My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

16.4.11

ஆள்காட்டி விரலால் கண்ணைக் குத்திக்கொள்!



ஆள்காட்டி விரலெனும்
அற்புத விளக்கே,
ஈன்று புறந்தந்த
தாயைச் சுட்டுவாய்.
சந்தேகம் ஏதுமின்றி
தந்தையைச் சுட்டுவாய்.
தோள் சுமக்கும்
தோழனைச் சுட்டுவாய்,
ஆசிரியனைச் சுட்டுவாய்.

ஆறு கடல் நாடு சுற்றி
வானவில்லை வளைத்தெடுத்து
வார்த்தைகளால் கோட்டையிட்டு,
ஆதலினால் காதல் செய்து,
அருமைக் காதலைச் சுட்டுவாய்.
காதலீன்ற
மகவையும் சுட்டுவாய்.

சுடு நெருப்பைச் சுட்டி
சூதும் வாதும் சுட்டி
ஏதிது தீதிது
எனவெலா முணர்ந்து
யாதொன்றையும் புரிந்து
இது அது எனது உனது என
தரம் பார்த்து பிரித்துச் சுட்டி…

யாது எது
ஏது என
கேள்விக் கணைகள் மூட்டி
நான் எனது எனக்கே என
தத்தமது உடைமை காட்டி,

வானிது வளியிது
ஊனிது உயிரிது
அறிவிது ஆற்றலிதுவென
அறிவியல் சுட்டி
யாவும் உணர்ந்து நீ
நல்லன தீயன
வல்லன வலியன
இன்னா இனிய
இன்ன பிற
எத்தனையோ சுட்டுவாய்.
சரிதான்…
நீ ஒரு சுட்டியான
சுட்டிதான்.
நீ திசைகாட்டும் பக்கமே
கண்கள் பாயும்.
கால்கள் நடக்கும்.
இதயம் துடிக்கும்.
நீ சுட்டியவனைத்தும்
சரியெனப் படும்வரை.
உன் விரலில்
சுரணை இருக்கிறது எனச்
சொல்லப்படும் வரை.

ஆனால் இன்று…
திருடர்களுக்குள்
உயர்ந்தவனும்
தாழ்ந்தவனும் உண்டென
ஒருவனைச் சுட்டினாய்.
நீ
வாக்கிட்ட குற்றத்துக்காக
உன் முகத்தில்
ஒரழியாக் கரும்புள்ளி.
உன் கரும்புள்ளிச் சுட்டல்
சாகசங்கள் செய்யும்.
உன் விரலால் உன் கண்கள்
குத்தப்பட்டு குருடாக்கப்படுவாய்.
பிறகு தான் காட்சிகள் மாறும்.

மலையைப் பிடுங்கி
காது குடைந்துகொள்வார்கள்
தண்டகாரண்ய முதலாளிகள்.
நாட்டையே
தோப்புக்கரணம் போடவைப்பார்கள்
அமெரிக்கப் பொருளாதாரவாதிகள்.
ஜன நாயகத்தையே
நிர்ணயிப்பார்கள்
அம்பானிக் கும்பல்கள்.
அட ஆள்காட்டி விரலே…
அவர்களை எங்களுக்கு
ஆள்காட்ட மறுத்து
அவர்களின்
தாள் படிந்தும் வணங்குகிறாய்.

இன்று நீ சுட்டியாதால்
உனக்கு கிடக்கப்போகும்
இலவசக் கோவணங்கள்.
நாளை உன் சோற்றில் மண்.
ஊழலையும் சுரண்டலையும்
கண்ணால் கண்டு
சொன்னபோதும்
சுட்ட மறுத்த விரலே…

உணவைத் திருடி
நீரைத் திருடி,
நிலத்தைத் சுருட்டி
உன் உருவையே
குலைத்துவிட்ட உண்மைகளை
நீ தெரிந்தும்
சுட்ட மறுப்பதேன்?

உண்மைகள் தெரிந்தும்
சுட்ட மறுப்பதால்
இனி நீ
சுட்டும் விரலல்ல…
மூளையிலிருந்து
நரம்புகள் துண்டிக்கப்பட்டு
பக்கவாதம் பீடித்த விரல்.
அறியாமை எனும்
புற்றுனோய் பிடித்த விரல்.
சாதி மத பேதப் புண்களால்
கடவுளெனும் சீழ் கோத்து
சாகக் கிடக்கும் விரல்.

கரங்களால் உழைப்பைத் தந்து
வியர்வையால் உலகம் காக்கும்
மற்ற விரல்களோடு
சேர்ந்து பிழைத்துக்கொள்.
அவ்வுழைப்பின் வலி
உனக்கும் சுரணை கொடுக்கும்!

3 comments:

ஆனந்தி.. said...

செம சூடு...

ஆனந்தி.. said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன்..

http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_4612.html

புதிய பாமரன் said...

உமது ஊக்குவிப்புக்கள்
இனி வரும் கவிதைத் தொகுப்பில்
இன்னும் இரண்டு வரிகளை
சேர்த்தெழுதச் செய்யும்.

- புதிய பாமரன்.

Post a Comment