My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

13.3.11

Life is like that...!

யாருக்கு தெய்வம்?
"யாவருக்கும்.
அது,
பொது."

யாது தெய்வம்?
"யாதிலும்!"
கற்பனை வேண்டாம்;
குறிப்பிடு.

"கோவிலில்."
செல்பேசி படம்பிடிக்க
கருவரைக் கற்பழிப்பு.
குருதிப் பீரிட
பலிப்பீடத்தருகிலேயே பலி.
தாய்மொழியில் தவமிருக்க
திருத்தல மறுப்பு.
கோயில் புகுந்த
நந்தனுக்கு நெருப்பு.
எனில், இருக்காது!

"சரி, காற்றில்?"
தேடினேன்.
ஸ். யு. வி காரின்
மோனாக்சைடும்;
ஏதுமறியாது திகைத்து,
ஏழை வெளியிட்ட
கார்பன்-டை-ஆக்சைடும்;
2 ஜி அலைக் கற்றையில்
பறந்த பணக்கட்டும்;
போபாலின் காற்றில்
பலியான பிணங்களும்;
ம்ஹூம்...,
காற்று சுத்தமில்லை.
அதனால் -
காற்றிலில்லை!

"நீரில்!"
அது மறுக்கப்பட்டதால்
தஞ்சை தின்ற எலிக்கறி;
அது உறிஞ்சப்பட்டதால்
ரிசாகிப்போன பிளாச்சிமடா;
அது அணைக்கப்பட்டதால்
குடியிருக்கத் தவிக்கும்
நர்மதைப் பழங்குடி;
அது கோடிடப்பட்டதால்
கொலையுண்ணும் மீனவன்;
பானையிலிருந்தது
பாட்டிலுக்குள் போனபின்
கடவுளாய் இருக்...


"சரி, சரி, நிறுத்து!
நிலத்தில்?"
தேடினேன்.
டெண்டர் எடுத்து,
தண்டகாரண்ய தாதுக்களில்
துழாவிய வேதாந்திகளுக்கு
டாலர்கள் கிடைக்கப்பெற்றது.
பசி நோயினால்
பரிதவித்த மக்களுக்கு
'ஆப்பரேஷன் கிரீ
ன் ஹண்ட்' செய்யப்பட்டது.
எல்லைச் சண்டைக்காக
கொல்லப்பட்ட காஷ்மீரிகள்;
எண்ணெய்ச் சண்டைக்காக
ஈவாகிப்போன ஈராக்கியர்கள்.
வாழ வழியற்று
வயிறுருகிபோன
சோமாலியச் சோனிகள்.
நிலத்தில் பணம்பறித்தும்,
நிலவில் பணம்விதைக்கும்
அமெரிக்கச் சோமாரிகள்.
நிலம் கொள்ளைபோனதால் -
நிலத்திலுமில்லை!

அடுத்து "வளி" எனாதே.
வளியும், அதிலுலாவு
அலாவுதீன் கோள்களும்,
அவை பின்னும் 'ஈ காமர்சும்'
விற்பனைக்கன்றி வேறென்ன?

"நெருப்பு" எனவுஞ் சுட்டாதே.
அது சாதி மதம் வளர
இடப்படும் எரு.
வரதட்சணைக்காக 'வரன்'கள்
எடுக்கும் கடைசியாயுதம்.
நாடுபிடிக் கூட்டத்தின்
துப்பாக்கிகளிலும் பீரங்கிகளிலும்
அடைபட்டிருக்கும் அடிமை.
நெருப்பும் சுடுகிறதே!

சொல், யாது தெய்வம்?
"................."

மௌனமா?
மௌனமெனில்,
மௌனத்திலும் தேடினேன்.

காற்றும், வானும், வளியும்,
நீரும், நெருப்பும்,
ஊனும், உயிரும்
கடவுளெனும் காகிதத்தில்,
சாதியெனும் 'வர்ணம்' பூசி,
மதமெனும் 'பார்கோடு'* இட்டு,      
'பாக்கெட்' செய்யப்பட்டிருந்தது!

*Bar codeகணினி மதிப்புக் குறியீடு

பொட்டலம் கிழிக்கப்பட்டு

கசக்கி எறியப்பட்டால் -
இதுவரை தேடியும்
கிடைக்காத கடவுள்
குப்பைத் தொட்டியில்
கிடப்பார் / கிடைப்பார்!



பொட்டலம் கிழிக்கப்பட்டால்...
காட்டாற்றைப் போல
சிதறிப்பாயும் நீர் -
யாவருக்கும்!
செஞ்சூரியனைப் போல
சுட்டு, ஒளிவீசி
குழம்பாயோடும் நெருப்பு -
யாவருக்கும்!
கொடியும் செடியும்
மரங்களும் விதைகளும்,
பூக்களும், பழங்களும் ;
இவை யாவருக்கும் -
மண்ணில் நெளியும் புழுவிலிருந்து
மானுடத்தில் வாழும் நமக்கு வரை!
வியர்வை விதைத்தால்
சோற்றையூட்டும் நிலம்.
நமையீன்ற தாய் -
நம் யாவருக்கும்!

இருப்பினும்
ஒரு நப்பாசையில்,
கடவுளைத் தெளிய
கட்டெறும்பில் தேடினேன்.
'கடவுளைப் பற்றிய அறிவேயில்லாமல்'
அதன் அன்றாட வாழ்க்கை
இப்படி
யாயிருந்தது :
உழை, பகிர்,
உண், உறை.
பிரமையோ...?
இல்லை.
முற்றும் உண்மை.
இதுதான் இயற்கையின்
வலிய விதி...!


பிரமையோ...?
ஒரேயொரு எறும்பு மட்டும்
முன்னங்கால்களைத் தூக்கி
தலையை மேலும் கீழுமாய்
அசைத்து அசைத்து,
முகத்தைத் துடைத்தவாறே,
என்னை நிமிர்ந்து பார்த்து
இறுமார்ந்து இப்படி
சொல்லிவிட்டுப் போனது
போல இருந்தது :
"Life is just like that..."

- புதிய பாமரன்...

1 comment:

விழியே பேசு... said...

//"நீரில்!"
அது மறுக்கப்பட்டதால்
தஞ்சை தின்ற எலிக்கறி;
அது எடுக்கப்பட்டதால்
தறிசாகிப்போன பிளாச்சிமடா;
அது அணைக்கப்பட்டதால்
குடியிருக்கத் தவிக்கும்
நர்மதைப் பழங்குடி;
அது கோடிடப்பட்டதால்
கொலையுண்ணும் மீனவன்;
பானையிலிருந்தது
பாட்டிலுக்குள் போனபின்
கடவுளாய் இருக்...//

நல்லா இருக்கு ....

Post a Comment