My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

25.4.11

பிழை (சாய்பாபாவில் ஒரு கண்ணோட்டம்)




பிழை :
துப்பப்படக் காத்திருந்த
‘தொண்டை லிங்கம்’
குறுக்கால் அடைத்ததாவென்று
ஒரேயொரு முறையேனும்
வாயைப்பிளந்து பார்த்துவிட்டு,
பேஸ்மேக்கரின் மாஸ்க்கை
மூஞ்சியில் அப்பியிருக்கலாம்.
மருத்துவப் பிழை!
காலில் கிச்சுக்கிச்சு மூட்டி
ஒரேயொரு சிட்டிக்கை
விபூதியையாவது
விரல் வழியாய் வரவழைத்து
நெற்றியில் பட்டை போட்டு,
உயிர் பிழைத்தலுக்கான
உச்சக்கட்ட பரிசோதனையை
உத்தேசமாய்ப் பார்த்திருக்கலாம்.
சீடர்களின் பிழை!
இன்னும்
கூடக் கொஞ்சம் போட்டு
டொனேஷனை
டோர் டெலிவரி செய்துவிடுவதாக
கூவோ கூவென்று
கூவியிருந்தால்
போன உயிர் திரும்பியிருக்கலாம்.
பேஸ்மேக்கர் எதற்கு?
பக்தர்களின் பிழை!
கடவுளின் உயிரை
பிழைக்க வைக்கத் தவறிய
பேஸ்மேக்கர் – ஒரு
விஞ்ஞானப் பிழை.
தந்திரங்களில் வல்ல
நல் மேய்ப்பர்
நரியாரின் மரணம்.
ஆடுகள் தங்கள் இறைச்சியை
யாரிடம் சமர்ப்பிப்பது என
துக்கம் தாங்காமல்
தவித்துத் திரிகின்றன.
ஆடுகளின் பிழை!
மறித்துவிட்டார் பாபா;
பாவப்பட்ட பூவுலகில்
பணத்தைக் கொட்டும்
பல கோடித் தொண்டர்களை
பரிதவிக்க விட்டுவிட்டு!
கலங்காதிரும் கண்மணிகாள்;
பல கோடி சொத்துக்களை
பராமரிக்கும் நபராக,
மறித்துப்போன பாபா
உயிர்த்தெழுவார் ஒரு வாரிசாக.
அதுவும்
பிணம் புதைக்கும் முன்னரே.
வாரிசுப் போட்டியில்
தோல்வியைத் தழுவும்
கால் வாரப்பட்ட
வாரிசு போன்ற எச்சங்கள்;
இலவு காத்த
கிளிகளின் பிழை!
பெரியாரைப் பேணிய
பெரும் பெருந்தலைகள்;
தம் சொந்த நலம்கருதி
பேணிய பாவத்துக்காக
தவமாய்த் தவமிருந்து,
விபூதி வாசனையில்
பரிகாரம் தேடின.
பாபா பின்னால் ஓடின.
அடச் சீ… அடத் தூ…
அன்றே
அந்தப் பெரியார்க் கிழம்
‘கடவுள் இல்லை’
கொள்கைக்காக
விபூதியடித்த சத்தியத்தை
வாங்கி வைத்திருந்தால்
இந்த விபரீதம் நடந்திருக்குமா?
பெரியாரின் பிழை!
கொடூர முறைகளால்
கொலையுண்டு மாண்ட
மீனவர்களின் மரணத்திலும்
மனமுருகி அனுதாபப்படாத
ராஜ குல துரக பதாதிகளும்,
பிரதமரும், மந்திரிகளும்,
ராஜ தந்திரிகளும்,
எடுபிடிகளும், யாவரும்,
பாபாவின் மரணத்தின்
பாதிப்பால் புடை சூழ
ஆத்மார்த்த உணர்வோடும்,
மனிதாபிமான கதறாலோடும்,
வயிற்றிலத்துக்கொண்டே
சாவுக்குக் கோயிலுக்கு
வந்து சேர்ந்துவிட்டார்கள்.
மரணத்துக்காக வலைவீசும்
மீனவர்களின் மரணத்தில்
அனுதாபம் கோரப்பட்டால்,
குறைந்தபட்சமாக மீனவர்களுக்கு
லுங்கியை களைந்து
காவியங்கி அணிந்து கொள்ளும்
அடிப்படை அறிவையாவது
கற்றுக்கொடுங்கள்.
அற்பர்களே,
அது
மீனவர்களின் பிழை!
மாற்றான் தோட்டத்து
மல்லிகையின்
சாவுக்கும் கருமாதிக்கும்
கல்யாண வைபோகத்துக்கும்
போய்த் தொலைத்துவைத்தால்,
பத்தே நிமிடத்தில்
பதற்றமில்லாமல்,
சீட்டு கிழிக்கப்பட்டு
தொலைக்கப்பட்டுவிடுவார்கள்
என்பதுதான்
தமிழகக் கட்சிகளின்
தாரக மந்திரக் கொள்கை.
சரி எனும் ஆளுங்க்கட்சி;
தவறெனும் எதிர்க்கட்சி.
கொள்கை முரண்பாடு.
முரண்பாடுகளாலேயே
மூப்புக்கண்டு தள்ளாடும்
தேசியக் கட்சிகளின் கொள்கை.
இதோ,
கொள்கை மறந்து,
கோபம் தொலைத்து,
கண்ணீரும் கம்பலையுமாக,
சாவு வீட்டில் -
திமுகவும், அதிமுகவும்,
தேமுதிகவும்,
தடாலடிக் கட்சிகளும்,
மத சார்பற்ற காங்கிரசும்
மதம் சார்ந்த பிஜெபியும்…
விபூதி வாசத்தில்
பேயடித்தாற்போல
பிதற்றி,
ஒரே வரிசையில் உட்கார்ந்து,
கைகோர்த்து கும்பலிட்டு,
ஒப்பாரி வைக்கும்
கண்காட்சி காண
கண் கோடி கோடி வேண்டும்.
கட்சிகளின் ஒற்றுமையை
தவறாக யூகப்படுத்தியதால்
அது ஒரு
ஊடகப் பிழை!
இனி,
என் தாய்த் திரு நாடு,
துக்கம் தொண்டையடைக்க
எழுந்து நின்று
ஏழு நாள் துக்கம் கொள்ளும்.
அரைக்கம்பக் கொடி பறக்கும்.
தூர்தர்ஷன் பீப்பீ பாடும்.
வெடி குண்டு வெடித்து
வீர வணக்கம் செய்யும்.
அந்தப் பேய் அல்லது
பூத உடல் மீது
தேசியக்கொடி போர்த்தப்படும்.
இந்தத் துக்க வரிசையில்
எது குறைந்தாலும்
அது
தேசியப் பிழை!
பி.கு:
தூக்கலான துக்கத்தால்,
தப்பித் தவறி,
தொலைக்காட்சித் தொடர்கள்
துண்டிக்கப்படுவதை
தவிர்த்துக் கொள்ளுங்கள்!
ஏனெனில்,
பெண்களின் சாபம் பொல்லதது.
சபிக்கப்பட்டுவிட்டால்,
பாபா சொர்கம் போவதும்
நாடு வல்லரசாவதும்
பிழையாகிப் போகும்!

1 comment:

அரசூரான் said...

கவிதையும்,
அதிலுள்ள கருத்தும் அருமை.

Post a Comment