My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

10.12.11

பழிவாங்கும் நாளைக் குறி


எருதுகளை ஓட்டிவந்து
ஏர்க்கலப்பை பூட்டிவந்து
கழனிக்காடு உழுதாலும்
கதிர்நெல்லு அறுத்தாலும்

உழக்கு நெல்லு உருப்படியாய்
வரவில்லை வீடு - அட
உடல் வளைந்தும்தான் நமக்கு
உடுக்கத் துணி ஏது?

-

விதைத்ததுதான் விளைந்தாலும்
விளைந்ததெல்லாம் அறுத்தாலும்
கழுதைபோல பிழைப்பாகிப்போச்சு
கால்வயிறே பசியாறலாச்சு

கையும்காலும் உழைத்தாலும்
கிடைக்கவில்லை சோறு - பல
காணி நிலம் விளைந்தாலும்
திருடுவது யாரு?

-

எஃகையும் இரும்படித்தோம்
இயந்திரமும் பல பிடித்தோம்
அந்தரத்தில் ஆடித் தொங்கி
ஆயிரம் பொருட்கள் செய்தும்

தருத்திரப்பேய் தினம் பிடித்து
தாக்குதடா நம்மை - புகை
தணல்தணிந்த அடுப்பினிலே
தூங்குதடா பூனை.

-

தெய்வத்தைத் தொழுதேற்றி
திருப்புகழைப் படித்தாலும்
கருவரைக்குள் நுழைந்து நின்றால்
கன்னித்தமிழ் தீட்டென்று

சாமிவந்து நம் வாழ்வில்
சபித்துவிட்ட சாபம் - அதை
கும்பிட்டுப் பார்த்தும் நமக்கு
கொடுத்ததென்ன லாபம்?

-

சொட்டும் வியர்வை கரிக்க
சூரியனும் சுட்டெரிக்க
பகலெல்லாம் உழைத்த பணம்
பசியாறப் போதவில்லை

கூலி வாங்கியும் குடும்பம்
கும்பி காயும் சோகம் - ஒரு
போக்கிடமும் தெரியாமல்
பொங்கிவரும் கோபம்

-

குருதியெல்லாம் கொப்புளிக்க
கோபத்தில் கொந்தளிக்க
காய்ந்துபோன வயிறெல்லாம்
காரணங்கள் கேட்டுவிட

தினவெடுக்கும் தோட்களெல்லாம்
தேடுதடா ஆளை - அவன்
குலையறுக்க தலையறுக்க
குறிக்குதடா நாளை!

1 comment:

ம.தி.சுதா said...

ஃஃஃஃகையும்காலும் உழைத்தாலும்
கிடைக்கவில்லை சோறு - பல
காணி நிலம் விளைந்தாலும்
திருடுவது யாரு?ஃஃஃஃ

ஒவ்வொரு வரியிலும் வியர்வை ஒட்டியிருக்கிறது...

அருமை..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

Post a Comment