொய்யால, அது நடந்தே தீரும்!
உன்னுடைய எதையும் நீ இழப்பாய்; எப்போதும் அழுவாய்.

எதை நீ கொண்டுவந்தாய்; அதை நீ கேட்பதற்கு?
எதை நீ வைத்திருக்கிறாய்; அதை அடமானம் வைப்பதற்கு?

எதை நான் எடுத்துக்கொண்டேனோ, அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ இழந்தாயோ, அது உன்னிடமிருந்தே திருடப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, அது நாளைமுதல் என்னுடையதாகிறது.
மற்றொரு நாள் வேறொருவருடையதும் என்னுடையதாகிறது.

இதுவே எனது நியதியும்
எனது ஆட்சியின் சாரம்சமும் ஆகும்.

- சனநாயகம் அருளிய பரதேசிக் கீதா.

5.11.11

நான், எலி, ஏரோப்பிளேன்...


ஜன்னலோரத்து காட்சிகள் வேகவேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. தரையிலிருந்து மேலெழும்பியவாக்கில் வெறும் காங்கிரீட் வனமாகக் காட்சி தந்தது சென்னை. சிறு இடைவெளியில் அதுவும் மறைந்து, நான் மேகக்கூட்டங்களுக்கு மேலே பறந்துகொண்டிருந்தேன்.

" ஐ அம் பத்மவாசன் ராகவாச்சாரி. நீங்க?" பக்கத்திலிருந்தவர் கேட்டார். சுருட்டை முடியில் செக்கச் செவேலென்றிருந்த ஒரு முப்பத்தைந்து வயதுக்காரர். முகத்தில் 'இந்திய வடு' தெரியவில்லை என்றால் அவரை யாரும் ஒரு வெள்ளைக்காரன் என்றே கூறிவிடலாம். நெற்றியில் சிவப்புக் கலரில் ஒரு திருஷ்ணக் கோடு. "யு கேன் கால் மி மிஸ்டர். ஐய்யர்."

அதெப்படி?! பத்மவாசனை பத்து என்றுதானே சுருக்கமுடியும்?

"எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவா. உங்க பேர் சொல்லையே?"

"ஐய்யனார் அஞ்சுவீட்டுசாமி. ஐய்யனார்னு கூப்பிடுங்க"

"ஓ, ஃபன்னி நேம். அதென்ன அஞ்சுவீட்டு சாமி?"

"அப்பாவுக்கு குலதெய்வத்தோட பேர். அதான்."

"எங்க வேலை?"

"கிரேன் ஆபரேட்டர். கத்தார்ல. நீங்க?"

"நாசா. கேள்விப்பட்டிருக்கியா? அதுலதான் சயின்டிஸ்டா இருக்கேன். மாசச் சம்பளம் ஆறு லட்சம்!"

இருக்கையில் கை வைத்துக்குகொள்ளும் இடத்திலிருந்து என் கை தானாக வெடுக்கென்று இழுத்துக்கொண்டது. அனிச்சையான மரியாதை. ஆஹா, நாசா!! எவ்வளவு பெரிய இடத்தில் வேலை. கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

"வாஷிங்க்டன்ல இருக்கேன். அத்திம்பேர் கூட என்னோடதான் வேலை பார்க்கறார். என்னோட அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோரும் வாஷிங்க்டன்லயே செட்டில்ட். ஓன் ஹவுஸ். எல்லாருமே என்.ஆர்.ஐ. திருவையாறு தியாகராஜ ஆராதனைக்கு வந்தோம். திடீர்னு எனக்கு ஆபீஸ்லேர்ந்து போன். முக்கியமான மீட்டிங்னுட்டு வரச்சொல்லிட்டா. அதான் நான் மட்டும் திரும்பிப்போறேன். அர்ஜென்டுக்கு இந்த பிளைட்தான் கிடச்சுது. கத்தார்லேர்ந்து பிளைட் மாறிடுவேன். பிரிடிஷ் ஏர்வேய்ஸ்."

எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. எவ்வளவு பெரிய ஆள்! எவ்வளவு கேஷுவலாகப் பேசுகிறார்? என்ன இருந்தாலும் படித்தவர்கள் படித்தவர்கள்தான்.

"மிஸ்டர் ஐய்யனார், நான் சென்னையிலதான் படிச்சேன். ஐ.ஐ.டி. கேள்விப்பட்டிருக்கீங்களா? அதில நான் ஏ கிரேடு. ஜஸ்ட் படிப்பை முடிச்சிட்டு படியிறங்கி வர்றேன், அப்படியே நாசாக்காரன் அள்ளிட்டான். கேம்பஸ் இன்டெர்வியூல, 'எஃப்.சி. திருச்சி பிராமணாள்னு' என் ரெஸ்யூம்ல பார்த்து கண்டுபிடிச்சுட்டான். இண்டர்வியூ பண்ணினவரும் பிராமின். அப்புறம்... நேரா நாசாதான். பத்து வருஷமாகுது. நீங்க எங்க படிச்சீங்க?"

"நானா, கொட்டாம்பட்டி புத்து மாரியம்மன் ஐ.டி.ஐ. டிப்ளமா சார்." என்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டேன். ஏனோ என் படிப்பை இவரிடத்தில் சொல்வதற்கு மிகுந்த சங்கோஜமாயிருந்தது.

நீண்ட நேரம் மௌனத்துக்குப் பிறகு ஐயர் கேட்டார். "நிறைய பேசலாம் ஐய்யனார். எனக்கு ஒரு உதவி செய்யணும். நீங்க தப்பா நெனைக்கலைன்னா, சீட்டு மாறி உட்கார்ந்துக்கலாமா? நேக்கு ப்ரயாணத்துல தூக்கம் வராது. அதனால ஜன்னலோரமாயிருந்தா வசதியாயிருக்கும்..."

எனக்கும் ஜன்னலோரம் பிடிக்கும்தான். ஆனால் இவர் வாய்திறந்து கேட்டுவிட்டரே என்பதற்காக சீட்டு மாறி உட்கார்ந்தாயிற்று.

விமானப் பணிப்பெண் தின்பண்டங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப்போனார். அவர் திரும்பிப் போன பிறகு ஐய்யர் சொன்னார் : "பாரு, கெழத்தையெல்லம் வச்சிருக்கு இந்த ஏர்வேஸ். பிரிடிஷ் ஏர்வேஸ்ல பளபளக்கும். இந்தியன் கவர்ன்மென்ட் பிளைட்... அப்படித்தானிருக்கும்!" ஒரு குறும்புப் பார்வையுடன் பேச்சைத் தொடர்ந்தார்.

"பட், யூ நோ மிஸ்டர் ஐய்யனார், இண்டியா இஸ் அ கிரேட் கன்ட்ரி. எவ்வளவு பெரிய மகான்கள் பிறந்த இடம் அது? ஆரியபட்டா, கணித மேதை ராமனுஜர், மகாத்மா, ராஜகோபாலச்சார்யாள், பெரியவாள்... சொல்லிக்கிட்டே போகலாம். அப்புறம் பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், கோலம், பஜகோவிந்தம்...! ஆனா பாருங்க... இந்த முறை திருவையாறு ஆத்தங்கரையில உட்கார்ந்து தியாகைய்யர் சன்னிதி கீர்த்தனைகளை கேட்க நேக்கு கொடுத்து வைக்கலை....

கீர்த்தனைன்னா ஞாபகம் வருது. ராஜா, ரஹ்மான்... வாவ். அதிலும் இந்த ரஹ்மான் இருக்கானே... அப்பப்பா என்ன ஒரு ம்ம்யூசிக்? 'என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்....' கேட்டுப்பாருங்க... அடடா, ராஜால்லாம் ரஹ்மானுக்குப் பின்னாடிதான். என்னோட தாத்தா கூட ரஹ்மான் மியூசிக்னா உயிர விட்டுடுவார். எண்பத்தஞ்சு வயசுல ரஹ்மான் கேக்குறார். ரஹ்மான் ம்யூசிக் ஃபர் ஆல் ஏஜ்."

எண்பத்தைந்து வயதில் ஏ ஆர் ரகுமான் இசையை லயித்துக்கொண்டு அமெரிக்க வாழ்க்கை. 'டேய் கடவுளே, ஏண்டா இந்த ஓரவஞ்சனை?!' எனக்கு ஏனோ தின்பண்டங்களை சாப்பிடப் பிடிக்கவில்லை. மிஸ்டர் ஐயர் பேசிக்கொண்டே எல்லவற்றையும் காலி செய்துவிட்டு, இரு கைகளையும் தேய்த்து தட்டிக்கொண்டார்.

"அட அதைவிடுங்க ஐய்யனார்... ரஜினி... யூவ்... வாட் அ க்ரேட் மேன்? எவர்கிரீன் ஆக்டர். ஒரு படம் விட்றதில்லை. வாஷிங்க்டன்ல டிக்கெட் கிடைக்கலைன்னு பிளைட் புடிச்சி லாஸ் ஏஞ்செல்ஸ்ல போய் எந்திரன் படம் பார்த்தேன். அவ்வளவு வெறி. நீங்க படம் பாக்கறதுண்டா?"

"கத்தார் தியேட்டர்ல போய் பார்த்தா கட்டுப்படியாவாது சார். டவுன்லோட் பண்ணிப் பார்த்துடுவோம்."

"உங்களுக்கு என்ன சம்பளம் ஐய்யனார்?"

"நாலு வருஷமா கத்தார்ல வேலை சார். இது வரைக்கும் வாங்கின கடன், போக வர செலவு, தங்கறது திங்கறது எல்லாம் போக, ஏதோ ஒரு எட்டு லட்சம் சேர்த்திருக்கேன் சார். அதுலதான் ரெண்டு அக்கா தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். எங்க அப்பன் வைத்திய செலவு பார்க்கணும். அடுத்த வருஷம் கான்ட்ராக்ட் முடியுது சார். ஒண்ணும் பெரிய சம்பாத்தியமில்லை... ஏதோ பொழப்பு ஓடுது சார்."

"அடப்பாவமே... இந்தியால அரசியல்வாதிங்க சரியில்லை ஐய்யனார். மொடா முழுங்கிங்க. எது கெடைச்சாலும் மென்னு முழுங்கிட்றானுங்க. ஆனா இந்த மன்மோகன் கொஞ்சம் பரவாயில்லை இல்லையா? மிஸ்டர். கிளீன் ஹேண்ட். அவருக்குத் தெரியாமத்தான் 2 ஜி நடந்து போச்சாம். வாஷிங்டன்னுக்கு அடிக்கடி வருவார். அவர்கூட கைகுலுக்கி போட்டோ எடுத்திருக்கேன். எல்லாம் சரியாகிடும் ஐய்யனார். 2020ல இந்தியா வல்லரசாகிடும் பாருங்களேன். கலாம் சொல்லியிருக்காரே! உங்களுக்கெல்லாம் விடிவுக்காலம் வந்துடும். நீங்கள்ளாம் பெரிய ஆளா ஆகிடுவீங்க. அப்புறம் நாங்க பிழைப்பு தேடி அமெரிக்காவிலேர்ந்து திரும்பவும் இந்தியா வந்து செட்டில் ஆகிடுவோம். அப்போ திரும்பவும் நாங்க இண்டியன்ஸ்...ஹா.. ஹா..." என்று கத்திச் சிரித்தார்.

பணிப்பெண் வந்து தட்டுகளைக் திரும்பக் கொண்டுபோனாள்.

ஐய்யர் லேப்டாப்பை திறந்து யாருக்கோ மெயில் அனுப்பிக்கொண்டிருந்தார்.

நினைத்தாலே கடுப்பாயிருக்கிறது. நான் ஊருக்குப் போகும்போது, 'டூட்டி-ஃப்ரீயில்' நண்பர்களுக்காக வாங்கிவந்த சரக்கை உள்ளே தள்ளிவிட்டு, ஏரிக்கரையில் காற்றாட உட்கார்ந்துகொண்டு என்னையே எகத்தாளம் பேசுவார்கள் :
'இங்க இல்லாத வேலையாடா...'
'ஏண்டா, நம்ம அரசாங்கக் காசில படிச்சுட்டு, மத்த நாட்டுல போய் அவங்களுக்கா உழைக்கிறீங்களே, உங்களுக்கெல்லாம் வெட்கமாயில்லையாடா?'
'இந்தியாவின் அவமானச்சின்னம் நீங்கதாண்டா...'
ஆனால் இங்கு கதை வேறு. கொத்தனார், கம்பி முடுக்குபவன், பிளம்பர், டிரைவர், இன்னும் சொல்லப்போனால் கணினி சாஃப்ட்வேர் எஞ்சினீயர்... எல்லமே கொத்தடிமைகள். கொட்டடியில் கட்டப்பட்டு, வேளாவேளைக்கு சாப்பாடு போட்டு, வேலை வாங்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாங்களும் எங்களூர் மாடுகளும் ஒன்றுதான். சில இடங்களில் சவுக்கடியும் உண்டாம். எதையும் தட்டிக் கேட்கமுடியாது. எஜமானர்களின் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. அரேபிய நாடுகள், சிங்கப்பூர், மலேசியா எல்லா நாடுகளிலும் இந்தக் கதைதான். இது வேறு உலகம். அடிமை உலகம்! இந்த உச்சத்தை அடைய வெறும் புத்து மாரியம்மன் ஐ.டி.ஐ சர்டிபிகேட் போதும். இருந்தும் நாடு விட்டு நாடு ஓடிய பச்சோந்திப் பட்டம் எங்களுக்கு! என் அறையில் இருக்கும் நண்பன் என்றோ எழுதிய கவிதை வரிகள் என் ஞாபகத்துக்குவந்தன : 

எந்தையுந் தாயும் 
ஏங்கித் தவிக்கையில்
தங்கையர் தமக்கையர்
தேம்பியழுகையில்
தம்பியர் அண்ணன்மார்
தவித்துக் கிடக்கையில்
வெம்பிப் பிரிந்து எம்
ஊர்விட்டே வந்துவிட்டோம்.


ஆனால், இந்த ஐய்யர் சொல்லுகிற கதை வேறுமாதிரி இருக்கிறதே? மாதம் ஆறு லட்சம், பங்களா, சொந்த பந்தங்களோடு வெளிநாடு வாசம், உலகம் சுற்றி, எண்பத்தைந்து வயதிலும் ஏ.ஆர். ரஹ்மான் கேட்டு.... இந்த உச்சத்தை அடைய ஐ.ஐ.டி வேணும். பூணூல் போட்டிருந்தா, அடிஷனல் குவாலிபிகேஷன்!! அமெரிக்கா, ஐரோப்பா... எதை வேணுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். நான் ரெசிடெண்ட் இண்டியன் - எத்தனை கவுரவமான பட்டம்?! மன்மோகன்கூட இவர்களிடம்தானே கைகுலுக்குகிறார்?

"மெரிட்லதான் ஐ.டி.ஐல ஜாய்ன் பண்ணினேன், மிஸ்டர் ஐய்யனார். ஒத்த பைசா செலவு கிடையாது. இந்த இன்ஸ்டிடியூட்ல எங்க பரம்பரைல நிரைய பேர் படிச்சுட்டு பாரின்ல செட்டில் ஆகிட்டாங்க. ஆக்ஸ்போர்டுல என் சித்தப்பா பையன் இருக்கான். ஜெனீவால என் அத்தை பொண்ணு இருக்கா. ஐ.ஐ.டி... வாட் அ க்ரேட் இன்ஸ்டிட்யூஷன்... இந்திய அரசாங்கத்துல உருப்படியா நடக்கறது இது ஒண்ணுதான். உலக அளவுல பெரிய பேர் இருக்கு. இந்தியா ஈஸ் கிரேட் ஆன் கிரியேடிங் ஜீனியஸ்!!" என்று கொட்டாவி விட்டார். "என்னன்னு தெரியலை, தூக்கம் கண்ணச் சொக்குது" என்று ஐய்யர் தூங்க ஆரம்பித்தார். சற்று நேரத்திலேயே குரட்டை சத்தம் கேட்டது.

நான் மிகவும் குழம்பிப்போயிருந்தேன். ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?

ஐய்யனார் ஐ.டி.ஐ - அய்யர் ஐ.ஐ.டி; அட... இவ்வளவு வித்தியாசங்களா?
கார்ப்பரேஷன் பள்ளிகளையும் அரசுதான் நடத்துகிறது; ஐ.ஐ.டிக்களையும் அரசுதான் நடத்துக்கிறது. இருந்தாலும் ஏனிந்த வேறுபாடு?
ஓ... கத்தாரின் கிரேன் ஆப்பரேட்டர் வேலைக்கும், நாசாவில் விஞ்ஞானி வேலை செய்வதற்கும் எத்தனை வேறுபாடுகள், மதிப்புகள், மரியாதைகள், சம்பாத்யங்கள்?

ஐய்யர் வாயைப் பிளந்துகொண்டு தலையை மல்லாத்தி தூங்கிக்கொண்டிருந்தார்.

சற்றே யோசித்துப் பார்த்ததில் அவரின் பச்சோந்தித்தனம் தெரிந்தது. அமெரிக்க வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இந்தியாவை சிலாகிப்பது, பாட்டன் பாட்டியைக்கூட விட்டுவைக்காமல் பிறந்த மண்ணைவிட்டு அகல்வது, இந்திய அரசாங்கத்தை இகழ்ந்துகொண்டே தான் படித்த அரசு நிறுவனத்தைப் புகழ்வது, இந்திய விமானப் பணிப்பெண்ணைக்கூட கேலி செய்வது... இந்தியா வல்லரசானவுடன் திரும்பவும் இந்தியாவுக்கே வந்துவிடப்போவதாகச் சொல்வது, இன்னும் ஒரு சிறிய விஷயத்தில் பார்க்கப்போனால்... தூக்கம் வராதென்று ஜன்னல் சீட்டு கேட்டு வாங்கிக்
கொண்டு, தூங்குவது...
இவர் சொன்னது என்ன பொய்யா அல்லது ஏமாற்றா? எவ்வளவு சுளுவாக நான் ஏமாற்றப்பட்டேன் அல்லது எவ்வளவு சுளுவாக இவர் ஏமாற்றுகிறார்?
இப்போது ஐய்யர் மீதிருந்த மதிப்பு முற்றிலும் காணாமல் போனது. நான் கத்தார் கிரேன் ஆப்பரேட்டராகவே இருக்க ஆசைப்பட்டேன். அது ஐய்யர் மீதிருந்த வெறுப்பிலா அல்லது அந்த வாழ்க்கை ஒரு எட்டாக்கனி என்பதாலா என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த முறை திரும்பி ஊருக்குப் போகும்போது, அதே ஏரிக்கரையில் உட்கார்ந்துகொண்டு, என் நண்பர்கள் எகத்தாளம் பேசினால், அவர்களுக்கு எடுத்துச் சொல்ல நிறைய விஷயங்களை இந்த ஐய்யர் எனக்கு சொல்லிக்கொடுத்துவிட்டார். 'வர்றேண்டா வெங்காயங்களா... வந்து பேசிக்கிறேன்!'


என் காலில் யாரோ சுரண்டுவது போலிருந்தது.
குனிந்து பார்த்தபோது அது ஒரு சுண்டெலி.
கீழே சிந்திய பாப்கார்னை இரு கைகளாலும் ஏந்தி பரபரவென்று கடித்துக்கொண்டிருந்தது. ஒண்டவந்த எலி. என்றைகாவது ஒரு நாள் துறத்தியடிக்கப்படலாம். ஐய்யர் இந்த எலியைப் பார்த்திருந்தால் இதற்கும் ஒரு கதை சொல்லியிருப்பார். அதை துறத்தி விட மனமில்லாமல்
அதையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவும்கூட என்னையே பார்த்துக்கொண்டு பாப்கார்னை பொறுக்கிக்கொண்டிருந்தது!
 பாவப்பட்ட இந்திய எலி... இல்லையில்லை... எலிகள்!!